முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.084.திருக்கடனாகைக்காரோணம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.084.திருக்கடனாகைக்காரோணம்
1.084.திருக்கடனாகைக்காரோணம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
904 |
புனையும் விரிகொன்றைக் கடவுள்
புனல்பாய நனையுஞ் சடைமேலோர் நகுவெண்டலைசூடி வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் கனையுங் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.1 |
விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலை மாலையைச் சூடி, வினை நீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.
905 |
பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான் மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக் கண்ணார் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.2 |
பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப் பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளி யுள்ளான்.
906 |
பாரோர் தொழவிண்ணோர் பணியம்
மதின்மூன்றும் ஆரா ரழலூட்டி யடியார்க் கருள்செய்தான் தேரார் விழவோவாச் செல்வன் றிரைசூழ்ந்த காரார் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.3 |
மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
907 |
மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல் அழிசூழ் புனலேற்ற வண்ணல் லணியாய பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக் கழிசூழ் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.4 |
பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகை அழிக்க எண்ணி வந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழி பாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
908 |
ஆணும் பெண்ணுமா யடியார்க்
கருணல்கிச் சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான் பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணுங் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.5 |
ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள் புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான் அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
909 |
ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல் ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக் கானற் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.6 |
பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
910 |
அரையா ரழனாக மக்கோ டசைத்திட்டு விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல் வரையார் வனபோல வளரும் வங்கங்கள் கரையார் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.7 |
இடையில் அழல்போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
911 |
வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோள் இலங்கைக் கிறைவாட வடர்த்தங் கருள்செய்தான் பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக் கலங்கொள் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.8 |
மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
912 |
திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப் பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச் செருமால் விடையூருஞ் செல்வன் றிரைசூழ்ந்த கருமால் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.9 |
திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறை மதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி யுள்ளான்.
913 |
நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார்
புறங்கூற அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான் பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே. |
1.084.10 |
நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
914 |
கரையார் கடனாகைக் காரோ ணம்மேய நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன் உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம் கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே. |
1.084.11 |
இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடனாகைக்காரோணம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கடனாகைக், ணத்தானே, நாகைக், காரோணத்தில், விளங்கும், எழுந்தருளியுள்ளான், சிவபெருமான், பணிந்தேத்தக், பணிந்து, பொருந்திய, சிவபிரான், அடியவர்கள், கடற்கரையை, செல்வன், கடற்கரையில், மேலும், அடுத்துள்ள, என்னும், கரையில், பத்தர், சூழ்ந்த, கடலின், கரையார், வாழும், வழிபாடு, நாகைக்காரோணத்தில், தலைமையாளனாகிய, கொண்டு, றிரைசூழ்ந்த, பெம்மான், பெருமானும், எழுந்தருளிய, மாலையைப், புனையும், திருமுறை, திருச்சிற்றம்பலம், எழுந்தருளி, யுள்ளான், செய்து, இடைவிடாது, அடியவர்க்கு, திருக்கடனாகைக்காரோணம், யடியார்க், கருள்செய்தான், நிரம்பிய