முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.087.திருவடுகூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.087.திருவடுகூர்
1.087.திருவடுகூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வடுகேசுவரர்.
தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.
937 |
சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. |
1.087.1 |
சுடும் தன்மை மிக்க தீப மாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.
938 |
பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக் கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம் ஆலும் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.2 |
பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, எம்புமாலை ஆகியவற்றை ஒளி மல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும். வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.
939 |
சூடு மிளந்திங்கட் சுடர்பொற்
சடைதன்மேல் ஓடுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு பாடும் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.3 |
ஒளி பொருந்திய பொன் போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச் சூடி, மதம் கொண்டு தன்பால் ஓடிவந்த யானையை, உமையம்மை அஞ்சக் கொன்று, அதன் தோலைப் போர்த்து, அழகு பொருந்திய வரி வண்டுகள் இதழ்களோடு கூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடும் வடுகூரில், அடிகள் நடனம் ஆடுவர்.
940 |
துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் பவரும் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.4 |
செந்நிறமும், மதிலும் செறிந்த அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள் அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார், காவல் பொருந்திய முலையாராகிய பெண் கொடிகள் முல்லைநிலத்தில் கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும் வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.
941 |
துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் தணியா வழனாகந் தரியா வகைவைத்தார் பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த அணியார் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.5 |
துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.
942 |
தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக் கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.6 |
சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்றவளாகிய உமையம்மையோடு கூடி, விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக்கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி, வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார்.
943 |
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார் கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட அடியர் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.7 |
வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறை மதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.
944 |
பிறையு நெடுநீரும் பிரியா
முடியினார் மறையும் பலபாடி மயானத் துறைவாரும் பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங் கறையும் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.8 |
அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள், இளம் பிறை, பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர் வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.
945 |
சந்தம் மலர்வேய்ந்த சடையின்
னிடைவிம்மு கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை வந்து நயந்தெம்மை நன்று மருள்செய்வார் அந்தண் வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.9 |
அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறை மதி வெளியிடும் கிரணங்களை உடையமாலை நேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.
946 |
திருமா லடிவீழத் திசைநான் முகனாய பெருமா னுணர்கில்லாப்பெருமா னெடுமுடிசேர் செருமால் விடையூருஞ் செம்மான் றிசைவில்லா அருமா வடுகூரி லாடும் மடிகளே. |
1.087.10 |
எட்டுத் திசைகளிலும் ஒளி பரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள். திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத் தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்த நிறத்தினர்.
947 |
படிநோன் பவையாவர் பழியில்
புகழான கடிநா ணிகழ் சோலை கமழும் வடுகூரைப் படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே. |
1.087.11 |
இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும், குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும் சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத் தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார், திருவடிப்பேறு பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவடுகூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வடுகூரில், வடுகூரி, லாடும், மடிகளே, அடிகள், பொருந்திய, வண்டுகள், இறைவர், ஆகியவற்றை, ஆடியருள்கின்றார், இடையிலே, பலரும், வளரும், விளங்கும், கமழும், உடையவர், திருமுறை, திருச்சிற்றம்பலம், திருவடுகூர், வடுகூர், விடையை, விரும்பி, விடையூர்வர், பாடும், அடிகளாகிய, ஊர்ந்து