திருடன் மகன் திருடன்
4
அம்மாவும் சின்ன மாமாவும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப்
புறப்படும் வரையில் பாலன் காத்துக் கொண்டிருந்தான். ஒற்றை மாட்டு வண்டி
வீட்டு வாசலிலிருந்து நகர்ந்ததும், சட்டென்று உள்ளே ஓடினான். தகரப் பெட்டியைத்
திறந்து அதற்குள் வைத்திருந்த பணத்தை எடுத்துத் தன்னுடைய டிராயர் (கால்
சட்டை) பைக்குள் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டான். பட்டாசுகளையும் மத்தாப்புகளையும்
ஒரு துணியில் கட்டிக் கொண்டான். வீட்டின் வலது பக்கத்திலிருந்த வாசற்படி
வழியாக யாரும் கவனியாத போது வெளியே கிளம்பினான். ஓட்டமும் நடையுமாகச்
சென்று, பட்டாசு மத்தாப்பு மார்க்கெட்டை அடைந்தான்.
"தம்பி! என்ன வேணும்" என்று கடைக்காரன் கேட்டான்.
"எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னிடம் உள்ள பட்டாசுகளையும், மத்தாப்பு வாணங்களையும் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க முடியுமா?" என்று பாலன் கேட்டான்.
கடைக்காரனுக்கு கொஞ்சம் அதிசயமாய் இருந்தது. ஆயினும் தீபாவளிக்கு முதல் நாளாகையால் பட்டாசும் மத்தாப்பும் அசாத்திய கிராக்கியான விலைக்கு விற்றது. ஆகையால் பேரம் பேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தான் கடைக்காரன்.
பணத்தைப் பெற்றுக் கொண்டானோ இல்லையோ பாலன் ஒரே ஓட்டமாக ஸ்டேஷனை நோக்கி ஓடினான். பத்து நிமிஷத்தில் ஸ்டேஷனை அடைந்தான்.
ரெயில் வண்டி பிளாட்பாரத்தில் வந்து நின்று கொண்டிருந்தது. திறந்திருந்த 'கேட்' வழியாகப் பாலன் பாய்ந்தோடினான். டிக்கெட் கலெக்டரால் அவனைத் தடுக்க முடியவில்லை.
ரெயில் புறப்படுகிற சமயம். ஊதியும் ஆயிற்று. ஜானகி அம்மாள் வண்டிக்குள்ளிருந்து தலையை வெளியில் நீட்டித் தன் தம்பியிடம் "குழந்தையைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிக் கொண்டிருந்தது, பாலன் காதில் விழுந்தது. பாலன் ஒரே ஓட்டமாக அந்த வண்டியை நோக்கி ஓடினான். நல்ல வேளையாக வண்டிக் கதவு திறந்திருந்தது. பாய்ந்து உள்ளே ஏறித் தடால் என்று கீழே விழுந்தான். விழுந்ததைச் சிறிதும் பொருட்படுத்தாமல் "அம்மா! நான் வந்துவிட்டேன்!" என்றான்.
"அடே! என் கண்ணே!" என்று ஜானகி அவனை அலறி எடுத்தாள்.
பாலன் அவளைத் திமிறிக் கொண்டு ஜன்னல் ஓரம் வந்து சின்ன மாமா கைலாசத்தைப் பார்த்து, "நான் தீபாவளிக்கு ஊருக்குப் போகிறேன் மாமா, எல்லோரிடமும் சொல்லி விடுங்கள்" என்றான்.
கைலாசம் அதிசயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரெயில் நகர்ந்தது.
"ஏண்டா பாலு! 'மாமா வீட்டில் சமர்த்தாயிருக்கிறேன்' என்று சொன்னாயே! ஏண்டா இப்படி ஓடி வந்தாய்?" என்று கேட்டாள் ஜானகி. அவன் வந்ததில் அவளுக்குச் சந்தோஷந்தான் என்று குரலிலிருந்தே தெரிந்தது.
"தீபாவளியில் உங்களோடயெல்லாம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதனால் தான் வந்துவிட்டேன்."
பிறகு எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "ஐயையோ! அடடா!" என்று கூச்சல் போட்டான்.
"என்னடா பாலு!" என்று கேட்டாள் ஜானகி.
"அவசரத்தில் மறந்து போய் மாமா வாங்கித் தந்த பட்டாசு மத்தாப்பு ஒன்றையும் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டேன். ரெயில்காரனைக் கொஞ்சம் திரும்பிப் போகச் சொல்லு அம்மா! எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான்.
ஜானகி புன்னகையுடன் "நல்ல வேடிக்கை! ரெயில் திரும்புமா?" என்றாள்.
"திரும்பாதா? போனால் போகட்டும்! நான் சீனுவுக்கும், அம்புலுவுக்கும் கொடுத்த வாணங்களைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அதுவே போதும்!" என்றான் பாலன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருடன் மகன் திருடன் - Thirudan Magan Thirudan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பாலன், ஜானகி, வந்து, என்றான், மாமா, ரெயில், கொண்டு, ஓடினான், மத்தாப்பு, நான், எடுத்துக்