திருடன் மகன் திருடன்
2
"ஏண்டா குழந்தை, என்னடா செய்கிறாய்? உட்கார்ந்து
கொண்டே தூங்குகிறாயா என்ன? ராத்திரியில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கிறாய்
போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பாலனின் தாய் அவன் அருகில் வந்தாள்.
பாலன் தலை நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டான்.
"ஏண்டா, அழுகிறாயா என்ன?" என்று பதைபதைப்புடன் ஜானகி அருகில் வந்து உட்கார்ந்தாள்!
"இல்லை, அம்மா, அழவும் இல்லை, ஒன்றும் இல்லை!" என்றான் பாலன்.
"சீ! பொய் சொல்லாதே! அழுது, அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கிறதேடா!" என்றாள் ஜானகி.
"வீங்கவும் இல்லை, ஒன்றுமில்லை" என்றான் பாலன்.
"ஏண்டா அழுதாய்? யாராவது ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டாள் ஜானகி.
"ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தான் தீபாவளிக்கு ஊருக்கு வர வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. அம்புலுவையும் சீனுவையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நானும் உன்னுடன் வரட்டுமா?" என்று கேட்டான்.
"வேண்டாம், வேண்டாம்! அசடு மாதிரி பேசாதே. நம்ம வீட்டில் இந்த வருஷம் தீபாவளி கிடையாது! இங்கே இருந்தால் மாமா உனக்குப் புது வேஷ்டி, புதுச் சொக்காய் எல்லாம் வாங்கித் தருவார்!" என்றாள் ஜானகி.
"அம்புலுவுக்கும் சீனுவுக்கும்?" என்று பாலன் கேட்டான்.
"அவர்களுக்கு என்ன? பச்சைக் குழந்தைகள்! அப்பா அடுத்த வருஷம் வெளியில் வந்தால் வாங்கிக் கொடுக்கட்டும்" என்றாள் ஜானகி.
பாலன் சற்று நேரம் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்பா எப்படி அம்மா இருக்கிறார்? எப்போது வெளியில் வருவார்?"
"நன்றாய்த்தான் இருக்கிறார், அவருக்கு என்ன? 'பி' கிளாஸில் வைத்திருக்கிறார்களாம்! மூன்று மாத காலந்தானே ஆயிற்று! விடுதலைக்கு இன்னும் ஒன்பது மாதம் இருக்கிறது!" என்றாள் ஜானகி.
"உன் பேரில் ரொம்பக் கோபமாய் இருக்கிறாரா?" என்று கேட்டான் பாலன்.
"என் பேரில் எதற்காகக் கோபமாயிருக்கிறார்? நானா இப்படியெல்லாம் கெட்டலையச் சொன்னேன்?" என்றாள் ஜானகி.
பிறகு, "நான் ரெயிலுக்குக் கிளம்ப வேண்டும். நீ சமர்த்தாய் இருக்கிறாயா? யாராவது ஏதாவது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தெரியுமா? பட்டாசுக் கட்டு, மத்தாப்பு எல்லாம் நிறைய இருக்கிறது என்று சொன்னாயே! சீனுவுக்கும் அம்புலுவுக்கும் கொஞ்சம் கொடேன்" என்றாள்.
"ஆகட்டும், அம்மா தருகிறேன்" என்றான் பாலன். பிறகு நீண்ட யோசனை செய்து தயங்கித் தயங்கிப் பெட்டியிலிருந்து ஒரு பட்டாசுக் கட்டை எடுத்தான். எடுத்ததை வைத்துவிட்டு, இன்னொன்றை எடுத்தான். கடைசியில் இரண்டு பட்டாசுக் கட்டும், இரண்டு படபடாவும், இரண்டு மத்தாப்புப் பெட்டியும் எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.
"ஏண்டா பெட்டி நிறைய வைத்திருக்கிறாய், இரண்டே இரண்டு கொடுக்கிறாயே?" என்றாள் ஜானகி.
"இந்த வீட்டில் துரை, சங்கரன் எல்லாரும் நிறைய வாணம் விடுவார்கள். அம்மா! அவர்களைப் போல் நானும் வாணம் விட வேண்டும் அல்லவா?" என்றான் பாலன்.
"அதுவும் சரிதான். நீயே இவற்றையும் வைத்துக் கொள். சீனுவுக்கும் அம்புலுவுக்கும் பட்டாசுக் கட்டு சுடக் கூடத் தெரியாது!" என்றாள் ஜானகி.
"எல்லாம் தெரியும், அம்மா! கட்டாயம் எடுத்துக் கொண்டு போ. நான் கொடுத்தேன் என்று சொல்லு!" என்று பாலன் கூறி, இன்னொரு மத்தாப்புப் பெட்டி அதிகமாகவே எடுத்துக் கொடுத்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருடன் மகன் திருடன் - Thirudan Magan Thirudan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பாலன், ஜானகி, என்றாள், அம்மா, இருக்கிறது, பட்டாசுக், ஏண்டா, இரண்டு, வேண்டும், என்றான், என்ன, இல்லை, நிறைய, அம்புலுவுக்கும், கேட்டான், எல்லாம், சீனுவுக்கும்