திருடன் மகன் திருடன்
1
பழைய தகரப் பெட்டிக்குள் வைத்திருந்த
பட்டாசுக் கட்டுகளையும் மத்தாப்புப் பெட்டிகளையும் பாலன் எண்ணி வைத்து
ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த மாதிரி அவன் எண்ணி வைத்து
ஒழுங்கு படுத்தியது, இது முப்பத்திரண்டாவது முறை. பட்டாசு, மத்தாப்பு
முதலியவற்றை தொடுவதிலேயே அவனுக்கு ஓர் ஆனந்தம். பெட்டிக்குள் ஓரிடத்திலிருந்து
இன்னோரிடத்தில் நகர்த்தி வைத்து ஒழுங்குபடுத்துவதிலே அளவில்லாத சந்தோஷம்.
தம்பி சீனுவுக்கும், தங்கை அம்புலுவுக்கும் எது எதைக் கொடுக்கலாம் என்பது
பற்றிப் பிரமாதமான யோசனை. "சீனுவுக்குப் படபடா, அம்புலுவுக்குப் புஸ்வானம்!"
என்று அவனுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டது.
"பெரிய மாமா வந்துவிட்டார்!" என்று சொல்லிக் கொண்டே, பாலன் தகரப் பெட்டியை அவசர அவசரமாகப் பூட்டிக் கொண்டு விழுந்தடித்து வாசற் பக்கம் ஓடினான். குதிரை வண்டியிலிருந்து கறுப்புக் கோட்டும், சரிகைத் தலைப்பாகையும், கையில் ஓர் அட்டைப் பெட்டியுமாகப் பெரிய மாமா இறங்கிக் கொண்டிருந்தார். பெரிய மாமா கல்யாணசுந்தரம், அந்த ஊரில் பிரபல வக்கீல், கோர்ட்டுக்குப் போய் விட்டு அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
பாலனுடைய கவனமெல்லாம் பெரிய மாமாவின் கையில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்தது. அவர் வண்டியிலிருந்து இறங்கியதும், இறங்காததுமாகப் பாலன், "மாமா! ஏரோபிளேன் வாணம் வாங்கிக் கொண்டு வந்தேளா?" என்று கேட்டான்.
பெரிய மாமா புன்னகையுடன் வீட்டு வாசற்படிகளில் ஏறினார்.
பெரிய மாமாவின் பிள்ளைகளான துரையும், சங்கரனும் வீட்டுக்குள்ளேயிருந்து அச்சமயம் வெளியே வந்தார்கள். பாலனுடைய கேள்வி அவர்களுடைய காதில் விழுந்தது. துரை சங்கரனிடம் மெல்லிய குரலில், "பையனுக்கு என்ன பரபரப்பு?" என்றான். அதுவும் பாலனுடைய காதில் விழுந்தது. இதனால் பாலன் உற்சாகம் குன்றாமல் பெரிய மாமாவைப் பார்த்துக் கையை நீட்டினான்.
"அவசரப்படாதே, உள்ளே வா! தருகிறேன்!" என்றார் மாமா. பிறகு, "உன் அம்மாவும் சின்ன மாமாவும் வந்து விட்டார்களா?" என்று கேட்டார். "இல்லை!" என்றான் பாலன்.
கல்யாணசுந்தரம் ஆபீஸ் அறைக்குச் சென்று மேஜை மீது அட்டைப் பெட்டியை வைத்தார். அதற்குள்ளே இருந்த ஏரோபிளேன் வாணங்களை எடுத்துப் பாலனுடைய கையில் இரண்டு கொடுத்தார். மற்றவற்றைத் துரையிடம் கொடுத்து, 'எடுத்துக் கொண்டு போங்கள்!' என்றார்.
பாலன் ஏரோபிளேன் வாணங்களை வாங்கிக் கொண்டதும் அங்கிருந்து குதித்தோடினான்.
துரையும், சங்கரனும் அப்பாவின் ஆபீஸ் அறையிலேயே நின்றார்கள். பாலனை விட அவர்கள் வயசில் மூத்தவர்கள். துரை சங்கரனைப் பார்த்தான். சங்கரன் தகப்பனாரைப் பார்த்து "அப்பா, பாலன் திருடுகிறான் என்று தோன்றுகிறது!" என்றான்.
அட்வகேட் கல்யாணசுந்தரம் அவனைக் கோபமாகப் பார்த்தார். அப்போது துரை, "ஆமாம், அப்பா! நேற்றைக்கு அவன் தகரப் பெட்டியைத் திறந்தபோது தற்செயலாகப் பார்த்தேன், நிறையப் பணம் வைத்திருக்கிறான்!" என்றான்.
சங்கரன், "அவனுக்கு அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்திருக்கும்? திருடித்தானே இருக்க வேண்டும்? அம்மா கூட அடிக்கடி 'நாலணாவைக் காணோம். எட்டணாவைக் காணோம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் தான் எடுத்திருக்க வேண்டும்" என்றான்.
துரை, "அப்பாவின் திருட்டுக் குணம், பையனுக்கும் உண்டு போலிருக்கிறது!" என்றான்.
"சீ! பேசாதிரு!" என்று அதட்டினார் கல்யாணசுந்தரம். அவருடைய மனம் புண்ணாயிற்று என்று முகத்திலிருந்து தெரிந்தது.
பிறகு கொஞ்சம் சாவதானமான குரலில் "துரை! சங்கர்! நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது. பாலனுடைய அப்பா, அம்மாவுக்கு இப்போது கஷ்ட காலம். ஏற்கனவே அந்தப் பையன் மனம் நொந்திருக்கிறான். அவனைப் பற்றி நீங்கள் இப்படி பேசுவது காதில் விழுந்தால், அவன் மனசு என்ன பாடுபடும்? யாரைப் பற்றியும் அநாவசியமாகச் சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டுப் பழி சொல்வது பாவம்! மாதம் மாதம் உங்களுக்குக் கொடுக்கிறது போல அவனுக்கும் பாக்கெட் மணி கொடுக்கிறேன் அல்லவா? அதில் அவன் மிச்சம் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம். எதற்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் சூட்டுகிறீர்கள்?" என்றார்.
இந்தப் பேச்செல்லாம் பாலனுடைய காதில் விழத்தான் செய்தது. அவன் வாங்கிக் கொண்டு போன ஏரோபிளேன் வாணங்களில் ஒன்றில் தீ வைக்கும் திரி இல்லை. அதைப் பெரிய மாமாவிடம் கொடுத்து வேறொன்று வாங்கிக் கொள்வதற்காக அவன் வந்து கொண்டிருந்தான். மாமா சொன்னது காதில் விழவே, ஆபீஸ் அறைக்குள் நுழையாமல் திரும்பிப் போனான். போய்த் தன்னுடைய பழைய தகரப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தலையைப் பெட்டியின் மேல் வைத்துக் கொண்டு விம்மினான்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருடன் மகன் திருடன் - Thirudan Magan Thirudan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பெரிய, பாலன், மாமா, பாலனுடைய, என்றான், கொண்டு, அவன், காதில், துரை, வாங்கிக், ஏரோபிளேன், கல்யாணசுந்தரம், தகரப், என்றார், ஆபீஸ், அப்பா, அட்டைப், வைத்து, வந்து, கையில்