திருடன் மகன் திருடன்
3
ஜானகியின் புருஷன் ஜோக்கர் ராமுடுவின்
பெயர் போக்கிரிகளின் உலகத்தில் நீண்ட காலமாகப் பிரசித்தி பெற்றிருந்தது.
ராமுடுவைப் பிடித்துக் கையில் விலங்கு மாட்டி, இரும்புக் கதவுக்குள்
தள்ளி, இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போலீஸார் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக்
கொண்டிருந்தனர். ஆனால் ராமுடு எப்படியோ போலீஸார் கையில் சிக்காமல் டிமிக்கி
கொடுத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவனுடைய அருமை மனைவி, பதி பக்தியுள்ள
பெண்மணி, ஸ்ரீமதி ஜானகியின் மூலமாக அவன் போலீஸ் கையில் சிக்கிக் கொள்ளும்படி
நேர்ந்து விட்டது.
ராமுடு பார்த்து வந்த உத்தியோகம் போனதிலிருந்து, அவன் அதிகமாகக் குடும்பத்தைக் கவனிப்பது கிடையாது. மாதத்தில் சில நாள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனைவி மக்களிடம் வெகு பிரியமாய் இருப்பான். அவர்களுக்கு அதைப் பண்ண வேணும், இதைப் பண்ண வேணும் என்றெல்லாம் ஆசையுடன் பேசுவான். பெரிய 'பிரைஸ்' அடிக்கப் போவதாகவும், அதற்குப் பிறகு வீடு உண்டு தான் உண்டு என்று இருக்கப் போவதாகவும் சொல்லுவான். ஆனால் இந்தப் பேச்சிலேயெல்லாம் ஜானகி அதிகமாக நம்பிக்கை வைக்கவில்லை. இரண்டு எருமை மாடு வைத்துக் கொண்டு, தமையன் தம்பிமாரிடமிருந்து கிடைத்த உதவியைக் கொண்டு காலட்சேபம் செய்துவந்தாள். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு அளவில்லாத பொறுமையையும் கஷ்டத்தைச் சகிக்கும் தன்மையையும் அளித்து வந்தது.
பாலனை அவனுடைய மாமா படிக்க வைப்பதாகச் சொல்லி அழைத்துப் போனதிலிருந்து ஜானகிக்குத் தெம்பு அதிகமாயிற்று. அம்புலுவின் கல்யாணத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. எருமைமாட்டுத் தயிரும், நெய்யும் விற்றுக் கிடைத்த பணத்தில் மிச்சம் பிடிக்கத் தொடங்கினாள். அந்தப் பணத்தைப் பதுக்கி வைக்கவும் தொடங்கினாள். ராமுடுவின் கண்ணில் பட்டால் அவன் எப்படியாவது நையப் பாட்டுப் பாடி வாங்கிக் கொண்டு போய்விடுவான் என்று அவளுக்குப் பயம். இம்மாதிரி பல சமயம் அவளிடம் இருந்த ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அவன் கடனாக வாங்கிக் கொண்டு போனதுண்டு. ஒரு முறையாவது திரும்பக் கொடுத்தது கிடையாது.
மிச்சம் பிடித்த பணத்தை ஜானகி, தான் தினந்தோறும் இரவில் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளும் தலையணைக்குள்ளே செருகி வைத்து வந்தாள். ஒரு நாள் ராமுடு அந்தத் தலையணையை வைத்துக் கொண்டபோது, 'தலைகாணி என்ன இப்படிக் கனக்கிறதே!' என்றான். ஜானகிக்குப் பயமாய்ப் போய்விட்டது. மறுநாளே பணத்தை எடுத்து ஒரு பழந்துணியில் முடிந்து அரிசிப் பானைக்குள் வைத்தாள். அதுவும் மனச்சாந்தியை அளிக்கவில்லை. அண்ணன் வீட்டுக்குப் போகும் போது அதை அங்கே கொண்டு போய்ப் பாங்கியிலே போட்டு விட்டு வர வேண்டும் என்று எண்ணினாள். ஒரு நாள் சில்லறையாயிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் மளிகைக் கடையில் கொடுத்து நோட்டாக மாற்றிக் கொண்டு வந்தாள். கிருஷ்ண பகவானுடைய படத்துக்குப் பின்னால் ஒளித்து வைத்தாள். அதிலும் பயம் வந்துவிட்டது. ஒரு தகர டப்பாவில் நோட்டும், ரூபாயுமாக நூற்றெட்டு ரூபாய் போட்டு மூடிப் பழந்துணி ஒன்றைச் சுற்றிக் கட்டி ஒரு நாள் நடுநிசியில் வீட்டுக் கூடத்தில் ஒரு மூலையைத் தோண்டிப் புதைத்து விட்டாள். புதைத்த இடத்தின் மேலே சுவர் ஓரமாகத் தவிட்டு மூட்டையைப் போட்டு வைத்தாள்.
ஒரு தடவை ராமுடு வந்து வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்தான். "ஜானகி உன்னிடம் பணம் இருந்தால் இருபது ரூபாய் கொடு, ஒரு மாதத்தில் கொடுத்து விடுகிறேன்" என்றான்.
ஜானகி தலையை ஒரே ஆட்டாக ஆட்டி, "இல்லை" என்று சொன்னாள். பெட்டியில் சட்டியில் எல்லாம் ராமுடு கையை விட்டுத் தேடினான். ஒன்றும் கிடைக்கவில்லை. ஜானகி தன் மனதிற்குள் பணத்தைப் பூமியில் புதைத்து வைத்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணிக் கொண்டாள்.
ராமுடு போனதற்கு மறுநாள் ஜானகி மாட்டுக்குத் தவிடு எடுக்கும் போது கீழே சிந்தியதையும் எடுத்துக் கொள்வதற்காக மூட்டையைப் புரட்டினாள். அவளுடைய வயிறு பகீர் என்றது! தலை சுழன்றது. ஏனென்றால் சுவர் மூலையில் தரையில் ஒரு துவாரம் காணப்பட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு கையை விட்டுத் தோண்டிப் பார்த்தாள். பணம் வைத்திருந்த டப்பாவைக் காணவில்லை. அவள் அப்போது போட்ட கூச்சலில் அண்டை அயலார் எல்லோரும் வந்து கூடி விட்டார்கள். ஜானகி விஷயத்தைச் சொன்னதும் அவர்களில் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப் போய்ச் சொன்னார். போலீஸ்காரர்களும் வந்தார்கள். ஜானகியிடம் என்ன விஷயம் என்று கேட்டார்கள். போன பணத்தைக் கண்டுபிடித்துப் போலீஸார் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் ஜானகி தான் பணத்தைப் புதைத்து வைத்திருந்த விவரத்தைக் கூறினாள். யாரோ திருடியிருக்கிறார்கள் என்றும் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும் கதறினாள். பாவம்! ஜானகியுடைய பிரலாபம் போலீஸாரின் மனத்தைக் கூட இளகச் செய்துவிட்டது. வந்திருந்த ஹெட் கான்ஸ்டபிள் "எப்படியும் திருட்டைக் கண்டுபிடித்து விடுகிறோம், நீ சும்மா இரு!" என்று ஆறுதல் சொன்னார்.
அன்று மாலையே போலீஸார் திரும்பி வந்து ஜானகியிடம் அவள் புருஷனுடைய போக்கு வரவைப் பற்றி விசாரித்தார்கள். ஜானகிக்கு 'சொரேல்' என்றது. ஏற்கனவே அவள் மனத்தில் ராமுடுவைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் ஜனித்ததுண்டு. உடனே, 'அப்படி இராது!' என்று தீர்மானித்துக் கொண்டாள். ஆயினும் இப்போது போலீஸார் விசாரித்ததும் மறுபடியும் பீதி உண்டாகிவிட்டது. தன் புருஷன் வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆயிற்று என்று பொய் சொன்னாள். 'இரண்டு நாளைக்கு முன்பு வந்திருந்தானாமே?' என்று கேட்டதற்கு, "இல்லவே இல்லை!" என்று சொல்லி விட்டாள் ஜானகி. "இல்லை" என்று சொல்லி விட்டால் புருஷனைக் காப்பாற்றியதாகி விடுமா? அதனால் போலீஸாரின் சந்தேகம் அதிகமே ஆயிற்று. எப்பேர்ப்பட்ட சிக்கலான மர்மமான குற்றங்களையெல்லாம் கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தத் திருட்டு ஒரு பிரமாதமா? கடைசியில் அவர்கள் ராமுடுவையும் அவனுடைய கூட்டாளிகளில் மூன்று பேரையும் கைது செய்து விட்டார்கள். அந்த நாலு பேர் மீதும், பணம் வைத்துச் சீட்டு விளையாடியதாக வழக்குத் தொடர்ந்தார்கள். ராமுடுவின் பேரில் அதிகப்படியாகத் திருட்டு வழக்கும் தொடர்ந்தார்கள்.
ஜானகி தன்னுடைய ஆத்திரத்தினால் நேர்ந்த விபரீதத்தைப் பார்த்ததும், முட்டி மோதிக் கொண்டு அழுதாள். தமையன், வக்கீல் கல்யாணசுந்தரத்தின் யோசனைப்படி கோர்ட் விசாரணையில், பணம் திருட்டுப் போனதே உண்மை இல்லை என்று சாதித்தாள். மளிகைக் கடைப் பாக்கி கொடுக்க முடியாதபடியால் மளிகை வியாபாரிக்குச் சால்ஜாப்புச் சொல்வதற்காக அப்படி ஒரு கற்பனை செய்ததாகக் கூறினாள். அதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. அவளுடைய முதல் வாக்குமூலத்தையே கோர்ட்டில் ஆதாரமாகக் கொண்டார்கள். அத்துடன் மற்றச் சாட்சியங்களும் சேரவே, ராமுடுவை ஒரு வருஷம் தண்டித்துவிட்டார்கள்.
மேற்படி வழக்கு விசாரணையின் போது ராமுடு அவளிடம் நடந்து கொண்ட முறை கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அவன் ஜானகியின் பேரில் கோபம் காட்டவே இல்லை. அவனுடைய மனப்போக்கே மாறிப் போய் இருந்தது.
"நீ என்ன செய்வாய் ஜானகி? வேண்டுமென்றே என்னைச் சிறைக்கு அனுப்புவதற்காகவா சொன்னாய்? என் தலையெழுத்து அப்படி. உன் வாய்மூலம் இந்தக் கஷ்டம் எனக்கு சேர்ந்தது. நீ வீணாக வருத்தப்படாதே!" என்று தேறுதல் கூறினான். இதெல்லாம் ஜானகியின் காதில் ஏறுமா? அவள் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை.
எனினும், எந்த மாதிரித் துயரமும் நாளடைவில் காய்ச்சித்தான் போகிறது. அதனுடைய வேகம் தணிந்து விடுகிறது. கடவுள் மனிதர்களுக்கு அத்தகைய ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறார்.
ராமுடு சிறைக்குப் போய் மூன்று மாதத்துக்குப் பிறகு ஜானகி அவனைச் சிறையில் 'இண்டர்வியூ' பார்ப்பதற்காகச் சென்றாள். அவளுடைய அண்ணன் தம்பிமார் வசித்த நகரத்தில் சிறை இருந்தது.
ஜானகியின் தம்பி கைலாசம் அவளைச் சிறைக்கு அழைத்துப் போனான். இரும்புக் கம்பிக் கூண்டுக்குள்ளே தன் கணவனைப் பார்த்ததும், ஜானகிக்கு வயிறு பற்றி எரிந்தது; உள்ளம் வெதும்பிற்று. ஆயினும் சற்று நேரம் அவனுடன் பேசி, அவன் சிறையில் சௌக்கியமாகவே இருக்கிறான் என்று தெரிந்ததால் கொஞ்சம் மன நிம்மதி ஏற்பட்டது.
"ஜானகி, எத்தனையோ பெரிய மனிதர்கள் எல்லாம் காந்திக் கட்சியில் சேர்ந்து சிறைக்கு வரவில்லையா? அந்த மாதிரி நானும் சிறைப்பட்டதாக நினைத்துக் கொள். விடுதலையாகி வெளியே வந்ததும் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியிருக்கும் பார்" என்று ராமுடு சொன்னான்.
தான் கஷ்டப்பட்டுச் சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தைத் திருடியவன் ராமுடு என்பதில் ஜானகிக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. தன் புருஷன் யோக்கியதை தெரிந்திருந்தும், தான் பதற்றப்பட்டுப் போலீஸுக்குச் சொன்னதைப் பற்றி அவள் வருந்தினாள். எனினும் இந்தச் சிறைவாசத்தின் பயனாக அவனுடைய நடவடிக்கை அடியோடு மாறிவிடலாம் என்ற எண்ணம் "எல்லாம் ஒரு நன்மைக்குத்தான்" என்ற முதுமொழியில் அவளுடைய நம்பிக்கையை வலுப்படுத்திற்று. இதைப் பற்றி நினைத்து ஒரு வகையாக மனத்தை தேற்றிக் கொண்டே ஜானகி ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனாள்.
ஜானகியின் தம்பி கைலாசம் அவளை ரெயில் ஏற்றி அனுப்புவதற்காக வந்தான். "பாலன் இங்கே சமர்த்தாயிருக்கிறான் அக்கா! நன்றாகப் படித்து வருகிறான்! அவனைப் பற்றி நீ கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினான்.
"அந்த குழந்தையைத்தான் நான் நம்பியிருக்கிறேன்; அவன் தலை எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தால்தான் எனக்கு விடியும்!" என்றாள் ஜானகி.
குப் குப் என்ற சத்தத்துடன் தூரத்தில் ரெயில் வந்து கொண்டிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருடன் மகன் திருடன் - Thirudan Magan Thirudan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஜானகி, ராமுடு, கொண்டு, அவன், இல்லை, ஜானகியின், வந்து, பற்றி, பணம், அவள், தான், நாள், போலீஸார், அவனுடைய, வேண்டும், ரூபாய், புதைத்து, கொஞ்சம், அவளுடைய, எல்லாம், வைத்திருந்த, சந்தேகம், அந்த, அப்படி, சிறைக்கு, பேரில், பணத்தைப், இரண்டு, கையில், ராமுடுவின், புருஷன், வைத்துக், சொல்லி, போட்டு, போது, வைத்தாள், என்ன, போய்