"தப்பிலி கப்"
மேலும் மேலும் நஷ்டமாகி வருகிறது. அவ்வளவுக்குப்
பந்தயத்தில் மோகமும் வளர்ந்து விடுகிறது. கடன் வாங்குகிறான். இவ்விடத்தில்
மார்வாரி வட்டிக் கடையின் காட்சி நடத்தப்படுகிறது. ஏழைக் கூலிப் பெண்கள்
செம்பு முதலிய பாத்திரங்களை அடகு வைத்துவிட்டுக் கால் ரூபாய் கடன் வாங்கி
அடுத்த அரை வாரத்தில் அரை ரூபாய் கொடுத்துப் பாத்திரத்தை மீட்டுக் கொண்டு
போனார்கள். இவ்விதமாகவே வியாபாரிகள், சொற்பச் சம்பளக் குமாஸ்தாக்கள்,
பெண்களைப் பெற்ற தகப்பன்மார், தாசி வீடு செல்லும் மைனர்கள் முதலியோர்
வந்து கடன் வாங்கும் காட்சி ஹாஸ்யரசத்துடன் நடத்திக் காட்டப் பெற்றது.
சபையோர் சிரித்து வயிறு புண்ணாகப் பெற்றனர். மார்வாடிக் கடையில் நம்
கதாநாயகனும் கடன் வாங்குகிறான்.
ஒரு நாள் குதிரைப் பந்தய மைதானத்தில் கதாநாயகனுக்கு அவனுடைய சிநேகிதன் ஒரு தாசியை அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு ஒரு தினம் அவளுடைய வீட்டுக்குப் போகலாம் என்று சிநேகிதன் அழைக்கிறான். கதாநாயகனுக்குச் சிறிதும், இஷ்டமில்லை. ஆனால் பத்மாபாய்க்கு ஜாக்கிகள், ட்ரெயினர்கள் அநேகம் பேரைத் தெரியும் என்றும், அவள் "டிப்ஸ்" கொடுத்தால் தவறுவது கிடையாதென்றும் சிநேகிதன் சொன்னபோது, கதாநாயகன் வேண்டா வெறுப்பாய் அவள் வீட்டுக்குச் செல்கிறான். இதுவும் ஒரு ஹாஸ்யக் காட்சி. தாசி விட்டுக்குப் புதிதாக வருவோரைப் பற்றியும், அவர்கள் அங்கே என்ன பேசுவது என்று தெரியாமல் விழிப்பதைப் பற்றியும், அவர்களைத் தாசிகள் ஏமாற்றிப் பணம் பறிப்பதைப் பற்றியும் மிக்க ஹாஸ்ய ரசத்துடன் நடித்துக் காண்பித்தார்கள்.
ஆனால் அடுத்தாற்போல், கதாநாயகன் பச்சாதாபப் படும் காட்சியானது சிரிப்பை எல்லாம் மறக்கும்படி செய்து விட்டது. குதிரைப் பந்தயத்துக்குப் போவதைத் தன் அருமை மனைவியிடம் மறைத்து வைப்பது போதாதென்று, தாசி வீடு சென்ற துரோகமும் சேர்ந்து விட்டதே என்று அவன் உருகுகிறான். அந்தச் சமயம், "படமுடியாதினித் துயரம்" என்று அவன் பாடியபோது சபையோரெல்லாம் கலகலவென்று கண்ணீர் வடித்தார்கள்.
கடன் மூண்டு விட்டது. நான்கு பக்கமும் கடன் காரர்கள் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தார்கள். கதாநாயகன் செய்வதென்னவென்று தெரியாமல் திணறுகிறான். இந்த நிலைமையில் நாளை சனிக்கிழமை "தப்பிலி கப்" என்னும் பந்தயத்தில் ஜயிக்கப் போகிற குதிரைக்கு அவனுக்கு "டிப்" கிடைத்தது. அந்தக் குதிரையை இரண்டு நாளாகப் பல பேர் வாங்க முயற்சி செய்வதாகவும் அவனுக்கு நிச்சயமாகத் தகவல் தெரிந்தது. நாளை மட்டும் அதில் 2,000 ரூபாய் கட்டினால் கட்டாயம் 20,000 ரூபாய் கிடைக்கும். கவலையெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால், 2,000 ரூபாய்க்கு எங்கே போவது? இந்தச் சமயத்தில் அவனுடைய கட்சிக்காரன் ஒருவன் வந்து, கோர்ட்டில் கட்டுவதற்காக ரூ 2,000 கொடுக்கிறான். தான் படும் கஷ்டத்தைப் பார்த்துக் கடவுளேதான் இந்த ரூபாயை அனுப்பி இருக்கிறார் என்று கதாநாயகன் தீர்மானிக்கிறான்.
மறுநாள், சனிக்கிழமை. கிண்டிக்குப் போய்த் "தப்பிலி கப்" பந்தயத்தில் குறிப்பிட்ட குதிரையின் மேல் ரூபாய் 2,000மும் கட்டுகிறான். அவனுடைய குதிரை புறப்படும்பொழுது முதலில் புறப்படுகிறது. வரும்பொழுது கடைசியில் வருகின்றது. இடையில், ஜாக்கி அதைப் 'புல்' பண்ணிவிட்டான் என்பது கதாநாயகனின் கொள்கை.
இனிமேல் எவ்விதக் கவலையும் கிடையாது. செய்யத் தக்கது ஒன்றே ஒன்றுதான் பாக்கி இருந்தது. கதாநாயகன் தனியாகத் தனது அறையில் உட்கார்ந்து தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் ஆதியோடந்தமாக எல்லா விவரங்களையும் கூறுகிறான். கட்சிக்காரன் பணத்தை நாளைத் திங்கட்கிழமை கோர்ட்டில் கட்டாவிட்டால், துர்விநியோகம் செய்ததாய் ஏற்படும் என்றும், அட்வொகேட் தொழிலிருந்து தள்ளப்பட்டு அழியாத அவமானத்துக்கும் உள்ளாக வேண்டுமென்றும், அவளுடைய நகைகளை விற்றுக் கொடுப்பது ஒன்றுதான் வழி என்றும், அதைவிடத் தான் தூக்கு போட்டுக் கொண்டு இறப்பதே மேல் என்று தீர்மானித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறான். அவளிடம் தான் கொண்ட அழியாத அன்பைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதி, அவளுக்கும் குழந்தைக்கும் தனது லட்சோப லட்சம் முத்தங்களை அளித்துக் கடிதத்தை முடிக்கிறான்.
கதாநாயகி ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் குழந்தையுடன் ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போகிறாள். அவள் போன பிறகு கதாநாயகன் மேற்படி கடிதத்தை அவளுடைய அறையிலிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டுத் தூக்குப் போட்டுக் கொள்வதற்காகத் தன் அறைக்கு வருகிறான். மேலே உத்திரத்தில் சுருக்குப் போட்டுக் கயிறு கட்டிவிட்டுக் கடவுளை நோக்கித் தோத்திரம் செய்கிறான். ஞாபக மறதியால் வீட்டுக் கதவு எதையும் தாழ்ப்பாளிட மறந்து விடுகிறான். இதற்குள் சிநேகிதி வீட்டுக்குச் சென்ற கதாநாயகி தன் மனம் ஏதோ பரபரப்பு அடைந்திருப்பதைக் காண்கிறாள். உடம்பு ஒரு மாதிரியாய் இருக்கிறதென்று சொல்லிவிட்டு உடனே வீடு திரும்புகிறாள். வீட்டுக்கு வந்து மேஜை மீதிருந்த கடிதத்தைப் பார்க்கிறாள். உடனே பதைபதைத்து ஓடுகிறாள். கதாநாயகன் சுருக்கை மாட்டிக் கொள்ளும் சமயத்தில், அவனைப் போய்க் கட்டிக் கொண்டு கோவென்று கதறுகிறாள்.
அந்தச் சமயத்தில் பாதிப் பாட்டும் பாதிப் பேச்சுமாகக் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் நடந்த சம்பாஷணையின் போது சபையில் கண்ணீர் விட்டுக் கதறாதவர்கள் யாரும் இல்லையென்று சொல்லலாம். "உங்களை விட எனக்கு இந்த நகை பெரிதா?" என்று சொல்லிக் கதாநாயகி ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுக்கிறாள். ஒவ்வொரு நகைக்கும் அவள் ஒரு பாட்டும், பதிலுக்குக் கதாநாயகன் ஒரு பாட்டும் பாடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் சபையில் முக்கியமாகப் பெண்மணிகள் பகுதியில் உண்டான அல்லோலகல்லோலத்தைச் சொல்ல சாத்தியம் இல்லை. விம்மி விம்மி அழுதபடியால் தொண்டை காய்ந்துபோய், சோடா வாங்கிக் குடித்துத் தாகசாந்தி செய்து கொண்டு, மறுபடியும் அவர்கள் அழலானார்கள். கதாநாயகி தன் வைரக் கம்மலைக் கழற்றிக் கொடுத்த போது ஒரு பெண்மணி உருக்க மிகுதியால் மூர்ச்சை அடைந்தே விழுந்து விட்டாள் என்றால், வேறு சொல்லவும் வேண்டுமோ?
எல்லா நகைகளையும் கழற்றி வைத்துவிட்டுக் கதாநாயகி, "இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் இருவரும் கூலி வேலை செய்து பிழைப்போம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒரு வரங் கொடுங்கள்" என்று கேட்கிறாள். "என் உயிரைக் கேட்டாலும் தருகிறேன்!" என்கிறான் கதாநாயகன். "இனிமேல் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ்செய்யுங்கள்" என்கிறாள். "ஆண்டவன் ஆணை! உன் மேல் ஆணை! நம் அருமைக் குழந்தையின் மேல் ஆணை! நான் இனிக் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை" என்று கதாநாயகன் சபதஞ் செய்கிறான். அச்சமயம் சபையில் வீற்றிருந்தவர்களில் அநேகரும் இவ்வாறே தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.
நாடகம் சந்தோஷமாக முடிகின்றது. கதாநாயகன் நகைகளை விற்பதற்காகக் கிளம்பும் தறுவாயில் ஒரு தந்தியும் ஒரு கடிதமும் வருகின்றன. தந்தியில் அவனுக்கு ஜில்லா முன்சீப் உத்தியோகமான செய்தி இருக்கிறது. கடிதத்தில் கதாநாயகியின் பாட்டி இறந்து போனதாகவும் அவள் தனது உயிலில் கதாநாயகிக்கு ரூ.30,000 எழுதி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மங்களம் பாடித் திரை விழுந்து நாடகம் முடிவுறுகிறது.
எதிர்பார்த்த அளவுக்கு மேல் வெற்றியுடன் நாடகம் நடந்தேறிய தென்பதில் சந்தேகமில்லை. பின்னும் இரண்டு இரவுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. முன்னை விட அதிக ஜனங்கள் கூடினார்கள். அதிகக் கண்ணீர் வடிக்கப்பட்டது. அதிகம் பேர் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ் செய்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் பிடிவாதமான வேண்டுகோளின் பேரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை 'மாடினி' நாடகம் நடத்தினார்கள். அதுவும் சிறப்பாக நடந்தேறியது.
திங்கட்கிழமை ராஜுவும் சீனுவும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். எல்லாச் செலவுகளும் போய் 5,000 ரூபாய் மீதம் இருந்தது. தலைக்கு ரூபாய் 2,500 என்று பிரித்துக் கொண்டார்கள். போட்ட திட்டத்தில் ஒன்றே ஒன்று தான் தவறிற்று. புத்தகம் அச்சிட்டார்கள் அல்லவா? நாலு நாளும் நாடகக் கொட்டகையில் விற்றதில் 3 புத்தகங்களே விற்பனையாயின. பாக்கி முழுவதும் மிஞ்சி விட்டது. ஆயினும் இதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
நாளடைவில் விற்றுவிடலாம். அல்லது பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்கு அனுப்பிச் செலவு பண்ணி விடலாம் என்று தீர்மானித்தார்கள்.
"இன்னும் 13 நாள் உனக்கு லீவு இருக்கிறதே? என்ன செய்யப் போகிறாய்?" என்று சீனு கேட்டான்.
"ஊருக்குப் போய் ரொம்ப நாளாயிற்று. எல்லாரையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்றிருக்கிறேன்" என்றான் ராஜு.
"சரி போய் வா! வெகு நாளாக எனக்குக் கொடைக்கானலுக்குப் போகவேண்டுமென்ற ஆசை. அங்கே போகிறேன்" என்றான் சீனு.
*****
அடுத்த சனிக்கிழமை உதகமண்டலத்தில் குதிரைப் பந்தய மைதானத்தில் இரண்டு மனிதர்கள் தற்செயலாகச் சந்தித்தார்கள். அவ்விடத்தில் 'இவ்வாறு ஒருவரை ஒருவர் சந்திப்போம்' என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லையாதலால், பிரமித்துப் போய் ஐந்து நிமிஷம் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்.
"நீ ஊருக்குப் போகவில்லை" என்றான் சீனு.
"நீ கொடைக்கானலுக்குப் போகவில்லை?" என்றான் ராஜு.
அப்பொழுது அந்த மைதானத்தில் 'தப்பிலி கப்' பந்தயத்திற்காகக் குதிரைகள் அதிவேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
"தப்பிலி கப்" - Thappili Cup - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கதாநாயகன், ரூபாய், குதிரைப், மேல், கடன், கதாநாயகி, செய்து, அவள், தான், வந்து, என்றான், நாடகம், கொண்டு, போய், சமயத்தில், போட்டுக், தனது, அதைப், பற்றி, போவதில்லை, சீனு, பந்தயத்திற்குப், இரண்டு, சபையில், பாட்டும், விட்டது, மைதானத்தில், அவனுடைய, சிநேகிதன், வீடு, தாசி, காட்சி, அடுத்த, பிறகு, அவளுடைய, சனிக்கிழமை, தப்பிலி, கண்ணீர், பந்தயத்தில், என்றும், பற்றியும், அவனுக்கு