"தப்பிலி கப்"
கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குள்
நீங்கள் எப்போதாவது பிரவேசித்ததுண்டா? இல்லையென்றால் அதற்காக வருத்தப்பட
வேண்டாம். ஏனென்றால், அந்தப் பூலோக சொர்க்கத்துக்குள் நானும் நுழைந்தது
கிடையாது. இந்தக் கதையைப் பொறுத்த வரையில் அந்த மைதானத்திற்குள் நீங்கள்
பிரவேசித்திருக்க வேண்டுமென்னும் அவசியமும் இல்லை.
ஆனால் குதிரைப் பந்தயம் நடக்கும் சனி அல்லது புதன் கிழமைகளில் நீங்கள் கிண்டி ஸ்டேஷன் வழியாக மாலை நேரத்தில் ரெயில் பிரயாணம் செய்ய நேர்ந்தால் சிறிது தலையை நீட்டி வெளியில் பார்க்குமாறு சொல்வேன். அதனால் நீங்கள் அடையும் பலன் என்னவென்றால், சென்னை நகரில் சுமாராக எத்தனை மோட்டார் வண்டிகள் இருக்கின்றனவென்று ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். புள்ளி விவரங்களில் நீங்கள் பற்று உடையவர்களாயின் பின்வரும் கணக்குகள் போட்டு அறியலாம்.
(1) சென்னையில் உள்ள மோட்டார் வண்டிகள் எவ்வளவு?
(2) சராசரி ஒவ்வொன்றின் விலைகள் என்ன இருக்கும்?
(3) மொத்தம் விலை என்ன?
(4) ஒவ்வொன்றிற்கும் சராசரி பெட்ரோல் செலவு எவ்வளவு இருக்கும்?
(5) மொத்தப் பெட்ரோல் செலவு என்ன?
(6) கெட்டுப் போகும் கருவிகளைப் புதுப்பிக்கும் செலவு என்ன?
(7) கிராமாந்தரங்களின் ஏழைக் குடியானவர்களிடமிருந்து நகர வாசிகள் பெறும் பணத்தில் மோட்டார் மூலமாக மட்டும் எவ்வளவு ரூபாய் வருஷந்தோறும் அயல்நாட்டுக்கு அனுப்புகிறார்கள்? அல்லது நீங்கள் சமூக நிலைமையைப் பற்றிய ஆராய்ச்சியில் சிரத்தை உடையவர்களானால் அங்கு நிற்கும் மோட்டார் வண்டிகளின் இலக்கங்களையெல்லாம் குறித்துக் கொண்டு பின்வரும் விவரங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கலாம்;
கிண்டி குதிரைப் பந்தயத்திற்குப் போகும் சென்னைப் பெரிய மனிதர்களில்,
(1) சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எத்தனை பேர்?
(2) அட்வொகேட்டுகள் எத்தனை பேர்?
(3) நியாயாதிபதிகள் எவ்வளவு பேர்?
(4) பத்திராதிபதிகள் எத்தனை பேர்?
(5) சட்டசபை அங்கத்தினர்கள் எவ்வளவு பேர்?
(6) பாங்கி முதலாளிகள் எத்தனை பேர்?
(7) வியாபாரிகள் எத்தனை பேர்?
(8) கலாசாலை ஆசிரியர்கள் எவ்வளவு பேர்?
பந்தயம் முடிந்து ஜனங்கள் மைதானத்திலிருந்து வெளியே வரும்பொழுது சற்றே கவனித்துப் பார்த்தீர்களானால், நீங்கள் சிறிதும் எதிர்பாராத மனிதர்கள் பலர் அங்கிருந்து வெளிப்புறப்படுவதைக் காண்பீர்கள். மூன்றாம் வகுப்பில் உங்களுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர், உங்கள் தகப்பனாரின் சிரார்த்தத்தில் நிமந்திரணத்துக்கு வந்த சாஸ்திரிகள், அன்றைய தினம் சாயங்காலம், திருவொற்றியூரில் தேர் பார்க்கப் போவதாக விடுமுறை பெற்றுச் சென்ற உங்கள் வீடு கூட்டும் வேலைக்காரி முதலியோரைப் பார்த்துத் திடுக்கிடுகிறீர்கள்.
உங்கள் விஷயம் எப்படி ஆனாலும் சரி, டி.கே. ராஜகோபாலன் இப்பொழுது மேற்படி மைதானத்துக்குக் குள்ளிருந்து வெளிவருவதை அவனுடைய தாயார் பார்த்தாளாயின் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவாளென்பதில் சந்தேகமில்லை. ராஜகோபாலன் திருவல்லிக்கேணியில் வசிப்பவன். அவனுக்குத் தபாலாபீஸில் ரூபாய் நாற்பது சம்பளம். தாயாரைத் தவிர மனைவியும் தங்கையும் வீட்டிலிருந்தார்கள். ஜீவனத்துக்கு நாற்பது ரூபாய் போதவில்லை. ஆதலால் அவன் 'நாவல்' எழுதிப் புத்தகப் பிரசுரக் கம்பெனிகளுக்குக் கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தான். அன்று இருபதாம் தேதி. சம்பளம் வர இன்னும் பத்து நாளாகும். மறு நாள் சமையல் பண்ணுவதற்கு வீட்டில் அரிசி, சாமான் ஒன்றும் இல்லையென்று அவன் தாயார் சொன்னாள். இரண்டு மாத வாடகை பாக்கி என்று வீட்டுக்காரன் பிடுங்கி எடுத்தான்.
"அம்மா! போன மாதம் எழுதிக் கொடுத்த நாவலுக்காக மூர் மார்க்கெட் கோவிந்தசாமி நாயுடு இன்று முப்பது ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று காலை பத்து மணிக்கு ராஜகோபாலன் வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் இப்பொழுது குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெளிவருவதென்றால்? அதிலும், அவனுடைய தோற்றமோ மகாகோரமாக இருந்தது. முகத்திலே பிரேதக் களை; மேலெல்லாம் ஒரே புழுதியும் வியர்வையும். காலையில் அழகாக வகிடு பிளந்து படிய வாரிவிட்டிருந்த தலைமயிர் இப்பொழுது செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டதோடல்லாமல் அவனுடைய கைகளினாலும் வெகு வேதனையை, அடைந்திருக்க வேண்டுமென்று தோன்றியது.
அவனுடைய இந்தக் கோர ஸ்வரூபத்தைப் பார்க்க நமக்கே சகிக்கவில்லையென்றால், அவனுடைய தாயாராவது மனைவியாவது பார்க்கும் பட்சத்தில் மூர்ச்சை அடைந்து விடுவார்களென்று கூறுவது மிகையாகுமா?
ராஜகோபாலன் வெளியே வந்ததும் அங்கே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றுகொண்டிருந்த பஸ்களை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தான். பின்னர் அவ்வரிசையின் முதலில் ஜனங்கள் ஏறிக் கொண்டிருந்த பஸ்ஸை நோக்கி அதிவேகமாக விரைந்து சென்றான். அந்த பஸ்ஸுக்கு ஒருவர் தான் பாக்கியிருந்தது. "ஏறுங்கோ, சார் ஸ்டார்ட்!" என்றான் கண்டக்டர். ஆனால் ராஜகோபலன் ஏறவில்லை. வண்டியின் முன் பக்கத்தில் இரண்டு தடித்த மார்வாரி சேட்டுகளுக்கு மத்தியில் உட்கார்ந்து திணறிக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து, "அடே சீனு ஒரு சமாசாரம் இறங்கு கீழே!" என்றான். நல்ல வேலை என்று எண்ணிக் கொண்டு கீழிறங்கினான் சீனு.
"என்ன சமாசாரம்?" என்றான்.
"ஒன்றுமில்லை...."
"ஒன்றுமில்லையா? பின் எதற்காக என்னை இறக்கினாய்?"
"அடே அப்பா! கோபித்துக் கொள்ளாதே! இங்கே வா சொல்கிறேன்" என்று ராஜு சீனுவைச் சிறிது ஒதுக்குப் புறமாய் அழைத்துக் கொண்டு போய், "சட்டைப் பையைப் பார். எவ்வளவு சில்லறை இருக்கிறது?" என்று கேட்டான்.
சீனு எண்ணிப் பார்த்தான். ஐந்தரை அணா இருந்தது. "நல்ல வேளை! நீ வந்து இருக்கிறாய். இல்லாவிட்டால் அவமானம்" என்றான். பஸ்ஸுக்கு எட்டணா கூலி. "இரண்டு பேருக்கும் ரெயிலுக்காவது இருக்கிறதே" என்றான் ராஜகோபாலன். இருவரும் கை கோர்த்துக் கொண்டு போய் டிக்கெட் வாங்கி ரெயில் ஏறினார்கள்.
*****
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
"தப்பிலி கப்" - Thappili Cup - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பேர், நீங்கள், எவ்வளவு, எத்தனை, ராஜகோபாலன், என்ன, என்றான், அவனுடைய, கொண்டு, குதிரைப், மோட்டார், ரூபாய், தலைமயிர், சீனு, இரண்டு, அவன், செலவு, இப்பொழுது, கிண்டி, உங்கள்