"தப்பிலி கப்"
ரெயில் நகர ஆரம்பித்தது. சீனுவின் எதிரில்
துக்கமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மனைவி அல்லது குழந்தை செத்துப்
போனால் கூட அவ்வளவு துக்கப்படுவார்களா என்பது சந்தேகம். ரெயில் ஓடத்
தொடங்கியதும் அவர் அருகிலிருந்த முதலியார் பக்கம் திரும்பினார். "நாலு
நாளாய்ப் 'பவானி பிரஸாத்' தான் ஜயிக்க்கப் போகிறது என்று ஊரெல்லாம் சொல்லிக்
கொண்டிருந்தேன். கடைசியில் உன் பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவராய்ப்
போனேன். என் புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்" என்று
வெறுப்புடன் கூறினார். இப்படிச் சொல்லிக் கொண்டே அவர் தமது காலிலிருந்த
செருப்பைக் கழற்றினார். பக்கத்திலிருந்தவர்கள் அவர் எங்கே புத்தியைச்
செருப்பால் அடித்துக் கொள்ளப் போகிறாரோ என்று பயந்து விட்டனர். அப்படி
ஒன்றும் அவர் செய்யவில்லை. பகலெல்லாம் நின்று கால் வலித்தது போலும்!
காலைத் தூக்கிச் சப்பணங் கூட்டி உட்கார்ந்தார். "எவனாவது கண் தெரிந்து
'டாபா'மேல் பணங் கட்டுவானா?" என்றார் ஒருவர். "அந்த ரேஸில் அது தான்
கெலிக்கப் போகிறது என்று ஸ்பெஷல் தந்தி போச்சே!" என்றார் முதலியார்.
"உன் தந்தியைக் கொண்டு உடைப்பில் போடு. குதிரையா அது? கழுதை! கடைசியில்
அல்லவா வந்தது!" என்றார் நாயுடு. "ஆமாம் ஐயா, எல்லாவற்றிற்கும் கடைசியாக
அது எப்படித்தான் வந்ததோ தெரியாது. எனக்கு வந்த கோபத்தில் அதன் மேல்
கல்லை விட்டு எறிந்தேன்" என்றார் ஒரு சாயபு.
"தந்திப்படி குதிரை வந்தால் அப்பொழுது மட்டும் என்ன செய்வாய்?" என்றார் முதலியார்.
"ஆமாம்! உன் குதிரைத்தான் வந்ததே, தெரியாதா, வாலை உயரக் கிளப்பிக்கொண்டு!" என்று சொல்லி நாயுடு கையைத் தூக்கினார். குதிரை வாலை அப்படித் தூக்கிக் கொண்டு போனதென்று காண்பிப்பதாக அவர் எண்ணம்.
"யாராவது தந்தியைப் பார்த்து நூற்றுக் கணக்காக பணத்தைத் தொலைப்பார்களா? கொஞ்சமாவது குதிரைகள் விஷயம் தெரியாமல் பணத்தைக் கட்டலாமா?" என்று இடம் இல்லாமல் ரெயில் கம்பியைப் பிடித்து நின்று கொண்டிருந்த ஓர் ஐயங்கார் குறுக்கிட்டார்.
"ஒரு குதிரை எவ்வளவு தூரம் ஓடும்? அதன் வேகம் என்ன? அதற்கு வெயிட் எவ்வளவு? அதன் மேல் எந்த ஜாக்கி ஏறுகிறான்?" என்று இந்த விஷயமெல்லாம் கவனிக்காமல் பணம் கட்டவே கூடாது என்று சொல்லிக் கொண்டே ஐயங்கார், நாயுடுவுக்கும் முதலியாருக்கும் இடையே உட்காரப் போனார். நாயுடு இடம் விட்டார். "ஆமாம், நீர் தான் கணக்குப் போட்டுப் பணம் கட்டுகிறீரே? இது வரையில் எத்தனை மாடி வீடு கட்டியிருக்கிறீர்? போன வாரம் 'சிவாஜி வரவே வராது, அன்வர் பாஷாதான் கெலிக்கப் போகிறது' என்று சொன்னீரே! அந்தப் பாஷா எல்லாக் குதிரையையும், துரத்தியடித்துக் கொண்டு வந்தது ஞாபகமில்லையாக்கும்!"
"விஷயம் தெரியாமல் பேசாதேயும். அது மட்டும் சரியாக ஓடினால் அதை அடிக்கிற குதிரை ஏது? அன்றைக்கு ஒரே 'பேவரிட்' (Favourite) ஆகப் போய் விட்டது. ஜாக்கி 'புல்' பண்ணி விட்டான். அதற்கு யார் மேல் முட்டிக் கொள்கிறது?"
"குதிரை தின்னுகிறதற்குப் 'புல்' பண்ணினானாக்கும்! 'போமையா போம்' சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுகிறீரே!" என்று முதலியார் பரிகசித்தார்.
"ஒரு சமயம் இப்படி ஒரு சமயம் அப்படித்தான் இருக்கும். கணக்குப் பார்க்க வேண்டியதுதான். குதிரை 'ட்ரையா' 'ட்ரை' இல்லையா என்றும் பார்க்க வேண்டியதுதான்" என்று அதுவரையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த ஓர் ஐயர் சொன்னார்.
இவர்கள் பேசுவதைக் காதில் வாங்காதது போல் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், "பாருங்கள், நானும் இருபது வருஷமாய் ரேசுக்குப் போய் வருகிறேன். நான் பணங்கட்டியதைப் போல் ஒருவரும் கட்டியிருக்க மாட்டார்கள். இழவை விட்டுத் தொலைக்கலாமென்றாலோ முடியவில்லை. லாபம் வருகிறதோ இல்லையோ நம் பணம் போகிறது நிச்சயம். நூற்றுக்கு எட்டு வீதம் கிளப்புக்காரன் எடுத்துக் கொண்டு விடுகிறான். போதாததற்கு உள்ளே வர டிக்கெட், ரெயில் செலவு, கவலை, கால விரயம் எல்லாம்" என்று பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.
ராஜகோபாலனுக்குப் பக்கத்தில் பெரிய மனிதர் போன்றிருந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
"இவர்கள் என்னமோ சொல்லுகிறார்கள்? குதிரைப் பந்தயம் என்றால், நாலாயிரம், ஐயாயிரம் ஒரு வரவு செலவாகவே எண்ணக்கூடாது. அதை ஒரு ஸ்போர்ட்ஸாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று போனால் இன்னொன்றில் வைத்துத் தாக்க வேண்டும். ஒரு குதிரையில் ஆயிரம் கட்டிப் போனால் இன்னொன்றில் இரண்டாயிரம் கட்டுகிறது. அதுவும் போனால் நாலாயிரம் கட்டுகிறது. குதிரை வராமலா போய்விடும்? அப்படி இருபதாயிரம் முப்பதாயிரம் கட்டுவதற்குக்கூடப் பயப்படக் கூடாது" என்றார் அவர்.
இந்தச் சமயத்தில் இரண்டு மூன்று பேர், "அடடா! எக்மோர் ஸ்டேஷன் தாண்டிவிட்டதே" என்று தவித்தனர். அவர்கள் எழும்பூரில் இறங்க வேண்டியது. பேச்சு மும்முரத்தில் மறந்து போனார்கள். நாசமாய்ப் போகிற 'எலெக்ட்ரிக்' வண்டிகள் ஒரு நிமிஷத்திற்கு மேல் நிற்பதில்லை.
*****
ராஜுவும் சீனுவும் ஒரு மூலையில் பேசாமல்
உட்கார்ந்திருந்தார்கள். வாய் திறக்கக்கூட இல்லை; மற்றவர்களுக்கெல்லாம்,
"ஏதோ அடுத்த சனிக்கிழமை அதிர்ஷ்டம் திரும்பாதா? பார்க்கலாம்" என்ற நம்பிக்கை
இருந்தது. ஆனால் இவர்களுக்கோ எல்லா நம்பிக்கையும் போய்விட்டது.மற்றொரு பக்கத்தில் பட்டுச் சட்டையும் தங்கச் சங்கிலியும் வைர மோதிரமும் அணிந்து உட்கார்ந்திருந்த ஒருவர், தம் அருகிலிருந்த சிநேகிதருக்கு ராஜுவைச் சுட்டிக் காட்டினார். "அதோ அந்த இரண்டு ஆசாமிகளையும் பார்த்தீர்களா, சார்? முகத்திலே ஈயாடவில்லை, பாருங்கள். இந்த மாதிரி ஆட்கள் தான் தூக்குப் போட்டுக் கொண்டும், விஷத்தைத் தின்றும் சாவது! இவர்கள் எல்லாம் ஏன் ஸார் வருகிறார்கள்?" என்றார்.
"ஆமாம்; ஒன்று நம்மைப் போல் நூறு, ஆயிரம் லட்சியமில்லாமலாவது இருக்கவேண்டும்; அல்லது சரியாய்க் கணக்குப் பார்த்து நிதானமாய் ஆடவேண்டும். இரண்டுங் கெட்டான் பேர்வழிகள் எல்லாம் வரக் கூடாது" என்றார் அவர் நண்பர்.
வண்டி பார்க் ஸ்டேஷனில் வந்து நின்றது. "என்னுடைய அறைக்கு வருகிறாயா?" என்று சீனு கேட்டான்.
"ஆமாம் வருகிறேன். இன்றிரவு அம்மாவின் முகத்தில் விழிக்க என்னால் முடியாது" என்றான் ராஜு.
இருவரும் இறங்கிச் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த சீனுவின் அறைக்குச் சென்றார்கள்.
நெருப்புப் பெட்டியைத் தேடி எடுத்து விளக்கேற்றி வைத்துவிட்டு, "உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?" என்று சீனு கேட்டான்.
"ஏன்?"
"இன்றிரவு நான் தனியாயிருந்தால் ஏதாவது விபத்து நேருவது நிச்சயம். தூக்குப் போட்டுக் கொள்வேன்."
"நீ கூடவா அப்படி? அவ்வளவு நஷ்டம் ஆகி விட்டதா?"
"உனக்கு ஞாபகமிருக்குமே? பாகவதர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து நான் சண்டை போட்டுக் கொண்டு விலகிய போது என்னிடம் 20,000 ரூபாய் பணம் இருந்தது. எல்லாம் போய்விட்டது. நாளைக்குக் காப்பி சாப்பிடப் பணம் கிடையாது."
"உனக்கென்ன அப்பா! என்ன போனால் தான் என்ன? பெண்டாட்டி பிள்ளையா, தாய் தகப்பனாரா, ஒருவரும் இல்லை. உன் ஒருவனுக்கு எப்படியும் சம்பாதித்துக் கொள்வாய். நீ கொடுத்து வைத்தவன்."
"ரொம்பக் கொடுத்த வைத்தவன் நான். இருக்கட்டும், உன் சங்கதி என்ன? தாயார் முகத்தில் விழிக்க முடியாதென்று சொன்னாயே; ஏன்?"
"ஆமாம், வீட்டு வாடகை இரண்டுமாதம் பாக்கி. நாளைக்கு அரிசி இல்லை. 250 ரூபாய் கடன் இருக்கிறது; கடன்காரன் 'பிராது செய்வேன்' என்கிறான்."
"ஊரிலே நிலம் இருந்ததே?"
"அதெல்லாம் முன்னமே கடன்காரன் கொண்டு போய்விட்டான்."
"அடப்பாவி! அப்படியானால் என்ன செய்யப் போகிறாய்?"
"பெண்டாட்டி கழுத்தில் சங்கிலிதான் பாக்கியிருக்கிறது. அதைக்கேட்டு வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று தோன்றுகிறது."
இப்படிச் சொல்லும்பொழுது ராஜுவின் கண்களில் நீர் ததும்பிற்று. சற்று நேரம் விம்மி விம்மி அழுதான். சீனு அவனைத் தன் தோளில் சார்த்திக் கொண்டு சமாதானப்படுத்தினான். இருவரும் பால்ய நண்பர்கள்.
*****
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
"தப்பிலி கப்" - Thappili Cup - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றார், கொண்டு, குதிரை, அவர், என்ன, ஆமாம், பணம், மேல், போனால், தான், எல்லாம், நான், ஒருவர், முதலியார், போகிறது, ரெயில், போல், சீனு, இவர்கள், போட்டுக், இல்லை, நாயுடு, வேண்டும், சொல்லிக், அப்படி, கூடாது, கணக்குப், உட்கார்ந்திருந்த