"தப்பிலி கப்"
சீனு சட்டென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான்.
ராஜுவின் தோளைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான். "இதோ பார், ராஜு
ஒரு யுக்தி! முதல் தரமான யோசனை. நிமிர்ந்து உட்கார்ந்து கேள்" என்றான்.
"இனிமேல் என்ன யோசனை செய்து என்ன காரியம் நடக்கப் போகிறது?" என்றான் ராஜு.
"சீச்சீ! இவ்வளவுதானா? எழுந்திரு, சொல்லுகிறேன். எவனொருவன் தனக்கு வரும் விபத்துக்களையும் லாபகரம் ஆக்கிக் கொள்கிறானோ அவனல்லவா மனிதன்?"
"சரி; சரி! உன்னுடைய நாடகப் பேச்சில் ஆரம்பித்து விட்டாயாக்கும். என்ன தான் அந்த அற்புத யோசனை? சொல்" என்று கேட்டுக் கொண்டே ராஜு எழுந்து உட்கார்ந்தான்.
"இதோ பார்! நீயோ ஆசிரியன். நான் பெயர் பெற்ற நடிகன். நாம் இருவரும் சேர்ந்து வெற்றி பெறாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது? இத்தனை நாளும் நீ சிரமப்பட்டு நாவல் எழுதிப் பிறரிடம் கொடுத்துப் பாரத்துக்கு (16 பக்கத்திற்கு) 4 ரூபாயும், 5 ரூபாயும் பெற்று வந்திருக்கிறாய்; போதும் இந்தத் தொழில். இப்பொழுது ஒரு நாடகம் எழுது. குதிரைப் பந்தயத்தைப்பற்றி எழுது. உன்னுடைய அநுபவத்தையே முக்கிய சம்பவமாய்க் கொண்டு கொஞ்சம் காது மூக்கு வைத்து எழுதினால் போதும். நான் 'ஸ்திரீ பார்ட்' போட்டுக் கொள்கிறேன். நாடக உலகத்தை நான் விட்டு மூன்று வருஷந்தான் ஆயிற்று. இப்போதும் என் பெயரைக் கேட்டே நாடகத்துக்கு வரக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீ கதாநாயகனாக நடிக்கலாம். அதற்கு உன்னைத் தயார் செய்து விடுகிறேன். உனக்குச் சொந்த அநுபவம் இருக்கிறபடியால் உன் அளவு சோகரசத்துடன் யாரும் நடிக்க முடியாது. பாக்கி எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ நாடகம் மட்டும் எழுது" என்றான்.
"யோசனை நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் நாடகம் நடத்துவது அவ்வளவு சுலபமா? முதலில் தயார் செய்வதற்கெல்லாம் பணம் வேண்டாமா?"
"உனக்கேன் இந்தக் கவலை? எனக்கு வந்த மெடல்களை மட்டும் இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன். அவைகளை விற்றாவது நான் வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன். அதிகம் வேண்டாம்; அடுத்தடுத்து மூன்றே நாடகம் போடுவோம். அதற்குமேல் போட்டால் புளித்துப் போய்விடும். நாடகத்துக்கு ரூ.1000 வீதம் குறைந்தது ரூ.3000 மீதமாகும். தலைக்குப் பாதியாக எடுத்துக் கொள்வோம்."
"எனக்கு இன்னொன்று கூடத் தோன்றுகிறது. புத்தகத்தையும் முதலியேயே அச்சுப் போட்டுவிட்டால், நாடகக் கொட்டகையிலேயே விற்கலாம். மூன்று நாளுக்குள் முதல் பதிப்பு விற்றுவிடும், அதில் குறைந்தது 500 ரூபாயாவது வரும்" என்றான் ராஜு.
"அதற்கென்ன! அப்படியே செய்யலாம். புத்தக லாபம் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள். அதற்குப் பிறகு மற்ற நாடகக் கம்பெனியாரும் அந்த நாடகத்தை நடந்த அநுமதி கேட்பார்கள். அவர்களிடம் நாடகத்துக்கு 50 ரூபாய்க்குக் குறையாமல் வாங்கலாம்."
"சரி, சீனு! இது மட்டும் நிறைவேறினால் நான் பிழைப்பேன்; என் குடும்பத்தையே காப்பாற்றியவனாவாய். இன்றிரவே நாடகம் எழுதி ஆரம்பிக்கிறேன். காப்பி சாப்பிட்டுவிட்டு வருவோம், வா."
எனவே, இரவு ஒன்பது மணிக்கு இருவரும் போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். ராஜு காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.
"நாடகத்துக்கு என்ன பெயர் கொடுக்கிறாய்?"
"தப்பிலி கப்"
"பேஷ்! நல்ல பெயர். சத்தியமே ஜயம். எழுது" என்றான் சீனு.
*****
உலகத்து மக்களை இட்டார் என்றும், இடாதார்
என்றும் பிரித்து, "சாதியிரண்டொழிய வேறில்லை" என்றாள் ஔவை. அந்தக் கிழவிக்குப்
பின்னால் இன்னும் அநேகர் ஜனங்களை இரு பிரிவாக்க முயன்றிருக்கின்றனர்.
வெள்ளைக்காரர் - கறுப்பு மனிதர், முதலாளிகள் - தொழிலாளிகள், கடன் கொடுப்பவர்
- கடன் வாங்குபவர், பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற பிரிவுகளைப் பற்றிக்
கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் சென்னை நகர மாந்தரைப் பொறுத்த வரையில்
இந்தப் பிரிவுகளையெல்லாம் விட, "குதிரைப் பந்தயத்திற்குப் போகிறவர் -
போகாதவர்" என்ற பிரிவினை அதிகப் பொருத்தமாயிருக்கும். சீனு இந்த நிலைமையை
அறிந்தவன். ஜனங்களின் மனோபாவத்தை அவன் நன்கு கண்டிருந்தான். ஆதலின்,
அவனுடைய யுக்தி ஆச்சரியகரமான பலனை அளித்தது.*****
ராயல் தியேட்டரில் "தப்பிலி கப்" நாடகம் போடப்பட்ட அன்று அந்தப் பெரிய கொட்டகை முழுவதும் ஏறக்குறைய நிறைந்திருந்தது. குதிரைப் பந்தயத்துக்குப் போவோர் இயல்பாக அந்த நாடகத்தின் பெயரினாலேயே கவரப்பட்டு வந்து சேர்ந்தனர்.
குதிரைப் பந்தயத்திற்குப் போகாதவர்களோ தங்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் குதிரைப் பந்தயத்திற்குப் போய்க் கெட்டுப் போவதைத் தடுப்பதற்கு இந்த நாடகம் பயன் படலாமென்ற நம்பிக்கையுடன் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, கொட்டகை நிரம்பிற்று.
நாடகத்தின் கதை என்னமோ சாமானியமானது தான். கதாநாயகன் சென்னையில் ஓர் அட்வொகேட். தொழில் ஆரம்பித்து இரண்டு வருஷந்தான் ஆயிற்று. "பிராக்டிஸ்" அதிகமில்லை. அவனுடைய மாமனார் (கதாநாயகியின் தந்தை) ஓர் எம்.எல்.சி. பெரிய இடங்களுக்கு அதிகம் வேண்டியவர். ஜில்லா முன்சீப் வேலைக்குக் கூடிய சீக்கிரம் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார்.
முதல் காட்சியில் கதாநாயகி "இந்த வருஷம் கோடைக்கு ஊட்டிக்குப் போகலாமா?" என்று கேட்கிறாள். தன் அருமை மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், பாங்கிக் கணக்கில் மூன்று கலமும் பூஜ்யமாயிருப்பதை எண்ணிக் கதாநாயகன் கலங்குகிறான். ஆயினும், அதை அவளிடம் சொல்லாமல் ஊட்டிக்குப் போகாததற்கு வேறு ஏதோ பொய்க் காரணம் கற்பித்துக் கூறுகிறான்.
இவ்வாறு நாடகமானது ஆரம்பத்திலேயே தொடங்கி ஜனங்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறது.
ஊட்டிக்குப் போகவேண்டும் என்னும் தன் மனைவியின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்று கதாநாயகன் அல்லும் பகலும் அதே கவலையாக இருக்கையில், அவனுடைய நண்பன் ஒருவன் குதிரைப் பந்தயத்தைப் பற்றி அவனுக்குச் சொல்கிறான். அதில் பத்தாயிரம், லட்சம் என்று பணம் சம்பாதித்தவர்களைப் பற்றி அவன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கதாநாயகனுக்குப் பந்தயப் பைத்தியம் பலமாகப் பிடித்து விடுகிறது. அது முதல் அவன் குதிரைப் பந்தயத்திற்குப் போக ஆரம்பிக்கிறான். ஆனால் மனைவியிடம் இதை மறைத்து விடுகிறான். திடீரென்று ஒரு நாள் "நாளை நாம் ஊட்டிக்குப் போகிறோம்" என்று சொல்லித் திடுக்கிடச் செய்ய வேண்டும் என்று மனோ ராஜ்யம் செய்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
"தப்பிலி கப்" - Thappili Cup - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குதிரைப், நாடகம், நான், என்ன, என்றான், ராஜு, நாடகத்துக்கு, ஊட்டிக்குப், பந்தயத்திற்குப், எழுது, சீனு, யோசனை, அவனுடைய, கதாநாயகன், அவன், எனக்கு, மூன்று, பெயர், மட்டும், அந்த