ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
6
ஒன்பது மாதமும் சென்றது. வஸுந்தரா விடுதலையடைந்தாள்.
விடுதலையில் எவ்வளவு குதூகலத்தை எதிர் பார்த்தாளோ, அதில் ஒரு பகுதி கூட
ஏற்படவில்லை. சிறை வாசலில் ஒரு வேளை யாரையாவது எதிர்பார்த்திருந்து அவர்
வராததனால் ஏமாற்றம் அடைந்தாளோ?
வழக்கம் போல் வேலூரிலிருந்து சில காங்கிரஸ் அபிமானிகள் அவளை வரவேற்று அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றி விட்டார்கள்.
இரவு ஒரு நிமிஷங்கூட அவள் தூங்கவில்லை. இடையிடையே வண்டி நிற்கும் போதெல்லாம் பிளாட்பாரத்தில் குறுக்கே நெடுக்கே போகிறவர்களைக் கூப்பிட்டு, "ஸ்ரீகாந்தனைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்கலாமாவென அவளுக்குத் தோன்றும்.
ஒன்பது மாதத்துக்கு முன்பு கைதியாக ரயிலேறிய அதே ஸ்டேஷனில் இப்போது வஸுந்தரா சுதந்திரமுள்ள ஸ்திரீயாக வந்து இறங்கினாள். ஆனால் அப்போது மனத்திலிருந்த குதூகலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை.
பிளாட்பாரத்தில் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மனிதர் எங்கும் காணப்படவில்லை. ஆனால் அவளுடன் கைதியான இரண்டு ஸ்திரீகளும் வந்திருந்தார்கள். அவர்கள் அவளை வெகு பிரியத்துடன் தழுவிக் கொண்டு அழைத்துச் சென்றார்கள். வெளியே வந்ததும், அவர்கள் அமர்த்தியிருந்த வண்டியில் மூவரும் ஏறிக்கொண்டனர்.
சிறைச்சாலை யோக ஷேமங்களை விசாரித்த பிறகு, "இப்போது யார் இங்கே காங்கிரஸ் காரியதரிசி?" என்று வஸுந்தரா கேட்டாள்.
"இங்கே இப்போது காங்கிரஸுமில்லை; காரியதரிசியுமில்லை."
"நிஜமாகவா? ஸ்ரீகாந்தன் கூடவா ஒன்றும் செய்யவில்லை?"
"ஸ்ரீகாந்தனா? உனக்குச் சமாசாரம் தெரியாதா?"
"தெரியாதே. என்ன சமாசாரம்? மறுபடியும் ஜெயிலுக்குப் போய் விட்டாரா, என்ன?"
வஸுந்தராவின் நெஞ்சு அப்போது உண்மையாகவே துடிதுடித்தது.
"அவர் ஏன் ஜெயிலுக்குப் போகிறார்? அவருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?"
வஸுந்தரா கொஞ்சம் ஆறுதலடைந்தாள். 'இவர்களுக்கென்ன, பிறத்தியார்மேல் புகார் சொல்வதுதான் வேலை. அவர் ஏன் அவசரப்பட்டுக் கொண்டு ஜெயிலுக்குப் போக வேண்டும்?'
"இப்போது ஊரில் இருக்கிறாரா?" என்று கேட்டாள்.
"ஊரில் எப்படி இருப்பார்? அவருக்கு இன்றைக்குப் பாண்டிச்சேரியில் கல்யாணம். பாவம், அது உனக்கு எப்படித் தெரியும்?"
ஐந்து நிமிஷம் கழித்துத் தழதழத்த குரலில் வஸுந்தரா கேட்டாள்: "எதற்காகப் பாண்டிச்சேரியில் கல்யாணம்?"
"பெண்ணுக்குப் பதிமூன்று வயது; சாரதா சட்டத்தை ஏமாற்றுவதற்காக அங்கே போய்ப் பண்ணுகிறார்கள்!"
வஸுந்தராவின் வீட்டு வாசலிலேயே அந்தச் சிநேகிதர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். ராமகிருஷ்ணய்யர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தவர், வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் பிடிலை நிறுத்தினார்.
"குழந்தாய்!" என்றார்.
"அப்பா!" என்று அலறிக் கொண்டு வஸுந்தரா ஓடி வந்து அவருடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள். இருவரும் கண்ணீரைப் பெருக்கி விம்மி விம்மி அழுதார்கள்.
அரை மணி நேரம் கழித்து அழுகை ஒருவாறு நின்ற பொழுது வஸுந்தரா, "அப்பா! ஸேவாசிரமத்துக்குக் கடிதம் எழுதிவிடுங்கள்; நாம் நாளைக்கே சென்னைக்குப் புறப்படலாமல்லவா?" என்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் - Srikandhan Punarjenmam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வஸுந்தரா, இப்போது, ஜெயிலுக்குப், கேட்டாள், கொண்டு, அவர்