ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
5
ஸ்ரீகாந்தனுடைய துணிவையும் தியாகத்தையும்
பற்றி ஊரில் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவனைப் பின்பற்றுவதற்கு
ரொம்பப் பேர் தயாராயில்லை. "நாம் ஜெயிலுக்குப் போவதாயிருந்தால் வேறு
வழிகளை அனுசரிக்கலாம்; திருடலாம்; போர்ஜரி செய்யலாம்; வேறு ஏதாவது பண்ணலாம்.
இந்த மறியல் சமாசாரம் மட்டும் வேண்டாம்" என்று அவர்களெல்லாம் எண்ணியதாகத்
தோன்றியது.
இந்த நிலைமையை வஸுந்தராவினால் சகிக்க முடியவில்லை. ஒரு வாரம் வரையில் ஏதோ முயற்சி செய்து பார்த்தாள்; அதற்குப் பிறகு, தான் வெளியில் இருப்பதில் பயன் ஒன்றுமில்லையென்று கண்டு இன்னும் இரண்டு ஸ்திரீ தொண்டர்களுடன் மறியலுக்குப் புறப்பட்டாள். புறப்பட்ட இடத்திலேயே அவர்களைக் கைது செய்து கொண்டு போனார்கள். மற்ற இருவருக்கும் மூன்று மாதமும், வஸுந்தராவுக்கு மட்டும் ஒன்பது மாதமும் சிறைவாசம் கிடைத்தது. தள்ளாத வயதில் தன்னைத் தவிர வேறு ஆதரவில்லாத தந்தையைத் தனியே விட்டுப் போவது அவளுக்கு எத்தனையோ கஷ்டமாய்த்தானிருந்தது. ஆனால் அப்போது நம் தேசத்தில் இம்மாதிரி வெறி கொண்ட செயல்களை அநேகர் செய்யத் துணிந்தனர்.
வேலூர் ஸ்திரீகள் சிறைச்சாலையில் அவ்வருஷம் வைக்கப்பட்டிருந்த தேச சேவிகைகளில் வஸுந்தராவைப் போல் உற்சாகமாயிருந்தவர்கள் வேறு யாருமில்லையென்றே சொல்லலாம்.
அவளுடைய சிந்தனைகளில் ஸ்ரீகாந்தன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான் என்று சொல்லவேண்டியதில்லை. வருங்காலத்தைப்பற்றி எவ்வளவு விதமாக அவள் யோசித்தாலும், அது ஸ்ரீகாந்தனில் வந்தே முடிந்தது. கடைசியில், தங்களிருவரையும் பகவானே ஒன்று சேர்த்தாரென்றும், சமூகத்தின் எதிர்ப்பு எப்படியிருந்தபோதிலும் தாங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்தே தேச சேவையில் வாழ் நாளைக் கழிக்க வேண்டுமென்றும் அவள் உறுதி கொண்டாள்.
ஏறக்குறைய ஆறு மாதம் சென்றபோது அவளுடைய உள்ளத்தில் பரபரப்பு அதிகம் ஏற்பட்டது. ஸ்ரீகாந்தன் சீக்கிரம் விடுதலையடைந்துவிடுவான். தன்னைப் பார்க்க வருவான் என்ற எண்ணம் அவள் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. ஆறு மாதம் முடியவும் அவள் தினந்தோறும் அவனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்க்கத் தொடங்கினாள். இன்று வரும், நாளை வரும் என்று எதிர்பார்த்துப் பார்த்து ஒரு மாதம் சென்றுவிட்டது; "ஒரு வேளை விடுதலையாகி வந்ததும் மறுபடியும் சட்டமறுப்புச் செய்து சிறை புகுந்து விட்டாரோ" என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சு துணுக்குற்றது. 'ஐயோ! தான் விடுதலையடையும் வரையிலாவது அவர் வெளியிலிருக்கக் கூடாதா?'
இந்த எண்ணம் தோன்றிய பிறகு அவளால் சும்மா இருக்க முடியவில்லை. "ஊரில் முக்கிய விசேஷங்களையெல்லாம் அடுத்த கடிதத்தில் கட்டாயம் எழுதவும்" என்று தகப்பனாருக்கு எழுதினாள். தகப்பனாரிடமிருந்து பதில் வந்தது. அதில் சில வரிகள் ஜெயில் அதிகாரிகளினால் அடிக்கப்பட்டிருந்தன. அந்த வரிகளில் இரண்டு இடத்தில் ஸ்ரீகாந்தன் என்னும் பெயர் இருப்பதாக வஸுந்தராவுக்குத் தோன்றிற்று. இதனால் அவளுடைய மனச் சஞ்சலம் இன்னும் அதிகமாயிற்று.
தகப்பனாருடைய கடிதத்தில் இன்னொரு விஷயமும் இருந்தது; சென்னையில் வஸுந்தரா கல்வி பயின்று தேறிய ஸேவாசிரமத்தில் ஓர் உபாத்தியாயினி வேலை காலியாயிருப்பதாகவும், வஸுந்தரா விடுதலை பெற்றதும் சென்னைக்கு வந்து அந்த வேலையை ஒப்புக் கொள்ளும்படியாகவும் தகவல் வந்திருப்பதாய் அவர் எழுதியிருந்தார்.
மேற்படி ஸேவாசிரமத்தின் தலைவி ஓர் அபூர்வமான ஸ்திரீ. முக்கியமாக வஸுந்தராவிடம் அவர் விசேஷ பிரியம் வைத்திருந்தார். அவள் சிறை சென்றதையும், இனிமேல் முனிசிபல் பள்ளிக்கூடங்களில் அவளுக்கு வேலை கிடைப்பது கஷ்டமென்பதையும் அறிந்து தாமாகவே இந்த ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் வஸுந்தராவுக்கு இதைப் படித்ததும் புன்னகை உண்டாயிற்று. சென்னைக்குத் திரும்புவதா? ஸேவாசிரமத்தில் வேலையா? - தன்னுடைய வாழ்க்கை இப்போது ஸ்ரீகாந்தனுடைய வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் என்ன கண்டார்கள்?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் - Srikandhan Punarjenmam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவள், வேறு, அவளுடைய, அவர், மாதம், ஸ்ரீகாந்தன், செய்து