ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
4
ஒருநாள் ராமகிருஷ்ணய்யர் வஸுந்தராவை அருகில்
உட்கார வைத்துக் கொண்டு, "அம்மா, உன்னையும் ஸ்ரீகாந்தனையும் பற்றி உலகில்
பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்களே? இந்தக் கிழவன் காதுக்குக் கூட அது
எட்டியிருக்கிறது. அதன் உண்மை என்ன, அம்மா?" என்று கேட்டார்.
"என்ன, அப்பா பேசிக்கொள்கிறார்கள்?"
"நீங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய்ச் சொல்கிறார்கள்."
"அவ்விதம் நேர்ந்தால் உங்களுக்கு அது இஷ்டமாயிராதா, அப்பா! அப்படியானால் நான் கனவில் கூட..."
ராமகிருஷ்ணய்யர் ஒரு பெருமூச்சு விட்டு, "குழந்தாய்! நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும். அது தான் பகவானிடம் இரவு பகலாக நான் பிரார்த்தித்து வருவது" என்றார்.
ஏறக்குறைய அதே சமயத்தில் தேசத்தின் அரசியல் நிலைமையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. மகாத்மா காந்தி இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போனவர் சீமையிலிருந்து திரும்பி வந்தார். அவரை வரவேற்பதற்கு அதிகார வர்க்கத்தார் ஆயத்தமாயிருந்தார்கள். மகாத்மா காந்தி வைஸ்ராய் வில்லிங்டனை பேட்டி கேட்டதும், அது மறுக்கப்பட்டதும், பின் அவர் கைது செய்யப்பட்டதும், மீண்டும் சத்தியாக்கிரஹம் தொடங்கப்பட்டதும் சரித்திர சம்பவங்கள்.
இந்த நாட்களில், "ஸ்ரீகாந்தன் என்ன செய்யப் போகிறான்? ஸ்ரீகாந்தன் என்ன செய்யப் போகிறான்?" என்றே ஊரெங்கும் பேச்சாயிருந்தது. அதைப் பற்றி இரண்டு பேருக்கு மட்டும் எவ்விதச் சந்தேகமும் ஏற்படவில்லை. அவர்கள் ஸ்ரீகாந்தனும் வஸுந்தராவுந்தான்.
"நாளையதினம் நானும் இன்னும் ஐந்து தொண்டர்களும் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பி மறியலுக்குப் போகின்றோம். ஆனால் கடைத்தெரு வரையில்கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது. தடியைத் தாராளமாகவே உபயோகிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறதாம்" என்றான் ஸ்ரீகாந்தன்.
"நானும் உங்களுடன் வருவேன்" என்று தழதழத்த குரலில் கூறினாள் வஸுந்தரா.
"கூடவே கூடாது. நாம் இருவரும் முதல் நாளே போய்விட்டால் அப்புறம் ஒன்றுமே நடக்காது. குறைந்தது இரண்டு மாதமாவது நீங்கள் வெளியில் இருக்க வேண்டும்."
கொஞ்ச நேரம் விவாதம் நடந்த பிறகு, ஸ்ரீகாந்தன் சொல்லுவதுதான் சரியென்று வஸுந்தரா ஒப்புக்கொண்டு அப்படியே செய்வதாக வாக்களித்தாள்.
"நாளைக்கு நான் எப்படிச் சகிக்கப் போகிறேனோ தெரியவில்லை. உங்கள் மேல் விழும் அடி ஒவ்வொன்றும் என் இருதயத்தில் விழுவது போலவே எனக்கிருக்கும்" என்றாள்.
"அப்படி நீங்கள் சொன்னால் எனக்கு இருக்கிற தைரியமும் போய்விடும்."
"நான் சொன்னது தவறுதான்; மன்னியுங்கள், என்ன இருந்தாலும் ஸ்திரீ புத்திதானே?"
"நான் வேறுவிதமாய் எண்ணிக்கொள்வேன். என் மேல் அடிவிழும்போது உங்கள் மேல் அடிகள் விழாமல் தடுப்பதாக எண்ணிக் கொள்வேன். அப்போது மும்மடங்கு தைரியம் எனக்குண்டாகும். உண்மையும் அதுதானே? என் இருதயத்தில் நீங்கள் இருக்கிறீர்களல்லவா?"
அந்த 1932ஆம் வருஷத்தில் பாரதநாட்டில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் - ஏதோ தெய்வீக சக்தியினால் - மகத்தான வீர புருஷர்கள் ஆனார்கள். தடியடி, படுகாயம், பலநாள் ஆஸ்பத்திரிச் சிகிச்சை, அதற்குப் பிறகு வருஷக் கணக்கில் சிறைவாசம் இவற்றை எதிர்பார்த்துக் கொண்டு அவர்கள் பத்தி பத்தியாய்ச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்களில் ஸ்ரீகாந்தனும் அவனுடைய ஐந்து சகாக்களும் சேர்ந்தவர்கள். கஷ்டமென்பதையும் நொவென்பதையும் இன்னதென்று அறியாமல் உருண்டு திரண்டு வளர்ந்திருந்த அவனுடைய தோள்களிலும், முதுகிலும், கால்களிலும் அடி விழ விழ, அவனுடைய வாய் 'வந்தே மாதரம்!' என்று பன்மடங்கு உரத்த சப்தத்துடன் கோஷித்தது.
கடைசியில் அவர்கள் ஸ்மரணையற்று விழுந்த பிறகு போலீஸார் அடிப்பதை நிறுத்தி அவர்களைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போனார்கள். மறுநாள் அவர்கள் எல்லாரும் ஆறு ஆறு மாதம் சிறைத் தண்டனை அடைந்தனர்.
அந்த இரண்டு நாளும் ஸ்ரீகாந்தனுடைய வீட்டில் அல்லோலகல்லோலமாயிருந்தது. அவனுடைய தமக்கைமார் பட்ட கவலைக்கு அளவேயில்லை. "ஐயோ! அப்பாவின் பென்ஷனுக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே?" என்று அவர்கள் பரிதபித்தார்கள். "அப்பவே ஒரு கால்கட்டைக் கட்டிவிடு என்று சொன்னேனே! என் வார்த்தையை ஒருவரும் கேட்கவில்லையே!" என்று அம்மா கதறினாள்.
அந்த மாஜி ஸப்ஜட்ஜின் நிலைமையை நான் என்னவென்று சொல்லட்டும்? 'இனிமேல் காங்கிரஸ்காரர்கள் தானே அரசாங்கத்தில் அதிகாரம் வகிக்கப் போகிறார்கள்? அந்த லயனிலாவது பையனுக்கு ஏதாவது உத்தியோகம் ஆகட்டும்' என்று அவர் எண்ணியிருந்தார். அதனால் தான், ஸ்ரீகாந்தன் காங்கிரஸ் காரியதரிசி ஆனதையெல்லாம் அவர் ஆட்சேபிக்கவில்லை. இப்போது அது விபரீதமாய் முடிந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் - Srikandhan Punarjenmam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், என்ன, ஸ்ரீகாந்தன், அந்த, நீங்கள், அவனுடைய, மேல், பிறகு, அவர், அம்மா, கொண்டு, இரண்டு