ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
1
ஸ்ரீகாந்தன் பெரிய மனுஷாள் வீட்டுப் பிள்ளை.
அவனைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அது தெரிந்து போய்விடும். அவனைப் பெரிய
மனுஷாள் வீட்டுப் பையன் என்பதாக லவலேசமும் சந்தேகிப்பதற்கு இடமிராது.
ஸ்ரீகாந்தனுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இவ்வுலகில் சேர்ந்தாற்போல் ஜனனம் ஏற்பட்டது. வளர்வதிலும் அவர்களுக்குள் இந்தப் போட்டி இருந்து வந்தது. ஸ்ரீகாந்தனுக்கு ஒரு வயது நிறைந்தால், இருபதாம் நூற்றாண்டுக்கும் ஒரு வருஷம் பூர்த்தியாகும். இப்படியாக இருபதாம் நூற்றாண்டு 1931 ஆம் வருஷத்தையடைந்த போது, ஸ்ரீகாந்தனும் 31 ஆவது பிராயத்தை அடைந்தான் மேலே போவதற்கு முன்னால் இந்த முப்பது வருஷத்தில் ஸ்ரீகாந்தனுடைய சரித்திரத்தையும், அவனைச் சேர்ந்தவர்களின் சரித்திரத்தையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
அப்பா: ஸ்ரீகாந்தன் பிறந்தபோது ஏகாம்பரய்யர் ஜில்லா முனிசீப்; சீக்கிரத்தில் அவருக்கு ஸப் ஜட்ஜ் உத்தியோகம் ஆகவே, அய்யர்வாளைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் "ஸ்ரீகாந்தன் பிறந்த வேளை" என்று சொன்னார்கள். பல வருஷம் உத்தியோகம் பார்த்த பின்னர், அவர் ஐம்பத்தைந்து என்று சொல்லப்படுகிற ஐம்பத்தெட்டாவது வயதில் பென்ஷன் பெற்று, இன்று வரை வாங்கிக் கொண்டு வருகிறார். ஒரு மாதமாவது வேண்டாமென்று சொல்லவில்லை. வைதிக காரியங்களை மிகவும் சிரத்தையாகப் பண்ணுகிறவர். அந்த ஊர் பஞ்சாமி கனபாடிகள் தம்முடைய பெண்ணின் கல்யாணச் செலவுக்கு அய்யர்வாளையே நம்பியிருக்கிறார். கனபாடிகளின் விரோதிகள், அய்யர்வாளின் வருஷாப்திகத்தை அவர் மேற்படி காரியத்துக்கு நம்பியிருப்பதாகச் சொல்வார்கள்.
அம்மா: ஸ்ரீகாந்தனுடைய தாயாரைப் பார்த்தவர்கள், 'மகாலக்ஷ்மிக்குச் சகோதரி ஒருத்தி இருக்க முடியுமானால், அவள் இவள் தான்; இவள் அவள் தான்' என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள். பெரிய குடும்பத்தில் பிறந்தவள் இந்த மாதரசி. (இவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் பதினொரு பேரும், கூடப் பிறக்காதவர்கள் இன்னும் அநேகரும் உண்டு) புகுந்த குடும்பமும் இவளால் பெரிதாகியே வந்தது. இந்த அம்மாளுக்குக் கச்சேரிக்குப் போகும் புருஷனும், நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்ட நாலு குமாரிகளும், அவர்களைக் கண்ணையும் கண்ணாடியையும் போல் பாதுகாக்கும் நாலு மாப்பிள்ளைகளும், திரளான பேரன் பேத்திகளும், மற்றும் பல சௌபாக்கியங்களும் இருந்தும், ஒரே ஒரு மனக்குறை மட்டும் இருந்தது. வாசலில் வந்து, "அம்மா! பிச்சை" என்று கேட்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி "இல்லை!" என்று சொல்லியனுப்ப வீட்டில் ஒரு மாட்டுப் பெண் இல்லையே என்பதுதான் அந்த குறை. இத்தனைக்கும் காலாகாலத்தில் பிள்ளையாண்டானுக்குக் கலியாணம் பண்ணி வைத்ததில் குறைச்சல் உண்டா?
சகோதரிகள்: ஸ்ரீகாந்தனுக்கு முன்னால் அவனுடைய பெற்றோர்களுக்கு பிறந்த நாலு புதல்விகளும் ஸ்ரீகாந்தனுடைய மூத்த சகோதரிகளாகவும் ஏற்பட்டது ஒரு விசித்திரமே. அவர்கள் ஸ்ரீகாந்தன் மேல் வைத்திருந்த பிரியத்தையோ கேவலம் மரக்கால் படியினால் அளவிட முடியாது. அவன் கைக்குழந்தையாயிருந்தபோது ஒரு நிமிஷம் அவனை அவர்கள் தரையில் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அவனுக்குப் பல் முளைத்த பிறகு யார் அவனுக்குப் பல் தேய்ப்பது என்பது பற்றிப் பலத்த போட்டி அவர் வளர்ந்த பிறகு யார் அதைப் பின்னுவது என்று சண்டை போடுவார்கள். அவனுக்குக் கலியாணம் நடந்த போது, யார் அவனுடைய கண்களுக்கு மையிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டு, கடைசியில் நாலு பேரும் மையிடவே, அவனுடைய கண்கள் - எப்போதும் மற்ற அவயங்களின் துன்பத்துக்காக அழுகிற கண்கள் - தங்கள் சொந்தத்திற்கே அழ வேண்டியதாயிற்று. உண்மையில் அந்த நாலு நாள் கலியாணத்தின் போது தான் பட்ட கஷ்டங்களை நினைத்துக் கொண்டால் ஸ்ரீகாந்தனுக்கு இப்போது கூடக் கதிகலங்கத்தான் செய்யும்.
ஸ்ரீகாந்தனுடைய மனைவியைப் பற்றிச் சொல்வதில் இன்னும் நான் காலந் தாழ்த்தினால் கதை மேலே ஓடாது.
ஸஹதர்மினி: ஸ்ரீகாந்தனுக்குப் பதினெட்டாவது வயதிலேயே கலியாணம் நடந்தது. அதாவது, ஐந்நூறு வேலி மிராசுதாருடைய ஒரே கடைக்குட்டிப் பெண். அப்போது அவளுக்கு வயது பன்னிரண்டு. அழுகையில் அவள் ரதிக்குச் சமமாயிருந்தாள். ஆமாம், அழுகையில் தான். (மன்மதன் இறந்ததும் ரதி அழுதது ஜகப் பிரசித்தமன்றோ?) குடுகுடுவென்று அவள் ஓடும்போது நாம் பார்த்திருந்தால், "சுவரில் எழுதிய எந்தத் திவ்ய சித்திரந்தான் இப்படி ஓட முடியும்?" என்று ஆச்சரியப்பட்டிருப்போம்.
ஆகவே ஸ்ரீகாந்தன் அவள் பேரில் கணக்கு வழக்கில்லாத காதல் கொண்டிருந்ததில் ஆச்சரியமென்ன? அவர்களுடைய சாந்தி கலியாணத்தன்று இரவு, ஸ்ரீகாந்தனும் அவனுடைய மனைவியும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு, விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு, சீட்டாடிய விவரம் கேள்விப்பட்டவர்களுக்கெல்லாம் தெரிந்தேயிருக்கும்.
ஆனால், அவர்களைப் பார்த்து எந்தப் பாவி பொறாமை பட்டானோ, எந்தத் துஷ்டை திருஷ்டி வைத்தாளோ, தெரியாது; சீக்கிரம் அவர்களுடைய காதல் வாழ்க்கை முடிவுற்றது. ஸ்ரீகாந்தன் மனைவிக்கு என்னவோ வந்துவிட்டது. சிலர், "வியாதி" என்றார்கள். சிலர் "இல்லை; ஹிஸ்டீரியா" என்றார்கள். வேறு சிலர், "பிசாசு பிடித்திருக்கிறது" என்றார்கள். "ஏவல், சூனியம்" என்றவர்களும் உண்டு. "மாமியார் மருந்திட்டாள்" என்றார்கள் சில பொல்லாத் துஷ்டர்கள். யார் என்ன சொன்னால் என்ன? கணவன் வீட்டுக்கு வந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் அந்தப் பெண் பிறந்த வீட்டுக்குப் போனாள். போனவள் மறுபடி திரும்பி வரவேயில்லை. ஐந்தாறு வருஷம் தகப்பனார் வீட்டிலேயே நோயும் நொடியுமாய்க் காலந் தள்ளிவிட்டுக் கடைசியில் இந்தத் துக்க உலகத்தை நீத்துச் சென்றாள். அவள் புத்திசாலி என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இனிமேல் பயமின்றி நாம் ஸ்ரீகாந்தனைப் பற்றியும் சிறிது கவனிக்கலாம்.
ஸ்ரீகாந்தன்: உருவத்தில் அவன் ஏறக்குறைய மன்மதனையொத்திருந்தான். மன்மதனுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண் ஒரு மூக்கு எல்லாம் (அவன் எரிந்து போவதற்கு முன்) இருந்தது போல் ஸ்ரீகாந்தனுக்கும் இருந்தன. மற்றபடி குண விசேஷங்களில் அவன் மன்மதனுடன் முற்றிலும் மாறுபட்டான். சாயங்கால வேளைகளில், கரும்பு வில்லும் கையுமாக, பிரிந்திருக்கும் ஸ்திரீ புருஷர்களைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதில் அவன் டவுன் ஹால் கிளப்பை நோக்கிச் சென்றான். அங்கே போய், பிங்-பாங் விளையாடினான். உண்மையில் மனைவி பிறந்தகத்திற்குப் போன பிறகு அவனுக்கு வாழ்க்கையில் இருந்த ருசியெல்லாம் இந்தப் பிங்-பாங்கின் மேல் ஏற்பட்டதேயாகும். அந்த விளையாட்டில் வெகு தேர்ச்சியடைந்து அநேக பந்தய ஆட்டங்களில் வெற்றி பெற்றுப் பல 'கப்' களும் வாங்கினான். அவையெல்லாம், அவனுடைய கலியாணத்தின் போது பரிசாக வந்த கண்ணாடி பீரோவில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீகாந்தன் பி.ஏ. பாஸ் செய்து எப்.எல். வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய மனைவிக்கு மேற்கூறியபடி சித்தப் பிரமை ஏற்பட்டது. அத்துடன் படிப்பை அவன் விட்டுவிட்டான். உத்தியோகத்துக்கு முயற்சி செய்யவுமில்லை. பையன் மனம் ஒடிந்து போகாமல் எப்படியாவது பிள்ளையாய் இலட்சணமாய் இருந்தால் போதும் என்றிருந்த அவன் தகப்பனாரும் அவனை வற்புறுத்தவில்லை.
மனைவி காலஞ்சென்ற பிறகு, அவன் தாயாரும் சகோதரிகளும் புனர் விவாகத்தைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்துவார்கள். அதற்கு ஸ்ரீகாந்தன், "உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். கலியாணம் என்ற பேச்சை எடுக்காதீர்கள்" என்று கூறுவான். அவனுடைய குரலில் தொனித்த பரிதாபமும் பிடிவாதமும் அவனுடைய தாயார், சகோதரிகளின் வாயைக் கூட அப்போதைக்கு அடைத்துவிடும்.
இப்படிப்பட்ட ஸ்ரீகாந்தனுடைய வாழ்க்கையில்தான் அந்த 1931-ஆம் வருஷத்தில் ஓர் அதிசய சம்பவம் நேர்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் - Srikandhan Punarjenmam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸ்ரீகாந்தன், அவனுடைய, அவன், அவள், நாலு, ஸ்ரீகாந்தனுடைய, அந்த, தான், போது, கலியாணம், பிறகு, யார், என்றார்கள், இரண்டு, கொண்டு, பெரிய, சிலர், இருபதாம், ஏற்பட்டது, பிறந்த, வருஷம், அவர், ஸ்ரீகாந்தனுக்கு, போட்டி, பெண்