புன்னைவனத்துப் புலி - முடிவுரை
மலை உச்சியில் நடுக்காட்டில் விழுந்து
எரிந்து போன விமனத்திலிருந்து தர்மராஜன் ஒருவன் மட்டும் எப்படி உயிர்
பிழைத்து வந்தான், அவன் முகமெல்லாம் எப்படி எரிந்து தீய்ந்து கோரமாகப்
போயிருந்தது, வெகுநாள் காட்டில் கஷ்டப்பட்டுப் பிரயாணம் செய்து எப்படிப்
புன்னை வனத்தை வந்து அடைந்தான் என்பதையெல்லாம் சந்திரசூடன் விவரமாக எனக்குக்
கூறினான். இந்தக் கதைக்குச் சம்பந்தமில்லாத படியால் அவற்றை இங்கே நான்
விவரிக்கவில்லை.
"இவ்வளவு விவரம் சொன்னவன், ஒரு விஷயம் மட்டும் கூறாமல் விட்டு விட்டாயே? அந்தக் குடும்பத்தாரின் விஷயத்தில் உனக்கு இவ்வளவு அக்கறை ஏற்படக் காரணம் என்ன? மனோன்மணியின் பேரில் கொண்ட பரிதாபமா? அல்லது அவளுடைய குழந்தையின் மேல் ஏற்பட்ட மோகமா? அல்லது மனோகரின் பேரில் உண்டான கோபமா?" என்று சந்திரசூடனைக் கேட்டேன்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. தர்மராஜன் பம்பாயிலிருந்து ஆகாய விமானத்தில் புறப்பட்டான் அல்லவா? அன்றைக்குக் கிளம்பியிருக்க வேண்டியவன் நான்! என் டிக்கட்டைத்தான் அவனுக்கு மாற்றிக் கொடுத்தேன். அன்று விமானத்தில் நான் கிளம்பியிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும்? எனக்காக உயிரைக் கொடுத்தவனுக்கு நான் இந்த உதவியாவது செய்ய வேண்டாமா?" என்றான் சந்திரசூடன்.
"அவன் தான் பிழைத்து வந்து விட்டானே? உனக்காக உயிரைக் கொடுத்து விடவில்லையே?" என்றேன்.
"அவன் உயிர் அவ்வளவு கெட்டியாயிருந்தது. இருபது பேரில் அவன் ஒருவன் மட்டும் பிழைத்துவந்தான். நானாயிருந்தால் விமானம் விழுகிற போதே செத்துப் போயிருப்பேன்!"
"உன் உயிர் அவன் உயிரை விடக் கெட்டி அப்பனே! அதனால்தான் நீ அன்று புறப்படவே இல்லை?" என்று கேட்டேன் நான்.
சில நாளைக்குப் பிறகு சந்திரசூடன் மறுபடியும் புன்னைவனத்துக்குப் போய், பண்ணையாரிடம் எல்லா விவரங்களையும் சொல்லித் தந்தையையும் மகனையும், மருமகளையும் பேரனையும் சேர்த்து வைத்து விட்டு வந்தான். பண்ணையார் இப்போது ஒரேயடியாகப் பேரப் பிள்ளையின் மோகத்தில் முழுகிப் போயிருக்கிறாராம்! 'சாதியாவது மதமாவது? குணமல்லவா வேண்டும்? என் மருமகளைப் போல் குணசாலி தவம் செய்தாலும் கிடைக்குமா?' என்று அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்!
பழைய உயிலை ரத்து செய்து விட்டுத், தம்முடைய சொத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை அநாதைக் குழந்தைகளின் பராமரிப்புக்கென்று எழுதி வைத்திருக்கிறாராம்.
கடைசியாக, இவ்வளவு நல்ல முடிவுக்குக் காரணமாயிருந்த புன்னைவனத்துப் புலியின் ஞாபகார்த்தமாக ஒரு சமாதி எழுப்பியிருக்கிறார் என்று அறிகிறேன்.
வாழ்க புன்னைவனத்துப் புலி!
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிவுரை - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அவன், உயிர், பேரில், இவ்வளவு, சந்திரசூடன், மட்டும்