புலி ராஜா
5
கடைசியில் நூற்றுக்கு இன்னும் ஒரு புலிதான்
பாக்கி என்ற நிலைமை ஏற்பட்டதும் மகாராஜாவின் பரபரப்பு மிகவும் அதிகமாயிற்று.
பகலில் அதே நினைவு; இரவில் அதே கனவு. இதற்குள்ளே மாமனார் சமஸ்தானத்திலும்
புலிப் பண்ணை வறண்டு போய் விட்டபடியால் புலிகள் அகப்படுவது மிகவும் பிரயாசையாய்ப்
போயிருந்தது. ஆனாலும், இன்னும் ஒன்றே ஒன்றுதானே? இன்னும் ஒரு புலியை
மட்டும் கொன்றுவிட்டால், அப்புறம் பயமே இல்லை. புலி வேட்டையையே விட்டுவிடலாம்.
ஆனால், இந்தக் கடைசிப் புலி விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். காலஞ் சென்ற தலைமை ஜோசியர் என்ன சொன்னார்? 99 புலிகளை மகாராஜா கொன்றபோதிலும் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்! "உண்மைதான் புலி பொல்லாத மிருகம்; ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த நூறாவது புலிக்கு எங்கே போகிறது? புலி கிடைப்பது புலிப்பால் கிடைப்பதைவிடக் கஷ்டமாகிவிட்டதே?"
மகாராஜா இப்படிப்பட்ட கவலையில் ஆழ்ந்திருந்த போது, அந்தக் கவலையைப் போக்கக்கூடிய ஒரு அருமையான சந்தோஷச் செய்தி வந்தது. அந்த சமஸ்தானத்திலேயே மலைக்கிராமம் ஒன்றில் திடீர் திடீரென்று சில ஆடுகள் காணாமல் போய்வந்தன. 'முழு ஆடு விழுங்கின' என்று பெயர் பெற்ற காதர் மியான் சாகிபுவையும், வீராசாமி நாயக்கரையும் விசாரித்து அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று தெரிய வந்தது. புலிதான் வந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாயிற்று. கிராமவாசிகள் ஓடிப் போய் மகாராஜாவிடம் தெரிவித்தார்கள். அந்தக் கிராமத்துக்கு மூன்று வருஷம் வரி, வாய்தா குவிட்ரெண்ட், ஜமாபந்தி, புறம்போக்குப் பட்டி ஒன்றுமே கிடையாது என்று மகாராஜா தெரிவித்துவிட்டு, உடனே வேட்டைக்குக் கிளம்பினார்.
புலி இலேசில் அகப்படவில்லை. வேண்டுமென்று மகாராஜா கையில் அகப்படக் கூடாதென்றே, அது ஒளிந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. மகாராஜாவோ, புலி அகப் பட்டாலொழியக் காட்டை விட்டு வரமாட்டேனென்று பிடிவாதம் பிடித்தார். அதோடு நாளாக ஆக மகாராஜாவின் கோபமும் பிடிவாதமும் அதிகமாகி வந்தன. அதன் பயனாய் அனேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை போய் விட்டது.
ஒருநாள் ரொம்பக் கோபம் வந்தபோது, மகாராஜா திவானைக் கூப்பிட்டு, "சமஸ்தானத்தில் நிலவரியை உடனே இரண்டு பங்கு செய்யுங்கள்" என்றார். திவான், "பிரஜைகளுக்கு அதிருப்தி உண்டாகும், மகாராஜா! அப்புறம் நம் சமஸ்தானத்திலும் ஸ்டேட் காங்கிரஸ் ஏற்பட்டுவிடும்" என்றார். "அப்படியானால், உம்முடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போம்!" என்றார் மகாராஜா.
இதற்குமேல் மகாராஜாவுக்குப் புலி அகப்படாதிருந்தால் விபரீதந்தான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குப் போனார் திவான். அங்கே சென்னை பீப்பிள்ஸ் பார்க்கிலிருந்து வாங்கிக் கொண்டுபோய் இரகசியமாய் வைத்திருந்த புலியைப் பார்த்ததுந்தான் அவருக்கு உயிர் வந்தது.
அன்று இரவு நடு நிசியில் ஊரெல்லாம் அடங்கிய பிறகு, திவானும் அவருடைய வயது முதிர்ந்த மனைவியும் மேற்படி புலியை இழுத்துக் கொண்டு வந்து மோட்டாரில் ஏற்றினார்கள். 'திவான்' தாமே மோட்டாரை ஓட்டிக் கொண்டு போய், மகாராஜா வேட்டையாடிக் கொண்டிருந்த காட்டுக்குப் பக்கத்தில் புலியை இறக்கினார். மோட்டாரிலிருந்து இறங்க மாட்டேனென்று சத்தியாகிரகம் செய்த அந்த புலியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளுவதற்குள் திவானுக்கு மேல் மூச்சு வாங்கிவிட்டது. மறுநாள் மகாராஜாவின் முன்னால் மேற்படி கிழப்புலியானது வந்து, "எஜமானே! என்ன ஆக்ஞை?" என்று கேட்பது போல் நின்றது. மகாராஜா அளவிறந்த உற்சாகத்துடன் துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து சுட்டார் உடனே புலி சுருண்டு விழுந்தது.
"நூறாவது புலியைக் கொன்று விட்டோ ம்; விரதம் நிறைவேறிவிட்டது!" என்ற மகத்தான குதூகலம் மகாராஜாவின் மனதில் தோன்றிற்று. அந்த நூறாவது புலியை தமது தலைநகரில் ஊர்வலமாகக் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, மகாராஜா மோட்டாரில் ஏறிவிரைந்து முன்னால் சென்றார்.
அவர் போன பிறகு, மற்ற வேட்டைக்காரர்கள் புலியின் அருகில் சென்று பார்த்தார்கள். புலியும் கண்களைப் பேந்தப் பேந்த விழித்து அவர்களைப் பார்த்தது! புலி சாகவில்லையென்றும், அதன்மேல் குண்டே பாயவில்லை யென்றும், அவர்கள் கண்டார்கள். குண்டு சமீபத்தில் போன அதிர்ச்சியினாலேயே அது அப்படி மூர்ச்சையாகி விழுந்திருந்தது! வேட்டைக்காரர்கள் யோசனை செய்தார்கள். குண்டு தவறிப்போன செய்தி மகாராஜாவுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் தங்களுடைய உத்தியோகத்துக்கு ஆபத்து என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவன் புலிக்கு ஓர் அடி தூரத்திலிருந்து குறி தவறாமல் அதைக் கொன்று தீர்த்தான்.
பிறகு, மகாராஜாவின் கட்டளையின்படி, அந்தச் செத்தப் புலியை நகரில் ஊர்வலம் விட்டுக் கொண்டு போய்க் கடைசியில் அதைப் புதைத்து, சமாதியும் எழுப்பினார்கள்.
மேற்கூறிய விசேஷ சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு மகாராஜாவின் குமாரனுக்கு மூன்றாவது பிறந்த தினக் கொண்டாட்டம் நடந்தது. இது வரையில் புலிவேட்டையிலேயே கவனமாயிருந்த மகாராஜா பட்டத்து இளவரசனைப் பற்றிக் கொஞ்சமும் கவனிக்கவில்லை. இப்போது அவருடைய கவனம் குழந்தையின் மீது சென்றது. பிறந்த தினத்தற்கு குழந்தைக்கு ஏதாவது பரிசு கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். பிரதிபந்தபுரம் கடைத்தெருவுக்குப் போனார். கடை கடையாகத் தேடியும் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பொம்மைக் கடையில் ஒரு சின்ன மரப் புலியைப் பார்த்தார். "இதுதான் சரியான பரிசு" என்று உடனே தீர்மானித்து விட்டார்.
அந்த மரப் புலியின் விலை இரண்டே காலணாதான். ஆனால், மகாராஜா கேட்கும்போது அவ்வளவு குறைந்த விலை சொன்னால் நிச்சயம் அவசரச் சட்டத்தின் கீழ்த் தண்டனை கிடைக்குமென்று தெரிந்த கடைக்காரன் "மகாராஜா! இது ரொம்பக் கலைத்திறமை பொருந்திய பொம்மை; விலை முந்நூறு ரூபாய்தான்!" என்றான்.
"ரொம்ப சந்தோஷம்! யுவராஜாவின் பிறந்த தினக் கொண்டாட்டத்துக்கு இது உன்னுடைய காணிக்கையாயிருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு, மகாராஜா அதை எடுத்துச் சென்றார்.
யுவராஜாவின் பிறந்த தினத்தன்று, தகப்பனாரும் குழந்தையும் அந்தச் சின்னஞ் சிறு மரப்புலியை வைத்துக் கொண்டு விளையாடினார்கள். யாரோ பட்டிக்காட்டுத் தச்சன் செய்த பொம்மை அது ஆகையால் அதன் மேலெல்லாம் சிலாம்பு சிலாம்பாய் நின்றது. மகாராஜா அதைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடிய போது வலது கையில் ஒரு சிலாம்பு குத்தியது. இடது கையால் சிலாம்பைத் தட்டி எறிந்துவிட்டு மகாராஜா மேலும் விளையாடிக் கொண்டிருந்தார்.
சிலாம்பு குத்திய இடத்தில் மறுநாள் சின்னக் கொப்புளம் புறப்பட்டது.
இரண்டு நாளில் அது பெரிய சிரங்காயிற்று. நாலு நாளைக்கெல்லாம் கை முழுவதும் புரையேறிவிட்டது.
சென்னைப் பட்டணத்திலிருந்து பெரிய ஸர்ஜன்கள் மூன்று பேர் வரவழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் கூடி ஆலோசித்து, "ஆபரேஷன் செய்ய வேண்டியதுதான்" என்று தீர்மானித்தார்கள்.
ஆபரேஷன் நடந்தது.
மூன்று ஸர்ஜன்களும் ஆபரேஷன் செய்துவிட்டு வெளியில் வந்து பின்வரும் செய்தியைத் தெரிவித்தார்கள்.
"ஆபரேஷன் வெற்றிகரமாய் நடந்தது; மகாராஜா காலமாகிவிட்டார்."
இவ்விதமாக நூறாவது புலியானது கடைசியில் புலிராஜாவின் மேல் வஞ்சம் தீர்த்துக் கொண்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலி ராஜா - Puli Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மகாராஜா, புலி, கொண்டு, மகாராஜாவின், அந்த, புலியை, நூறாவது, பிறகு, பிறந்த, கடைசியில், ஆபரேஷன், உடனே, போய், நடந்தது, விலை, சிலாம்பு, இன்னும், வந்து, வேண்டும், என்றார், கையில், திவான், வந்தது, புலியைப், மூன்று