புலி ராஜா
2
யுவராஜா ஜங்ஜங் பகதூர் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். மேற்கூறிய சம்பவத்தை தவிர அவருடைய
குழந்தைப் பருவத்தில் வேறு அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. மற்றச் சுதேச
சமஸ்தானங்களின் யுவராஜாக்களைப் போல்தான் அவரும் இங்கிலீஷ் பசுவின் பாலைக்
குடித்து, இங்கிலீஷ் நர்ஸினால் போஷிக்கப்பட்டு, இங்கிலீஷ் உபாத்தியாயரால்
இங்கிலீஷ் கற்பிக்கப்பட்டு, இங்கிலீஷ் சினிமாக்கள் பார்த்து - இப்படியாக
வளர்ந்து வந்தார். வயது இருபது ஆனதும், அது வரைக்கும் 'கோர்ட் ஆப் வார்ட்'ஸில்
இருந்த ராஜ்யமும் கைக்கு வந்தது.
ஆனால், ராஜ்யத்தில் மட்டும் மேற்சொன்ன ஜோசியக் கூற்று எல்லாருக்கும் நினைவிருந்தது. அநேகர் அதைப் பற்றிப் பேசியும் வந்தார்கள். மெதுவாக மகாராஜாவின் காதிலும் இந்தப் பேச்சு விழுந்தது.
பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தில் காடுகள் ஏராளமாக உண்டு. அவற்றில் புலிகளும் உண்டு. "தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம்" என்ற பழமொழி மகாராஜாவுக்குத் தெரிந்திருந்தது. தன்னைக் கொல்லவரும் புலியைக் கொல்லுவதைப் பற்றி என்ன ஆட்சேபனை? - மகாராஜா புலி வேட்டையாடக் கிளம்பினார்.
முதல் புலியைக் கொன்றதும் மகாராஜாவுக்கு ஏற்பட்ட குதூகலத்துக்கு அளவில்லை. சமஸ்தானத்தின் ஜோசியர் தலைவரைக் கூப்பிட்டு அனுப்பினார். செத்த புலியைக் காட்டி, "இப்போது என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.
"மகாராஜா இந்த மாதிரியே 99 புலிகளைக் கொன்று விடலாம்; ஆனால்..." என்று ஜோசியர் இழுத்தார்.
"ஆனால் என்ன? தைரியமாகச் சொல்லும்!"
"ஆனால் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்."
"சரி, நூறாவது புலியையும் கொன்று விட்டால் அப்புறம்?"
"அப்புறம் என்னுடைய ஜோசியப் புத்தகங்களையெல்லாம் கிழித்து நெருப்பு வைத்துவிட்டு..."
"வைத்துவிட்டு..."
"தலையில் கிராப்பு வைத்துக் கொண்டு இன்ஷுரன்ஸ் கம்பெனி ஏஜண்டாகப் போய்விடுகிறேன்?" என்று ஜோசியர் சம்பந்தமில்லாமல் முடித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலி ராஜா - Puli Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - இங்கிலீஷ், ஜோசியர், புலியைக், என்ன