புலி ராஜா
4
மகாராஜாவின் புலிவேட்டை விரதம் நன்கு
நிறைவேறி வந்தது. பத்து வருஷ காலத்தில் எழுபது புலிகள் வரையில் வேட்டையாடிக்
கொன்றுவிட்டார். அதற்குப் பிறகு ஒரு பெரிய இடையூறு எதிர்ப்பட்டது. பிரதிபந்தபுரம்
காடுகளில் புலிகளே அற்றுப்போய் விட்டனபோல் தோன்றியது. புலிகள் ஒருவேளை
கருத்தடை முறைகளைக் கையாண்டனவோ, அல்லது 'ஹரிகரி' செய்து கொண்டனவோ, அல்லது
வெள்ளைக்காரர்களின் கையினால்தான் சாக வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டு
நாட்டைவிட்டு ஓடிப் போயினவோ, தெரியவில்லை.
மகாராஜா ஒரு நாள் திவானைக் கூப்பிட்டார். "திவான் சாகிப், இன்னும் முப்பது புலி இந்தத் துப்பாக்கிக்கு இரையாகித் தீரவேண்டுமென்று உமக்குத் தெரியுமா இல்லையா?" என்று கேட்டார்.
திவான் துப்பாக்கியைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டே, "மகாராஜா! நான் புலியில்லை..." என்றார்.
"நீர் புலி என்று எந்த முட்டாள் சொன்னது?"
"இல்லை, நான் துப்பாக்கி இல்லை" என்றார் திவான்.
"நீர் புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை திவான் சாகிப்! உம்மைக் கூப்பிட்ட காரணம் வேறு. நான் கல்யாணம் செய்து கொள்வதென்று தீர்மானித்து விட்டேன்" என்றார் மகாராஜா.
திவானுக்கு உளறல் இன்னும் அதிகமாகிவிட்டது. "மகாராஜா! ஏற்கனவே எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்; உங்களையும் கல்யாணம் செய்துகொண்டு."
"சட், என்னங்காணும் உளறுகிறீர்? உம்மை எதற்காக நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்? எனக்கு வேண்டியது புலி..."
"மகாராஜா! வேண்டாம், யோசனை செய்யுங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள் கத்தியைக் கல்யாணம் செய்து கொண்டார்கள். நீங்கள் வேணுமானால் துப்பாக்கியைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இந்த சமஸ்தானத்துக்குப் புலி ராஜா இருப்பது போதும்; புலி ராணி வேறு வேண்டாம்!"
இதைக் கேட்ட மகாராஜா குபீரென்று சிரித்து விட்டு "புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை. மனுஷப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். தற்சமயம் எந்தெந்த சமஸ்தானத்தில் புலி இருக்கிறதென்று முதலில் கணக்குத் தயார் செய்யும். பிறகு, புலி இருக்கிற சமஸ்தானத்தில் ராஜ்வம்சத்தில் கல்யாணத்துக்குப் பெண் இருக்கிறதா என்று பாரும்" என்றார்.
திவான் அப்படியே பார்த்தார். கடைசியில் மகாராஜாவின் விருப்பத்தின்படியே புலிகள் நிறைய உள்ள சமஸ்தானத்தில் பெண் பார்த்துக் கல்யாணமும் செய்து வைத்தார்.
மகாராஜா ஜங்ஜங் பகதூர் ஒவ்வொரு தடவை மாமனார் வீடு சென்றபோதும், ஐந்தாறு புலிகளைக் கொன்று எல்லாப் புலிகளின் தோலும் - சரியாக 99 தோல் - அரண்மனை ஆஸ்தான மண்டபத்தின் சுவர்களை அலங்கரித்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலி ராஜா - Puli Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மகாராஜா, புலி, செய்து, கல்யாணம், திவான், என்றார், நான், சமஸ்தானத்தில், புலிகள்