புலி ராஜா
3
பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தின் காடுகளிலிருந்த
புலிகளுக்கெல்லாம் அன்று முதல் கொண்டாட்டந்தான்.
மகாராஜாவைத் தவிர வேறு யாரும் புலி வேட்டை ஆடக்கூடாது என்று உத்தரவு பிறந்தது.
தப்பித் தவறி யாராவது ஒரு புலியின் மேல் கல்லை விட்டெறிந்தால் கூட, அப்படிப்பட்ட ராஜத் துரோகத்தைச் செய்தவனுடைய சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்யப்படுமென்று தண்டோரா போடப்பட்டது.
மகாராஜா நூறு புலிகளை முழுசாகக் கொன்ற பிறகுதான் மற்ற காரியங்களில் கவனம் செலுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார். அவருடைய உத்தேசம் நன்கு நிறைவேறியும் வந்தது.
அபாயங்கள் அவருக்கு நேரிடாமல் இல்லை. சில தடவை துப்பாக்கிக் குறி தவறிப் புலி அவர் மேல் பாயவும், அதனுடன் கைகலந்து சண்டை போடவும் நேரிட்டது. ஒவ்வொரு தடவையிலும், அவர் தான் கடைசியில் வெற்றி பெற்றார்.
இன்னொரு சமயம் அவருடைய சிம்மாசனத்துக்கே ஆபத்து வருவதாயிருந்தது. ஒரு பெரிய பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் பிரதிபந்தபுரத்துக்கு விஜயம் செய்தார். அவருக்குப் புலி வேட்டையில் ரொம்பப் பிரியம். அதைக் காட்டிலும், தாம் கொன்ற புலிக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிகப் பிரியம். வழக்கம் போல் அவர் பிரதிபந்தபுரம் சமஸ்தானத்திலும், புலி வேட்டையாட விரும்பினார். ஆனால் மகாராஜா கண்டிப்பாக மறுத்துவிட்டார். "வேறு என்ன வேட்டைக்கு வேணுமானாலும் ஏற்பாடு செய்கிறேன். பன்றி வேட்டையா? ஆடுங்கள். எலி வேட்டையா? நடத்துங்கள். கொசு வேட்டையா? இதோ தயார். ஆனால் புலி வேட்டை மட்டும் இங்கே முடியாது" என்றார் மகாராஜா.
"துரைதான் புலியைக் கொன்று ஆகவேண்டுமென்று அவசியமில்லை, மகாராஜாவே கொல்லலாம். செத்த புலிக்குப் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதுதான் துரைக்கு முக்கியம்" என்று மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் காரியதரிசி சமஸ்தான திவான் மூலமாகச் சொல்லியனுப்பினார். இதற்கும் மகாராஜா சம்மதிக்கவில்லை. இப்போது கொஞ்சம் இடங்கொடுத்து விட்டால், அப்புறம் இன்னும் சில பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களும் புலி வேட்டைக்கு வந்து சேரலாமல்லவா?
இப்படி ஒரு பெரிய ஆங்கில உத்தியோகஸ்தரின் விருப்பத்துக்குக் குறுக்கே நின்றதன் பயனாக மகாராஜாவின் கையைவிட்டு ராஜ்யமே போய்விடுமோ என்று பயம் உண்டாயிற்று.
இதைக் குறித்து மகாராஜாவும் திவானும் கலந்தாலோசித்தார்கள். உடனே கல்கத்தாவிலுள்ள ஒரு பெரிய இங்கிலீஷ் நகைக் கம்பெனிக்குத் தந்தி போயிற்று:- "வைர மோதிரங்களில் சில உயர்ந்த மாதிரிகள் அனுப்பி வைக்கவும்" என்று.
அவ்விதமே வைர மோதிரங்கள் சுமார் ஐம்பது தினுசுகள் வந்தன. அவற்றை அப்படியே மகாராஜா மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் தர்ம பத்தினிக்கு அனுப்பி வைத்தார். துரைசானி அம்மாள் ஏதாவது ஒன்றிரண்டு பொறுக்கிக்கொண்டு பாக்கியைத் திருப்பி அனுப்பி விடுவாளென்று மகாராஜாவும் திவானும் எதிர் பார்த்தார்கள்.
ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் துரைசானியிடமிருந்து பதில் வந்துவிட்டது:- "நீங்கள் அனுப்பிய பரிசு மோதிரங்களுக்காக மிகவும் வந்தனம்."
இரண்டு நாளைக்கெல்லாம் நகைக் கம்பெனியாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய்க்குப் 'பில்' வந்தது. மூன்று லட்ச ரூபாய் போனாலும், சிம்மாசனத்துக்கு ஆபத்தில்லாமல் தப்பியது பற்றி மகாராஜாவுக்குச் சந்தோஷந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலி ராஜா - Puli Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - புலி, மகாராஜா, பிரிட்டிஷ், அனுப்பி, உத்தியோகஸ்தரின், பெரிய, அவர், வேட்டையா