எஜமான விசுவாசம்
4
'கிணுகிணு' வென்று டெலிபோன் மணி அடித்தது.
மோகன் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து நின்று டெலிபோன் ரிஸிவரைக்
கையிலெடுத்தார்.
"ஹலோ"
"பூக்கடைப் போலீஸ் ஸ்டேஷனா? ஓகோ என்ன விசேஷம்?"
"புகைஞ்சுதா? என் கம்பெனியிலேயா? அப்புறம்?"
"பையர் இன்ஜின் வந்து நெருப்பை அணைச்சுட்டுதா? ரொம்ப..."
"வாச்மேனே கிடையாதே..."
"யார்? வீராசாமியா?"
"கொஞ்சங்கூடச் சேதம் ஆகலேன்னா சொல்றீங்க? ரொம்ப..."
"யாராவது எஜமானத் துரோகி செய்த வேலையாய்த்தான் இருக்கணும். அவ்வளவு ஏற்பாடாய்த் தீப்பிடிக்கச் செய்யறதுன்னா...?"
"டிரைவர் இல்லை. காலையிலே வந்து பார்க்கிறேன் குட் நைட்..."
டெலிபோன் ரிஸீவரைப் படீரென்று வைத்தார் மோகன். மேஜையை நாலு தடவை குத்தினார். அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உதடுகளும், ஹிட்லர் மீசையும் துடித்தன. கண்களில் பொறி பறந்தது.
பின் வருமாறு தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
"கிழட்டுப் பிரம்மஹத்தி - சண்டாளன் - துரோகி - இவனை யார் அங்கே போகச் சொன்னது? - அவனைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்று குழியை வெட்டி மூடினாலும் தோஷமில்லை! - கடைசி பிளானும் இப்படிப் போச்சு! இனிமேல்?"
அரைமணி நேரம் ஆவேசம் வந்தவர் போல் அங்குமிங்கும் நடந்து, பல்லைக் கடித்து, மேஜையைக் குத்தி, சுவரை உதைத்து - எல்லாம் ஆனபிறகு, மிஸ்டர் மோகன் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்தார். சற்று நேரம் அதைத் தன் மார்புக்கு நேராகப் பிடித்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அதை மேஜை மீது வைத்து விட்டுப் பேனாவும் காகிதமும் எடுத்து எழுதத் தொடங்கினார்.
பாவம்! அநேகமாய் அவருடைய மனைவி மக்களுக்குக் கடிதமாயிருக்கலாம். அவர்களெல்லாம் 'எவாக்வேஷன்' சமயமாதலால் வெளியூரில் இருந்தார்கள். அவருடைய அந்தரங்கக் கடிதங்களை நாம் பார்ப்பது, நியாயமில்லை யல்லவா?
*****
பலபலவென்று கிழக்கு வெளுக்கும் நேரம். மிஸ்டர் மோகன் கடிதங்களை எழுதி முடித்து இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். திரும்ப மேஜையினருகில் வந்தார்.
"எஜமான்!" என்ற சத்தம் திடீரென்று கேட்டதும் வாசற்படிப் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
'வாச்மேன்' வீராசாமி கூர்ச்சம் போல் நின்று கொண்டிருந்தான். பங்களாவின் வாசல் வராண்டாவில் மச்சுப்படி இருந்த படியால் அதன் வழியாக அவன் பாட்டுக்கு ஏறி வந்திருக்க வேண்டும்.
சற்று நேரம் மிஸ்டர் மோகன் பிரமித்து நின்ற போது, வீராசாமி சொல்லிக் கொண்டே போனான். "எஜமான், என்னமோ கால வித்தியாசத்தினால் எசமான் நம்மை மறந்தாலும், நாம் மறக்கக் கூடாதுன்னு இராத்திரி நம்ம கம்பெனிக்குப் போனேங்க. பர்த்தி வாச்மேன் இன்னும் வைக்கலேன்னு கேள்விப் பட்டேனுங்க. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புகைச்சல் நாத்தம் தெரிஞ்சுதுங்க. ஜன்னல் வழியாப் புகை வந்துதுங்க. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினேனுங்க. பையர் இன்சின் ஒரு நொடியில் வந்து அணைச்சிட்டுதுங்க. ஒரு சேதமும் இல்லாது போச்சுங்க."
மிஸ்டர் மோகன் திடீரென்று பாய்ந்து வந்து, வீராசாமியின் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். "அடப்பாவி துரோகி! உன்னைத் தான் டிஸ்மிஸ் பண்ணியாச்சேடா உன்னை யாருடா வரச் சொன்னா?" என்று சொல்லிக் கொண்டே, அவன் முதுகிலும், தலையிலும் போடு போடு என்று போட்டார். அவனுடைய கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிக் கொண்டே மச்சுப் படியண்டே வந்து ஒரு தள்ளுத் தள்ளினார். கிழவன் உருட்டியடித்துக் கொண்டு போய்க் கீழே விழுந்தான்.
வீராசாமி அளவில்லாத திகைப்புடன் எழுந்து உட்கார்ந்து, தன்னைச் சமாளித்துக் கொள்ள முயன்ற போது மேலே 'டுமீல்' என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது.
சத்தத்தைக் கேட்டு, தோட்டக் குடிசையில் படுத்திருந்த தோட்டக்காரன், வாசலில் போன பால்காரன், வீட்டுச் சமையல்காரன் எல்லாரும் ஓடி வந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ்காரர்களும் வந்தார்கள்.
மேலே மிஸ்டர் மோகனுடைய உடல் துணியெல்லாம் இரத்தம் தோய்ந்து, தரையில் விழுந்து கிடந்தது. அருகில் அவருடைய கைத்துப்பாக்கியும் கிடந்தது.
மோகனுடைய உடலை வைத்தியப் பரிசோதனைக்காக ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.
வீராசாமியைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் 'லாக்-அப்'பில் அடைத்தார்கள்!
*****
வடபழனி ஆண்டவனின் புண்ணியத்தில், கிழவன் வீராசாமி அதிக காலம் சிறையில் இருக்கும்படி நேரவில்லை.
ஏனெனில், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மிஸ்டர் மோகனுடைய உடம்பில் உயிர் இருக்கிறதென்று கண்டுபிடித்து அவருக்குப் பிழைப்பூட்டி விட்டார்கள். எத்தனையோ பேரை வேலை தீர்ப்பவர்கள், சிலருக்குப் பிழைப்பூட்டவும் வேண்டியது தானே?
பிழைத்தெழுந்த மோகன், அந்தப் பலஹீனமான உடல் நிலைமையிலும் போலீஸ்காரரிடம் உள்ளது உள்ளபடி எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.
அவருக்கு வியாபாரத்தில் பெருநஷ்டம் வந்து விட்டதென்றும், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஆபீஸுக்கு அவரே நெருப்பு வைத்து விட்டு பையர் இன்ஷ்யூரன்ஸ் தொகை... லட்சம் ரூபாய் வாங்குவதற்கு எண்ணினார் என்றும், அதற்காகவே 'வாச்மேன்' வீராசாமியை டிஸ்மிஸ் பண்ணினாரென்றும், அவனுடைய எதிர்பாராத தலையீட்டினால் நோக்கம் நிறைவேறாமல் போகவே, தற்கொலை செய்து கொள்ள முயன்றாரென்றும் அவருடைய வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்தன.
எனவே, வீராசாமி விடுதலையடைந்து அவனுடைய பேரக் குழந்தைகளைப் பார்ப்பதற்கு வீடு வந்து சேர்ந்தான்.
எப்படியும் அவனுடைய எஜமான விசுவாசம் வீண் போகவில்லையென்றே சொல்ல வேண்டும். அவனைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே மிஸ்டர் மோகன் குறிபிசகாய்ச் சுட்டுக் கொண்டிருக்கலாமல்லவா?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஜமான விசுவாசம் - Ejamana Visuvasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மோகன், மிஸ்டர், வந்து, வீராசாமி, கொண்டு, அவருடைய, அவனுடைய, நேரம், கொண்டே, வாச்மேன், மோகனுடைய, சொல்லிக், போலீஸ், பையர், துரோகி, டெலிபோன்