எஜமான விசுவாசம்
3
இப்போதுநாம் மிஸ்டர் எம்.டி. மோகனை நேரில்
சந்தித்தாக வேண்டும். இராத்திரி இரண்டு மணி ஆன போதிலும், அவரை இப்போதே
பார்த்து விடுவதுதான் நல்லது. பொழுது விடிந்தால் வேறு அலங்கோலமான நிலைமையில்
அவரைப் பார்க்கும்படி நேரிடும்.
நல்ல வேளையாக மிஸ்டர் மோகனும் இன்னும் தூங்கவில்லை. அவருடைய பெரிய பங்களாவின் மேல் மச்சில் முகப்பு அறையில் மேஜையின் பின்னால் உட்கார்ந்திருக்கிறார். வயது சுமார் நாற்பது இருக்கும். பணத் தொந்தி லேசாக விழுந்திருக்கிறது. தட்டையான முகத்தில் ஹிட்லர் மீசை; கிராப்புத் தலை. சுவரில் ஹாட் முதலிய நாகரிக உடைச் சின்னங்கள் காணப்படுகின்றன.
மேஜை மேல் உள்ள காகிதங்களில் ஏதேதோ கூட்டியும் கழித்தும் கணக்குப் பார்க்கிறார்; பக்கத்தில் டெலிபோன் இருக்கிறது. அதை ஆவலுடன் திரும்பிப் பார்க்கிறார்.
இதையும் அதையும் இருக்கிற இருப்பையும் முகத்தில் பரபரப்பையும் பார்த்தால், மனுஷர் டெலிபோனில் ஏதோ முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
அவர் எதிர்பார்க்கும் செய்தி டெலிபோனில் வருவதற்குள்ளே, மிஸ்டர் மோகனுடைய வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
மிஸ்டர் மோகன், ஒரு வயதுக் குழந்தையாயிருக்கும் போதே பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டான் என்று அவனுடைய பெற்றோர்கள் அந்தக் காலத்தில் பெருமைப்படுவதுண்டு. ஒரு சமயம் வீட்டில் ஒரு இரண்டணா வெள்ளி நாணயம் (அப்போது இந்த நாட்டில் சில வெள்ளி நாணயங்களும் இருந்தன) காணாமற் போய் விட்டதாம். தேடு தேடு என்று தேடினார்களாம். கடைசியில் குழந்தையின் வாயைத் திறந்து பார்த்தால், கடைவாயில் இரண்டணாவை அடக்கிக் கொண்டிருந்ததாம்! அதை எடுப்பதற்குள் குழந்தை ரகளை செய்து விட்டதாம்!
இப்பேர்ப்பட்ட மோகன், காலேஜ் படிப்பு முடிந்ததும் கேவலம் உத்தியோகத்தைத் தேடாமல் தொழில் ஆரம்பித்தான். அவன் ஆரம்பித்த தொழில், ஏஜென்ஸி வியாபாரம். எந்த ஊரில் எந்தச் சாமான் தயாராகிறதென்று தெரிந்து கொண்டு, அதற்கு ஏஜென்ஸி எடுத்து, விளம்பரம் பண்ணி, சில்லறைக் கடை வியாபாரிகளுக்கு விநியோகிப்பது. ஓடாத கடிகாரம் முதல், தலை வழுக்கைத் தைலம் வரையில் எத்தனையோ சாமானகளுக்கு மோகன் ஏஜென்ஸி எடுத்தான். இவற்றை விளம்பரம் செய்வதற்காக முதலில் கேட்லாக்குகள், அப்புறம் பஞ்சாங்கங்கள், டைரிகள், கேலண்டர்கள் இப்படியெல்லாம் பிரசுரம் செய்யத் தொடங்கினான். மோகன் பஞ்சாங்கம், வெகு சீக்கிரத்தில் பிரசித்தியாகி, "வேறு எந்த பஞ்சாங்கத்தையும் விட மோகன் பஞ்சாங்கத்தில்தான் அமாவாசையும், தியாஜ்யமும், அதிகம்" என்ற பெயரைப் பெற்று விட்டது! மோகன் கேலண்டர் என்றால், ஜனங்களிடையே அடிதடி உண்டாவது வழக்கமாயிற்று. அவ்வளவு கிராக்கி! "மோகன் டைரியில் மாதத்துக்கு 33 தேதி!" என்ற புகழும் உண்டாயிற்று.
சாதாரணமாக, இம்மாதிரி வியாபாரத்தில் நாலு அணா சாமானுக்கு மூன்றரை ரூபாய்க்கு மேல் லாபம் வைப்பதில்லையாதலால், பணம் வந்து குவியத் தொடங்கியது.
பணம் குவியவும் மிஸ்டர் மோகன் பணச் செலவுக்கும் வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தார். கிளப்புகளில் அங்கத்தினரானார். பார்ட்டிகள் கொடுத்தார். பெரிய இடத்துச் சிநேகிதங்கள் ஏற்பட்டன. குதிரைப் பந்தயத்துக்கும் போனார்.
ஒரு தடவை கார்ப்பொரேஷன் தேர்தலுக்கு நின்று பிரமாதமான தோல்வியடைந்தார்! மகத்தான வெற்றிகரமாக ஓடிய ஒரு தமிழ் டாக்கியில் பங்காளியாகி, போட்ட பணத்தில் பாதியை இழந்தார்! ஜனங்களுக்கோ வரவர ஓடாத கடிகாரங்கள், வழுக்கைத் தைலங்கள், எலக்டிரிக் ஜீவசக்தி மாத்திரைகள் - இவற்றிலெல்லாம் மோகம் குறைந்து வந்தது.
கடைசியில் மிஸ்டர் மோகன் தம்முடைய பொருளாதார நிலைமையைக் கவனித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கவனித்துப் பார்த்ததில், 'நிலைமை பேபர்ஸுதான்" என்று தெரிந்தது. நிலைமையைச் சீர்திருத்துவதற்கு, சம்பாத்தியத்தை அதிகப்படுத்துவதற்கு உடனே ஏதாவது பெருமுயற்சி செய்தாக வேண்டும்.
இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மிஸ்டர் மோகன் சுற்றும் முற்றும் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாய் போய்விட்டது. யுத்த ஆரம்பத்திலிருந்து பலர் பலவகைகளிலும் ஏராளமாய்ப் பணம் பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டார். சிலர் மிலிட்டரி காண்ட்ராக்டில் பணம் பண்ணினார்கள். ஒருவர் ஊரிலுள்ள ஓட்டை தகரங்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்தார். அவருக்கு அரை லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. பழைய கோணிப் பைகளையெல்லாம் வாங்கினார் ஒருவர். அவர் முக்கால் லட்சம் தட்டினார். இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒருவர் க்ஷவர பிளேடுகளை வாங்கி வைத்திருந்தார். அவருக்கு இருபதினாயிரம் ரூபாய் லாபம். காகிதம் ஸ்டாக் செய்தவர்கள், எலக்ட்ரிக் சாமான்கள் ஸ்டாக் செய்தவர்கள் இவர்களுடைய லாபத்தையெல்லாம் சொல்ல முடியாது.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மிஸ்டர் மோகனின் பரபரப்பு அதிகமாயிற்று. இந்தியா கவர்மெண்டார் கோடி கோடியாக நோட்டுகளை அச்சிட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், தாம் பணம் சம்பாதிக்காவிட்டால், உயிர் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்? அதற்கு என்ன வழி? எத்தனையோ வழிகள் இருக்கின்றன...அவற்றில் எதைக் கையாளுவது?
ஒரு வழியில் அவருடைய கவனம் சென்றது. அவருடைய கிளப் அங்கத்தினர்களில் ஒருவர் 'ஷேர் மார்க்கெட்' என்று சொல்லப்படும் பங்கு வியாபாரத்தில் மூன்றே மாதத்தில் இருபது லட்சம் ரூபாய் சேர்த்தது அவருக்குத் தெரிந்தது. இது தான் சரியான வழியென்று தீர்மானித்து, ஷேர் மார்க்கெட்டில் புகுவதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினார்.
அதனுடைய, தந்திர மந்திரங்களையெல்லாம் படித்தார். 'தோலைக் கடித்து - துருத்தியைக் கடித்து - தானே வேட்டை நாயாக வேண்டும்?' என்னும் முதுமொழியைப் பின்பற்றி, முதலில் சொற்ப அளவில் பங்குகள் வாங்கி விற்க ஆரம்பித்தார். அதோடு பிரமாதமாக ஒரு அடி அடிப்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தச் சந்தர்ப்பந்தான் ஸர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸின் விஜயத்தின் போது ஏற்பட்டது.
ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலை உயர்வதும் விழுவதும் பல அதிசய காரணங்களால் ஏற்படுகின்றன. மகாத்மா காந்திக்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையல்லவா? ஆனாலும் மகாத்மா சிறைப்பட்டார் என்றால், பங்குகளின் விலை இறங்கும்; மகாத்மா விடுதலை அடைந்தாரென்றால், பங்கு விலை ஏறும்!
கிரிப்ஸ் தூது வருகிற செய்தி கிடைத்ததுமே, "சரி பங்கு மார்க்கெட்டில் விலை ஏறப் போகிறது!" என்று மிஸ்டர் மோகன் தீர்மானித்துக் கொண்டார். அதில் உண்மையில்லாமற் போகவில்லை. "கிரிப்ஸ் வரவினால் இந்திய அரசியல் பிரச்சினை தீரலாம்" என்ற நம்பிக்கை தேசத்தில் உண்டானது போல், ஷேர் மார்க்கெட்டிலும் ஏற்பட்டது. பங்குகளின் விலை ஏறுமுகம் காட்டிற்று.
'கிரிப்ஸ் பறந்து வரப் போகிறார்?' - பங்கு விலை இன்னும் சிறிது ஏறிற்று. 'கிரிப்ஸ் கிளம்பி விட்டார்' - பங்கு விலை சுர வேகம் அடைந்தது. 'கிரிப்ஸ் கராச்சியில் வந்து இறங்கினார்' - நூறு ரூபாய் விலையிலிருந்த சில பங்குகள் நூற்றறுபதுக்கு வந்து விட்டன.
மிஸ்டர் மோகனுக்கும் பண ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. பங்கு வாங்குவது - அதைப் பாங்கியில் அடகு வைத்துக் கடன் வாங்குவது - அந்தப் பணத்தைக் கொண்டு பங்கு வாங்குவது - இப்படி ஜமாய்த்துக் கொண்டிருந்தார்.
நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் ஏறிக் கொண்டிருந்தது பங்குகளின் விலை.
"கிரிப்ஸுக்கும் காங்கிரஸுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது" என்று பொய்ச் செய்தி வந்து, பத்திரிகைகளில் கூடத் தலையங்கம் எழுதி விட்டார்கள் அல்லவா? அன்றைய தினம் மிஸ்டர் மோகன் வாங்கின பங்குகளையெல்லாம் விற்றிருந்தால், ஏழரை லட்சம் லாபம் பண்ணியிருக்கலாம்.
ஆனால், அந்தோ! "இன்னும் இருபத்து நாலு மணி நேரம் பார்க்கலாம்" என்று இருந்து விட்டார். அடுத்த இருபத்து நாலு மணி நேரத்திற்குள் "கிரிப்ஸின் படுதோல்வி", "வேஷம் வெளியாயிற்று" என்ற தலைப்புகளுடன் செய்திகள் வெளி வந்து விட்டன.
பங்கு மார்க்கெட் தலை கீழாக உருட்டியடித்துக் கொண்டு விழுந்தது. மிஸ்டர் மோகன், பாவம்!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஜமான விசுவாசம் - Ejamana Visuvasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மோகன், மிஸ்டர், பங்கு, விலை, பணம், கிரிப்ஸ், கொண்டு, ஷேர், வந்து, லட்சம், பங்குகளின், ஒருவர், ரூபாய், லாபம், இன்னும், நாலு, மகாத்மா, மார்க்கெட்டில், வேண்டும், வாங்குவது, அவருடைய, அவருக்கு, செய்தி, ஏஜென்ஸி, மேல், ஏற்பட்டது