எஜமான விசுவாசம்
2
வீராசாமி அவனுடைய மகளின் வீட்டில் இருந்தான்.
அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவர்களிடம் கிழவனுக்கு உயிர். மகளின் புருஷன்
குடிகாரன். சம்பாதிக்கிற காசைச் சரியாக வீட்டுக்குக் கொண்டு வருகிறதில்லை.
ஆகவே கிழவனுடைய சம்பளம் குடும்பத்துக்கு ரொம்ப ஒத்தாசையாயிருந்தது. ஐயோ!
திடீரென்று மாதம் 12 ரூபாய் நின்று போய் விட்டதே? காலட்சேபம் எப்படி
நடக்கும்? மகள் எங்கேயாவது வீட்டு வேலை செய்யப் போக வேண்டும் போலிருக்கிறதே.
"எப்படியாவது நடந்து விட்டுப் போவுது? நீ இரவிலே நல்லாப் படுத்துத் தூங்கு!" என்றாள் அருமை மகள். ஆனால் கிழவனுக்குத் தூக்கம் வந்தால் தானே? ஆறு வருஷமாகக் காவல் காத்த மோகன் கம்பெனி ஆபீஸ் கட்டிடம், அவனை 'வா வா' என்று வருந்தி அழைத்துக் கொண்டேயிருந்தது.
ஒருநாள் இருட்டிய பிற்பாடு வீராசாமி குடிசையில் இருப்புக் கொள்ளாமல் வெளியே கிளம்பினான். வீதியோடு போய்க் கொண்டிருந்தவன், மோகன் கம்பெனி ஆபீஸ் பையன் ஒருவனைப் பார்த்தான். ஏதோ காணாது கண்டவனைப் போல் ஆர்வத்துடன் அவனைப் பிடித்துக் கொண்டு "ஏண்டா, முனுசாமி! என்னடா சேதி? ஆபீஸெல்லாம் எப்படிடா நடக்குது!" என்றான்.
"ஆபீசு குட்டிச்சுவராப் போச்சு! விடு. நான் போகிறேன்" என்றான் முனுசாமி.
"அட பாவி! எசமான் சம்பளத்தை வாங்கித் தின்னுட்டு, அவருக்கே துரோகம் நினைக்கிற பசங்களா..."
"எப்படியோ தாத்தா! ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா என்கிறாப்பலே, உன்பாடு தேவலை."
"என்னடா, என்பாடு தேவலை?"
"இரண்டரை மாதச் சம்பளம் மொத்தமா வாங்கிக்கிட்டே இல்லையா? எங்களுக்கெல்லாம் காலணா இன்னும் கிடைக்கலை."
"அப்படியா?"
"ஆமாம்; எசமான் பாடு ரொம்ப 'அவுட்' என்கிறாங்க! ஆபீசே குளோசு ஆகிவிடும் என்கிறாங்க!"
கிழவன் ஏதோ நினைவு வந்தவனாய், "ஏண்டா முனுசாமி, எனக்கு பர்த்தியாய் யாராவது வாச்மேன் வந்திருக்கானா?" என்று கேட்டான்.
"இல்லை, தாத்தா! நான் கூட ஒரு கிழவனைக் கொண்டு வந்து விட்டேன். 'வாச்மேன்' தேவையில்லை யென்று எசமான் சொல்லி விட்டாராம்!" - இவ்விதம் சொல்லிக் கொண்டே பையன் கம்பி நீட்டினான்.
வீராசாமியின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. வீதியின் முடுக்கில் இருந்த பாலத்தின் மேல் உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கினான். "ஆகா! எசமானுக்குக் கஷ்டம் வந்தவுடனே, இந்த துரோகிப் பசங்கள் எல்லாரும் எப்படிப் பேசுகிறார்கள், பார்த்தாயா? அடாடா! கட்டிடத்தில் ராத்திரி காவலே இல்லையாமே? எந்தக் களவாணிப் பயலாவது வந்து சுருட்டைக் கொளுத்திப் போட்டுட்டுப் போனால் என்ன செய்கிறது? குடி முழுகிப் போய் விடுமே?"
வீராசாமியின் கால்கள் மோகன் கம்பெனி ஆபீஸ் வாசலை நோக்கித் தள்ளாடிக் கொண்டே நடந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஜமான விசுவாசம் - Ejamana Visuvasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - முனுசாமி, எசமான், ஆபீஸ், கம்பெனி, மோகன், கொண்டு