எஜமான விசுவாசம்
1
இந்தியாவையும், உலகத்தையுமே ஒரு கலக்குக்
கலக்கி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஸர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் துரை
இந்தியாவுக்கு வந்தாரல்லவா? வந்து, அவர் சொன்னபடியே ஒரு கலக்குக் கலக்கிவிட்டுச்
சேற்றை வாரிப் பூசிக் கொண்டு திரும்பிப் போனாரல்லவா? அந்தக் கிரிப்ஸ்
துரையின் விஜயத்தினால் ஏதாவது உண்மையில் பிரயோஜனம் ஏற்பட்டதா, ஏற்படாவிட்டால்
அது யாருடைய குற்றம்? - என்பதைப் பற்றியெல்லாம் அபிப்ராய பேதம் இருக்கலாம்.
ஆனால் ஒரு பலன் நிச்சயமாக ஏற்பட்டது என்பதை நான் அறிவேன். கிரிப்ஸ் விஜயத்தின்
பலனாகத்தான் 'வாச்மேன்' வீராசாமிக்கு வேலை போயிற்று. வேலை போனதோடு இல்லை;
கிட்டத்தட்ட அவன் தூக்கு மேடையில் ஏறும்படி கூட ஆகிவிட்டது.
சென்னை அரண்மனைக்காரன் தெருவில் பிரசித்தியாக இருந்து (இப்போது 'இருந்த' என்று சொல்ல வேண்டியிருக்கிறது, பாவம்) மோகன் கம்பெனியில் இராக்காவல் வேலை பார்த்தான் வீராசாமி. இந்த வேலையை அவன் சென்ற ஒன்பது வருஷ காலமாகப் பார்த்து வந்தான். இது விஷயம், மேற்படி மோகன் கம்பெனியின் புரொப்ரைட்டர் மிஸ்டர் எம்.டி. மோகன் அவர்களைத் தெரிந்தவர்க்கெல்லாம் ரொம்பவும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், மிஸ்டர் மோகனுடைய சுபாவம் ஒரு மாதிரியானது. அதாவது 'க்ஷணச்சித்தம் கணப்பித்தம்' என்பார்களே, அந்த மாதிரி சுபாவம். காலையில் ஒரு சிப்பந்தியைக் கூப்பிட்டு, "சம்பளத்தைத் தூக்கிப் போட்டிருக்கிறேன்" , என்பார் சாயங்காலம் அதே சிப்பந்தியைக் கூப்பிட்டு "'டிஸ்மிஸ்' - கணக்குப் பார்த்துச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போ! - பதில் பேசாதே!" என்பார். ஆகவே, அவருடைய ஆபீஸ் சிப்பந்திகள் எல்லாரும் அன்றாடம் ஆபீசுக்குக் கிளம்பும் போது "டிஸ்மிஸ்" உத்தரவு வாங்கிக் கொண்டு திரும்புவதற்குத் தயாராகவே கிளம்புவார்கள். அதோடு தினசரிப் பத்திரிகை 'வாண்டட்' பத்தியைப் பார்த்துக் கொண்டும் வேறு வேலைக்கு மனுப் போட்டுக் கொண்டுந்தான் இருப்பார்கள்.
ஒன்றிரண்டு கிழப் பெருச்சாலிகள் மட்டும் - பிடித்துத் தள்ளினாலும் போகாமல் உட்கார்ந்திருந்தார்களே தவிர, மற்றபடி மோகன் கம்பெனியில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' மாகவே எப்போதும் இருக்கும்.
ஆனால், இவ்விதம் சிப்பந்திகளை மாற்றிக் கொண்டு வந்தால், கம்பெனியின் காரியங்கள் எப்படி ஒழுங்காக நடைபெறுமென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இயற்கையுங் கூடத்தான். ஆனால், மிஸ்டர் மோகனுடைய இயற்கையை வாசகர்கள் நன்றாய்த் தெரிந்து கொள்ளாத தோஷமே அதற்குக் காரணம். மிஸ்டர் மோகன் ஒரு சமயம் என்ன சொன்னாராம் தெரியுமா? கேளுங்கள் :
"தெருக் கூட்டுகிற விளக்குமாறுகளை இந்த ஆபீஸ் நாற்காலி ஒவ்வொன்றிலும் கொண்டு வந்து உட்கார வைத்து, இந்த ஆபீஸை நான் நடத்தி விடுவேன். நீங்கள் ஒருவரும் இங்கே வேண்டாம்! தொலைந்து போங்கள்" என்றாராம்.
மோகன் கம்பெனியின் பழைய பெருச்சாளி மானேஜர் என்ன செய்தாராம் தெரியுமா? மேற்படி அருமையான மணி வாக்கியங்களை பளபளப்பான காகிதத்தில் அழகாக அச்சிட்டுக் கண்ணாடி சட்டம் போட்டு ஒவ்வொரு சிப்பந்திக்கும் ஒவ்வொன்று கொடுத்தாராம். கொடுத்து, அவரவர்களுடைய வீட்டில் படுக்குமிடத்துக்கு நேரே மாட்டி வைக்கும்படியும், காலையில் எழுந்ததும் அதைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும்படியும் சொன்னாராம். "என்னத்துக்காக?" என்று ஒரு சிப்பந்தி கேட்டதற்கு "அட பாவிகளா! அப்படிச் செய்தால் உங்கள் பிதிர்க்கள் கரையேறுவார்கள். கயா சிரார்த்தம் பண்ணின பலன் கிடைக்கும்!" என்றாராம்.
சரி, நம்முடைய கதாநாயகன் 'வாச்மேன்' வீராசாமியிடம் வருவோம். அவன் இப்போது ஒரே சோகக் கடலில் முழுகிக் கிடக்கிறான். அவனுக்கு வேலை போய் ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. வேலை போன விதத்தை நினைக்க நினைக்க, அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.
ஒருநாள் பிற்பகலில், சம்பளம் வாங்குவதற்காக ஆபீஸுக்குப் போனான் வீராசாமி. காஷியர், "மானேஜரிடம் போ!" என்றார். மானேஜர், "வீராசாமி! நேற்று இராத்திரி 10 மணிக்கு எஜமான் இந்தப் பக்கம் வந்தாராம். உன்னைக் காணோமாம். கணக்குத் தீர்த்து அனுப்பி விடும் படி உத்தரவு!" என்றார். வீராசாமிக்குத் தலையில் ஜப்பான் குண்டு விழுந்தது போலிருந்தது. "ஐயோ! நான்..." என்று ஆரம்பித்தான். "பேசாதே! போ!" என்று அதட்டினார் மேனேஜர். எஜமான விசுவாசமுள்ள வீராசாமி, சம்பளமும் வாங்கிக் கொள்ளாமல் ஆபீஸ் வாசலில் போய் நின்று காத்திருந்தான். மிஸ்டர் மோகன் வெளியில் வந்து காரில் ஏறும் சமயத்தில் போய் நின்று, "எசமான்!" என்றான் "எசமானாவது? சனியனாவது! டிரைவர், விடு" என்றார் மோகன். கார் போய் விட்டது.
பிறகு வீராசாமி, மறுபடியும் காஷியரிடம் போய்ப் பாக்கி இரண்டரை மாதத்துச் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஜமான விசுவாசம் - Ejamana Visuvasam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மோகன், கொண்டு, மிஸ்டர், வேலை, வீராசாமி, போய், வாங்கிக், ஆபீஸ், என்றார், வந்து, நான், கிரிப்ஸ், கம்பெனியின், அவன்