சந்திரமதி
6
வாசகர்களுடைய மனத்தில் நெடு நேரமாயிருந்து
வரும் சந்தேகத்தை இப்போது நிவர்த்தி செய்கிறேன். "ஏதோ அருகில் இருந்து
பார்த்தது போல சொல்கிறீரே, இவ்வளவு விவரங்களும் உமக்கு எப்படித் தெரிந்தது?"
என்று கேட்பீர்கள். கறுப்பு மீசைக்காரனும், நல்லானும் ஒன்று விடாமல்
எனக்குச் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். சனிக்கிழமையன்று அவர்கள் என்னைத்
தேடிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அப்படி என்னைத் தேடி வந்ததற்குக்
காரணம், நாகரத்தினமும் சந்திரமதியும் அன்று வரையில் ஊருக்கு வந்து சேராததுதான்!
அதனால் இந்த இரண்டு பேரும் எவ்வளவு திடுக்கிட்டுப் போயிருக்க வேண்டும். எவ்வளவு கவலைக்குள்ளாகியிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகையினாலேதான், அதுவரையில் என்னைத் திருணமாக மதித்திருந்த அக்கரையான் என்னைத் தேடிக்கொண்டு வந்தான்.
"ஸார்! மோசம் போய்விட்டது, ஸார்! நீங்கள் தான் யோசனை சொல்லவேண்டும், ஸார்!" என்றான். நல்லானோ பேசக்கூட முடியாதவனாய்க் கவலையில் மூழ்கியிருந்தான்.
அவர்கள் எல்லா விவரமும் சொன்ன பின்னர், "நாகரத்தினத்துக்கும் சந்திரமதிக்கும் என்னதான் நேர்ந்திருக்கலாமென்று உங்களுக்குத் தோன்றுகிறது?" என்று கேட்டேன். துரையப்பன் ஆள் பலத்துடன் வந்து வழியில் அவர்களைச் சந்தித்து, நாகரத்தினத்தைக் கொன்றுவிட்டு, சந்திரமதியைக் கொண்டு போயிருப்பானென்று அவர்கள் நினைத்தார்கள். உண்மையில் சந்திரமதியைப் பற்றி நான் அப்போது அவ்வளவு கவலைப்படவில்லை. நாகரத்தினத்தைப் பற்றித்தான் வருத்தப்பட்டேன். அந்தப் பையனும் இந்தத் துஷ்டர்களுடைய சதியாலோசனையில் சேர்ந்ததற்காக எனக்கு என்னதான் வருத்தம் இருந்த போதிலும் அவன் மேல் அபிமானமும் இருந்தது.
"ஏதோ என்னாலானதைப் பார்க்கிறேன்; நீங்கள் ஒன்றும் வெளியில் சொல்ல வேண்டாம். சந்திரமதி மாமன் ஊருக்குப் போயிருப்பதாகவே இருக்கட்டும்" என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு, உடனே பக்கத்து ஊர் ஜமீந்தார் வீட்டுக்குப் போனேன். அவரிடம் பல விஷயங்களையும் பற்றிப் பேசிவிட்டு, "துரையப்பன் இப்போது எங்கே இருக்கிறான்? சௌக்கியமாயிருக்கிறானா?" என்று கேட்டேன்.
அவர், "அதை ஏன் கேட்கிறீர்கள். போங்கள்! அவனால் எங்களுக்கு ரொம்பத் தொல்லையாகி விட்டது. இங்கே காமன் பண்டிகையன்றைக்கு மோட்டாரில் வந்திருந்தான். மறுநாள் காலையில் பார்த்தால் ஆளைக் காணோம். சொல்லாமல் போய்விட்டான். பல இடங்களுக்கும் கடிதம் போட்டதில் இன்றுதான் தகவல் வந்தது. பையன் திருநெல்வேலியில் அவனுடைய மாமனார் வீட்டில் இருக்கிறானாம். உடம்பு ஏதோ அசௌக்கியமாம்" என்றார். கடிதத்தை எடுத்து நானே பார்த்தேன். திருநெல்வேலியில் புதன்கிழமைதான் அந்தக் கடிதம் தபாலில் போடப்பட்டிருந்தது.
எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. துரையப்பன் கறுப்பு மீசைக்காரனைக் கண்டு பயந்து போய்விட்டான். "உடும்பு வேண்டாம்; கையை விட்டால் போதும்" என்று எண்ணி இந்தப் பக்கத்திலேயே இல்லாமல் ஓடிவிட்டான். இன்னொரு விவரமும் அவனைப்பற்றி எனக்குந் தெரிந்தது. அவனுக்குக் கலியாணம் ஏற்கனவே ஆகியிருக்கிறதென்று. இது தெரியாமல் போனதனால் அல்லவா அவன் சந்திரமதியைத் தொடர்ந்து அலைவதுபற்றி நான் கோபங் கொள்வதற்குப் பதில் சந்தோஷமடைந்தேன்? என்ன மதியீனம்!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரமதி - Chandramathi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்னைத், துரையப்பன், நான், ஸார்