சந்திரமதி
1
சில நாளைக்கு முன்பு, வங்காளி பாஷையிலிருந்து
மொழி பெயர்த்த "காதல் சக்கரம்" என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தபோது,
எங்கள் ஊரில் பல வருஷங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.
மேற்படி கட்டுரை விஷயத்துக்கும், நான் சொல்லப் போகும் சம்பவத்துக்கும்
அதிக சம்பந்தமில்லையென்பது உண்மைதான். ஆனால் தலைப்பு மட்டும் இரண்டுக்கும்
பொருத்தமானது. நான் சொல்லப்போவது ஒரு காதல் சம்பவமே. அதற்கு, ஒரு சக்கரம்
அன்று - நாலு சக்கரங்கள் உதவி செய்தன. என்னுடைய கதையில் ஒரு மோட்டார்
வண்டி முக்கியமான ஸ்தானத்தை வகிக்கிறது.
தயவு செய்து இருபத்தைந்து வருஷம் பின்னால் போங்கள். அப்போது என்னுடைய பள்ளிக்கூடத்தில் இப்போதுள்ளது போன்ற ஆடம்பரம் ஒன்றும் கிடையாது. கட்டிடம் இல்லை; பெஞ்சு, நாற்காலி கூட இல்லை. கீற்றுக் கொட்டகையில் தான் பள்ளிக்கூடம் நடந்தது. கீழே மணலைக் கொட்டிப் பரப்பியிருந்தது. வெறும் பலகைகளை வரிசையாக போட்டுப் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அந்தக் காலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதென்றால் எனக்கு வெகு உற்சாகமிருந்தது; பிள்ளைகளும் உற்சாகமாகப் படித்தார்கள்.
நான் சொல்லும் காலத்தில் பள்ளிக்கூடத்தில் முப்பது குழந்தைகள் இருந்தன. அக்கிரகாரத்திலிருந்து ஐந்து குழந்தைகள்; வேளாளத் தெருவிலிருந்து எழெட்டுப் பேர்; பாக்கிக் குழந்தைகள் குடியானத் தெருவிலிருந்து வந்தன.
குடியானக் குழந்தைகளில் நாலைந்து பெண்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருத்திக்குச் சந்திரமதி என்று பெயர். அவள் நாட்டாண்மைக்கார நல்லானின் மகள். தாயில்லாக் குழந்தை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாரதியாரின் பின் வரும் வரிகள் ஞாபகத்துக்கு வரும்:
'பச்சைக் குழந்தையடி -
கண்ணில்
பாவையடி சந்திரமதி
இச்சைக்கினிய மது - என்
இருவிழிக்குத் தேன்நிலவு.'
அவளுடைய முகத்தில் களை சொட்டிற்று. கருவண்டுகளைப்
போன்ற அவளுடைய பரந்த கண்கள் யாருடைய உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். தலை
மயிரை அலட்சியமாய் எடுத்து ஒரு சொருக்குப் போட்டுக் கொண்டு வருவாள்.
அப்போது அவளைப் பார்த்தால் பண்டை காலத்துத் திறமை வாய்ந்த சிற்பி ஒருவன்
சாமுத்திரிகா லட்சணத்தில் அணுவளவும் பிசகாமல் அமைத்த ஒரு சிலை உயிர்
பெற்று நடந்து வருவது போல் தோன்றும்.பாவையடி சந்திரமதி
இச்சைக்கினிய மது - என்
இருவிழிக்குத் தேன்நிலவு.'
அழகைப் போலவே சமர்த்து. அவளுடைய வகுப்பில் அவள்தான் எப்போதும் முதலாவதாயிருப்பாள். அவளைப் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தியபோது எனக்குண்டான துக்கத்தைச் சொல்லி முடியாது. நமது சமூக நிலைமையைப் பற்றி நினைத்து அடிக்கடி வருந்துவேன். வேறொரு தேசமாயிருந்தால், இந்த மாதிரி அழகும் சமர்த்துமுள்ள பெண்கள் வருங்காலத்தில் எவ்வளவோ முன்னுக்கு வருவார்கள். இந்நாட்டிலோ, சின்ன சாதி - பெரிய சாதி, ஏழை - பணக்காரன் முதலிய எவ்வளவோ வித்தியாசங்கள், கட்டுப்பாடுகள். பெண் குலத்தின் பெருமை பிரகாசிப்பதற்கு வழியே கிடையாது. வயதாகும்போது இந்தப் பெண்ணை யாராவது ஒரு குடிகாரன் கழுத்தில் கட்டிவிடுவார்கள்; அடியும் உதையும் பட்டு எப்படியோ காலத்தைக் கழித்து விட்டு, கடைசியில் எல்லாரும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வாள். இவ்வாறெல்லாம் நான் எண்ணமிட்டதுண்டு.
நாலைந்து வருஷங்கள் சென்றன. சந்திரமதி நான் எதிர் பார்த்தது போலவே அழகு வடியும் இளமங்கையானாள். அவளுடைய கல்யாணமும் நான் எதிர்பார்த்தது போலவே நடக்குமென்று தோன்றிற்று. குளக்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ நான் போகும்போது சில சமயம் சந்திரமதி எதிர்ப்படுவாள். "ஸார்! சௌக்கியந்தானா?" என்று கேட்பாள். எனக்கு உடம்பு பூரித்துப் போகும். ஒருநாள் காலை நேரத்தில் குளக்கரையில் இருந்த இலுப்பந்தோப்பில் தரையிலே புஷ்பப்பாவாடை விரித்தது போல உதிர்ந்திருந்த இலுப்பைப் பூக்களை அவள் திரட்டிக் கொண்டிருந்தாள். மேலே மரக்கிளைகளில் நானாவிதமான பட்சிகள் பாடிக்கொண்டிருந்தன. இலுப்பைப் பூவின் மனோகரமான மணம் கம்மென்று வீசிக்கொண்டிருந்தது! அந்தக் காட்சியும், கீதமும், மணமும் என்னைப் பூரணமாய் வசீகரித்தன. அவ்விடத்தில் சற்று நின்று, "என்ன, சந்திரமதி! உனக்குக் கல்யாணமாமே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். அவளுடைய கண்களில் ஜலம் துளித்ததைக் கண்டதும், என்னுடைய சிரிப்பு சாம்பலாகிவிட்டது.
"ஸார்! நான் சொல்றதைக் கேளுங்கள். என்னை நீங்கள் கட்டிக் கொண்டு விடுங்கள். நான் வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்" என்றாள்.
எனக்கு அப்போது வயது ஐம்பது. ஆனாலும் நாம் இருபத்தைந்து வயது இளைஞனாயிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் உண்டாயிற்று. நான் மட்டும் வாலிபனாயிருந்திருந்தால், சந்திரமதியை அந்தக் கறுப்பு மீசைக்காரனுக்குக் கலியாணம் செய்து கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேனா? என்னுடைய சாதி, சம்பிரதாயம், குலம், கோத்திரம் எல்லாவற்றையும் அவளுக்காகத் தத்தம் செய்யத் தயாராயிருப்பேன். அவளுக்காக மோட்சத்தைக் கூடத் தியாகம் செய்வேன். ஆனால் என்ன பிரயோஜனம்? சீதைக்குச் சுயம்வரம் வைத்து ஜனகர், "உலகத்தில் ஆண்மையும் வீரமும் அற்று போய்விட்டனவா?" என்று கதறினாராமே, அந்த மாதிரி தான் நானும் "நம் தேசத்தில் வாலிபமும் தீரமும் நசித்துப் போய் விட்டனவா!" என்று நினைத்து வருந்தினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரமதி - Chandramathi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், சந்திரமதி, அவளுடைய, எனக்கு, என்னுடைய, போலவே, சாதி, அவளைப், செய்து, அப்போது, குழந்தைகள், அந்தக்