சந்திரமதி
3
கதையில் முக்கியமான இடம் இப்போதுதான்
வருகிறது. துரையப்பனையும், சந்திரமதியையும் பற்றிய வதந்தி ஏற்பட்டு ஒரு
வருஷத்திற்கு மேலாகிவிட்டது. சங்கராந்தி விடுமுறைக்கு ஜமீன்தார் பிள்ளைகளும்
துரையப்பனும் வந்திருந்த போது ஏதாவது நடக்குமென்று எதிர்பார்த்தேன்.
ஒன்றும் நடக்கவில்லை. தை சென்று, மாசியும் பிறந்து விட்டது. சித்திரையில்
சந்திரமதிக்கும் கறுப்பு மீசைக்காரனுக்கும் கல்யாணம் நடக்குமென்று கேள்விப்பட்டேன்.
இதனால் எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று.
சில தினங்கள் மாலை நேரத்தில் நான் ஆற்றங்கரையில் உலாவச் செல்வதுண்டு. அன்று வழக்கம்போல் சென்றவன் வாய்க்கால் மதகின்மேல் உட்கார்ந்து சந்திரமதியைப் பற்றிய சிந்தனையில் வெகுநேரம் ஆழ்ந்திருந்துவிட்டேன். நன்றாக இருட்டிவிட்டது. நிலவு கிடையாது. "சரி, போகலாம்" என்று எண்ணியபோது, மதகுக்கடியில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. இருட்டிய பிறகு ஆற்று மணலோடு நடந்து யாரோ அங்கு வந்திருக்க வேண்டும். பேச்சில் 'வெள்ளாழப் பையன்', 'சந்திரமதி' என்ற சொற்கள் காதில் விழவே உற்றுக் கவனித்தேன். குரலிலிருந்து, பேசியவர்கள் நல்லானும், கறுப்பு மீசைக்காரனும், நாகரத்தினமும் என்று தெரிந்தது.
நல்லான், கறுப்பு மீசைக்காரன் இவர்களுடனே நாகரத்தினமும் இருந்ததுதான் எனக்கு வியப்பு அளித்தது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆவலுண்டாயிற்று. சமய சந்தர்ப்பங்களும் அதற்கு உதவி செய்தன. அவர்கள் பேசியதைக் கேட்கக் கேட்க எனக்குக் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. "அட பாவிகளா! இப்படியா சூழ்ச்சி செய்கிறீர்கள்! வெளிப் பார்வைக்குச் சாதுவைப் போல் தோன்றிய இந்த நாகரத்தினத்தின் வஞ்ச நெஞ்சந்தான் என்ன!"
என்னை அறியாமல், "அடே படுபாவி!" என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்துவிட்டன. "யார் அங்கே?" என்று ஒரு குரல் கேட்டது. "ஏன், நான் தான்!" என்றேன். அடுத்த நிமிஷம் மூன்று பேரும் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அக்கரையான், தன் மடியில் செருகியிருந்த கொடுவாளைக் கையில் எடுத்துக் கொண்டான். "இதோ பாருங்க, ஸார்! இந்தக் கொடுவாளால் சிங்கப்பூரில் ஒன்பது பேரின் தலையைச் சீவியிருக்கிறேன் நான்; தெரியுமா?" என்றான். அவன் வாயிலிருந்து சாராய நாற்றம் குப்பென்று அடித்தது.
அந்தக் கும்மிருட்டில், நிர்மானுஷ்யமான இடத்தில் அவன் அப்படிப் பேசியது எனக்குப் பயத்தை உண்டாக்கிற்று. கை கால்கள் வெடவெடத்தன. மேலும் அவன் தொடர்ந்து, "நாங்கள் பேசியது உங்கள் காதில் விழுந்திருக்கும். அதை வேறு யாரிடமும் சொல்வதில்லையென்று உங்கள் தலைமேல் அடித்துச் சத்தியம் செய்யுங்கள். இல்லாவிட்டால் இங்கேயே உங்களை வெட்டி இந்த மதகின் அடியில் புதைத்து விடுவேன்" என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரமதி - Chandramathi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், நான், கறுப்பு