சந்திரமதி
4
வாழ்க்கையில் நம்முடைய குணத்தைச் சோதிக்கக்
கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன; அந்த சந்தர்ப்பங்களில் தீரத்துடன்
நடந்துகொள்ள நாம் தவறி விடுகிறோம். பிறகு வாழ்நாள் முழுவதும், "அடாடா!
அப்படிச் செய்தோமா? இப்படிச் செய்தோமா" என்று சிந்தித்துக் கவலைப்படுகிறோம்.
கறுப்பு மீசைக்காரன் என்னைப் பயமுறுத்தியபோது, "போ! உன்னாலானதைச் செய்து கொள்; நான் வாக்குறுதி ஒன்றும் கொடுக்க மாட்டேன்" என்று நான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. "எனக்கென்ன அப்பா வந்தது? உங்கள் வினை. நான் தலையிடலை. நான் ஒருவரிடமும் சொல்லவில்லை" என்றேன். கறுப்பு மீசைக்காரன் அது போதாது என்றான். அவன் இஷ்டப்படி, "சத்தியமாய்" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொடுத்தேன்.
அவர்களுடைய சம்பாஷணை இன்னதென்பதை இங்கே நான் எழுதினாலும் சத்தியத்தை மீறியதாகுமென்று பயப்படுகிறேன். ஆதலின், பின்னால் நடந்த சம்பவங்களை மட்டும் கதையைப் போல் எழுதிச் சொல்கிறேன். அவற்றிலிருந்தே, மேற்படி சம்பாஷணையின் போக்கை நீங்கள் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
"ஞான ரதம்" என்னும் நூலில் கந்தர்வலோகத்து 'மதனன் விழா'வைப் பற்றிப் படித்திருப்பீர்கள். எங்கள் ஊர் குடியானத் தெருவிலும் மாசி மாதத்துப் பௌர்ணமியன்று காமன் பண்டிகை கொண்டாடுவார்கள். பாரதியார் வர்ணித்திருக்கும் கந்தர்வலோக விழாவிலுள்ள சௌந்தரிய அற்புதம் ஒன்றும் இங்கே கிடையாது. 'நுண்வான்' கொண்டு அமைக்கப்பட்ட பதுமைகள், 'சைத்ரிக்' ஜீவன் பெற்ற சித்திரங்கள், மாடநிலத்து மண்டபங்கள், ஸுரிய காந்தக் கல்மேடைகள், அழகே உருவெடுத்த கந்தர்வ யுவர்கள், யுவதிகள், அவர்கள் இணையிணையாக வட்டங்களிட்டுக் கூத்தாடும் காட்சிகள் முதலியவற்றை எங்கள் ஊர் மதனன் விழாவில் பார்க்க முடியாது. ஆனால் கந்தர்வலோகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் பொதுவான அம்சம் ஒன்றுமட்டும் உண்டு. அது தான் பூரண சந்திரனின் மோகன நிலவு. குப்பைக் கூளங்கள் நிறைந்து தரித்திரம் தாண்டவமாடும் எங்கள் கிராமத்திலே கூட மாசி மாதத்துப் பௌர்ணமியன்று இரவு சௌந்தரிய தேவதை கொலுவீற்றிருப்பாள்.
இன்னொரு விதத்திலும், கந்தர்வலோக மதனன் விழாவுக்கும், எங்கள் ஊர் மன்மதசாமி உற்சவத்துக்கும் ஒற்றுமை உண்டு; அதாவது விழாவில் கலந்துகொள்வோர் காட்டும் உற்சாகத்தில், தொண்டு கிழவர் முதல் குஞ்சு குழந்தைகள் வரையில் இரவு முழுதும் மெய்மறந்து களிப்புக் கடலில் மூழ்கியிருப்பார்கள்.
தந்தத்தையொத்த வெண்ணிறத் தென்னங்குருத்துகளைக் கொண்டு சப்பரம் கட்டுவார்கள். அதில் சிவபெருமான் படம் ஒன்றை வைத்து ஊர்வலம் விடுவார்கள். சப்பரத்துக்கு எதிரில் மன்மதவேஷமும், ரதிவேஷமும் போட்டு இரண்டு பிள்ளைகளை நிறுத்தியிருப்பார்கள். மன்மதன் கையில் ஒரு வில்லை வைத்துக் கொண்டு பாணம் விடுவதுபோல் சைகை காட்டிக் கொண்டிருப்பான். ரதி, "வேண்டாம், வேண்டாம்" என்று சமிக்ஞை செய்து கொண்டிருப்பாள். இப்படி ஊர்வலம் விட்டு, இரவு பின் ஜாமத்தில் வெள்ளி முளைக்கும் நேரத்தில்தான் மன்மதசாமி கோவிலுக்கு வந்து சேர்வார்கள். பிறகு மன்மத தகனம் நடக்கும். பின்னர், எல்லாரும் கும்பலாய்க் குளத்திற்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வீடு திரும்புவார்கள்.
யாரோ ஒருவர் எழுதியிருந்தாரே, அதுபோல், சிவபெருமான் ஒரு சிறந்த ரஸிகர் என்பதில் சந்தேகமில்லை. பாருங்கள், அவர் மன்மதனுடைய உடலை எரித்துவிட்டு, அவனுடைய சக்தியை மட்டும் உலகத்தில் விட்டு வைத்திருக்கிறார்! இதற்குப் பதிலாக, அவர் மன்மதனுடைய உடலைச் சும்மா விட்டுவிட்டு, அவனுடைய சக்தியை அழித்திருந்தாரானால், உலகம் எவ்வளவு வெறுமையாய்ப் போயிருக்கும்? வாழ்க்கை எவ்வளவு விரஸமாயிருந்திருக்கும்?
மன்மத தகனம் நடைபெற்ற அன்றிரவிலேயே, வேறொரு பக்கம் அவனுடைய சக்தி வேலை செய்து கொண்டிருந்தது. எங்கள் கிராமத்திற்கு மேற்கே அரை மைல் தூரத்தில் பெரிய சாலை போகின்றது. அதற்குக் கிராமத்திலிருந்து கிளைப்பாதை வழியாகப் போக வேண்டும். கிளைப்பாதை பெரிய சாலையுடன் சேரும் இடத்தில் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாயிருக்கின்றன. அவ்விடத்தில் அன்று இரவு வெள்ளி முளைக்கும் நேரத்திலே ஒரு மோட்டார் வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் டிரைவருடைய ஆசனத்தில் துரையப்பன் உட்கார்ந்திருந்தான். கிளைப்பாதையை அவன் அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் கிளைப்பாதையில் இரண்டு உருவங்கள் தென்பட்டன. அவை அருகில் நெருங்கிய போது, சந்திரமதியும் நாகரத்தினமும் என்று தெரிய வந்தது. மேற்குத் திசையில் அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்த வெளிறிய சந்திரனின் ஒளி சந்திரமதியின் முகத்தில் படுங்கால், அவளுடைய இதழ்களில் புன்னகையும், கண்களில் நீர்த்துளியும் இருப்பது தெரிய வந்தது. அந்நீர்த்துளிகளில் சில சமயம் நேராகச் சந்திரக்கிரணங்கள் விழுந்தபோது, அவை ஒளி வீசும் முத்துக்கள் போல் பிரகாசித்தன.
மோட்டாரின் அருகில் அவர்கள் வந்ததும், துரையப்பன் சட்டென்று இறங்கிக் கதவைத் திறந்தான். சந்திரமதி பின் ஆசனத்திலும், நாகரத்தினம் துரையப்பனுக்குப் பக்கத்திலும் உட்கார்ந்தார்கள்; வண்டி கிளம்பிற்று; அதே சமயத்தில் தூரத்தில் நெருப்பின் ஜுவாலை கிளம்புவது தெரிந்தது; மன்மத தகனத்தின் கோலாகல சப்தம் வந்து கொண்டிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரமதி - Chandramathi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், எங்கள், இரவு, மன்மத, கொண்டிருந்தது, அவனுடைய, கொண்டு, மதனன், செய்து, வந்தது