சிந்துப்பாவியல்
49. தென்பாங்கு
-
தண்டமிழ் மண்ணின் தனிமணம் தன்னை
ஒண்டமிழ் சிந்தின் ஓசையிற் காட்டி
அடிவகை பலவொடும் இயைபொடும் அமைவது
தென்பாங் கென்ப செந்தமிழ் வல்லோர்.
விளக்கம் : தென்தமிழ் நாட்டின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் ஒருவகை அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தென்பாங்கு என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது தெம்மாங்கு என மருவி வழங்கப்படுகிறது.
தென்பாங்குப் பாடல் பலவகை அடிகளைக் கொண்டிருக்கும்; பலவகைச் சீர்களைக் கொண்டு பலவகைத்தாள நடைகளிலும் வரும்; இயைபுத் தொடையே மிகுதியாகக் கொண்டிருக்கும்..
காட்டு : (1)
-
மதுரைக்கு நேர்கிழக்கு மாரிமம்மன் தெப்பக்குளம்
மஞ்சள்நீர் ராடையிலே தங்கந்தில்லாலே - நானும்
குஞ்சரத்தைத் தோற்றேனடி பொன்னுந்ந்தில்லாலே
(தங்கந்தில்லாலே.தெம்.தொடை.ப.276)
-
கொலைசெய்யப் போறே னென்று
கோதையிடம் கூறிடவே
மலைபோல நின்றாள் சிறு
மங்கை இளம் பாலாம்பாளும்
என்ன செய்தானய்யா - அதை
எடுத்துரைப்பாய் மெய்யா.
(சித்தையன் கொலைச் சிந்து.தொடை.ப.278)
50. பலவாறாக வரும் சிந்துகள்
-
பாங்கிமார், கிள்ளை, பாப்பா, தங்கம்
கண்ணாட்டி, குள்ளத் தாரா, கலைவளர்
வெண்ணிலா முதலிய விளிகொள் சிந்தும்,
தேவடி, முருகன், பூவடி, உடுக்கை,
கலியுகம், ஓடம், கள்ளுக் கடையே,
புறாவே, சேவல், புகைவண்டி, சாவு,
கோலாட் டெனப்பெயர் குறித்த சிந்தும்,
ஆத்திச்சூடி, திருப்புகழ் அனைய
நூற்பெயர் சார்த்தி நுவன்ற சிந்தும்
‘தன்னானே’ எனத் ‘தில்லாலே’ என
‘ஏலேலோ’ என ‘ஐலசா’ என்ன
ஒலிகளின் குறிப்பை உடைய சிந்தும்,
இன்ன பிறபெயர் துன்னிய சிந்தும்,
கண்ணி, சிந்து, பண்ணார் பாட்டே
என்னும் பெயர்களை ஏற்றுமுன் சொன்ன
பொதுவிலக் கணங்கள் பொருந்திப் பிறந்தே,
அடியும் தொடையும் நடையும் வடிவும்
தனிச்சொல் வரவும் இனிதியல் முடுகும்
இன்னவாறென்னும் யாபுறவின்றிக்
கூறுபாவலர் குறிப்பில் அமைந்து
வழங்கிடும் என்ப மரபறிந் தோரே.
விளக்கம் : வேறு பெயர்களைத் தாங்கி வரும் சிந்துகள், வினோதச் சிந்து, சரித்திரச் சிந்து, காட்சிச் சிந்து, சதிமோசச் சிந்து, சமுதாயச் சிந்து, ஓரடிச் சிந்து, சிறப்புச் சிந்து, வைபவச் சிந்து, ஈட்டிக்காரனிடத்துக் கடன்பட்டு ஓட்டம் பிடிக்கும் சிந்து முதலியனவாகும்.
நூற்பெயரைச் சார்ந்து வரும் சிந்துகள் : ஆத்திச் சூடி சிந்து, திருப்புகழ்ச் சிந்து முதலியன.
ஒலிகளின் குறிப்பையுடைய சிந்துகள் : தன்னானே சிந்து, தில்லாலே சிந்து, ஏலேலோ சிந்து, ஐலசா சிந்து முதலியன.
இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகைப் பாடல் அமைப்பைக் கொண்டது என்று சொல்ல முடியாது. தனி அமைப்புகளைப் பெற்றுள்ள காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, வளையற் சிந்து, இலாவணி, ஆனந்தக் களிப்பு முதலிய சில வகைகளே மேற்கண்ட நூல்களில் வருகின்றன. புதிய வடிவங்களும் அவ்வப்போது உண்டாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை பொருளால் மட்டுமே வேறுபடுகின்றன.
இவற்றைப் படிப்போர், அச்சிட்டோர் ஆகியோரில் பெரும்பாலோர் முறையாகத் தமிழும், இசையும் கற்றவர் என்று கூறமுடியாது. இவர்களில் பலர் ஒருவரைப் பார்த்து மற்றவர் எழுதும் மெட்டாகவே சிந்துப் பாடல்களை இயற்றி வந்துள்ளனர்.
பலவாறாக வரும் சிந்துப் பாடல்கள்
காட்டு : (1) பாங்கிமார்க் கண்ணி
-
அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே - மிக
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே
இன்பவடி வாய்ச்சபையில் பாங்கிமாரே - நடம்
இட்டவர்மேல் இட்டம் வைத்தேன் பாங்கிமாரே
(திருவ.பக்.524)
-
வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே
ஊனும் உருகுதடி
(சிவசுப்ரமண்யர் பேரில் கிளிக்கண்ணி.சில்லறைக் கோவை.ப.4)
-
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
(பா.கவி.ப.175)
-
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்வதுவும்
ஓடுவதுவும் தேடுவதும் - தங்கமே
ஒரு சாண்வயிற்றுக்கடி ஞானத் தங்கமே.
(மெய்ஞ்ஞானத்தங்கம்.தொடை.ப.274)
-
பாதமிரண் டில்சதங்கை கீதம்பாடுதே - கண்ணாட்டி கீதம்பாடுதே
சீதமதி முகத்தை கண்டென் சித்தம்வாடுதே - கண்ணாட்டி சித்தம்வாடுதே
(செங்கல்வராயன் கண்ணாட்டிச் சிந்து.ப.2)
-
கட்டிலுண்டு மெத்தையுண்டு குள்ளத்தாரா - நாம்
கலந்துசு கிக்கலாமே குள்ளத்தாரா.
(குள்ளதாராச் சிந்து. ப.2)
காட்டு : (7) வெண்ணிலாக் கண்ணி
-
தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாமே - ஒரு
தந்திரம்நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே
(திருவ.465)
காட்டு : (8) முருகர் சிந்து
-
திருத்தணி முருகா திருமால் மருகா
வருத்தம்செய் யாமலிப் போ - முருகா
(திருப்போரூர் முருகர் சிந்து)
-
சுட்ட நல்ல சுட்ட நல்ல கருவாடு - கருவாடு
தொட்டி ரம்ப தொட்டி ரம்ப சாராயம் - சாராயம்
வறுத்த நல்ல வறுத்த நல்ல கருவாடு - கருவாடு
வட்டி ரம்ப வட்டி ரம்ப சாராயம் - சாராயம்
(தொடை.ப.291)
கள்ளைய | றந்திடடா | குடிகாரப்பா | வி |
காலையில்கு | டியாதேடா | சதிகாரப்பா | வி |
பிள்ளைக்குட்டி | பெத்தாயோடா | சண்டாளப்பா | வி |
பின்னும்புத்தி | வல்லையேடா | குடிகாரப்ப்பா | வி |
-
இங்குவந்த என்புறாவை எடுத்திருந்தால் கொடுத்திடம்மா
அங்குசெல்ல வேணும்விளை யாடவேணு மேசின்னம்மா
அன்னையே என்னையே
அனுப்பத் தடை செய்யாதம்மா.
(செஞ்சி ஏகாம்பரம் புறாப்பாட்டு முதற்பாகம்: 1923.ப.3)
-
அஞ்சுவர்ண நிறமுடைய அன்னநடைச் சேவல்
அன்னநடைச் சாவல்தன்னை
அடக்கிக்கொண்டவ ளாரோ?
(சாவல்பாட்டு: 1923.ப.4)
காட்டு : (13) கொலைச் சிந்து
-
கொலை செய்யப் போறே னென்று
கோதை யிடம் கூறிடவே
மலைபோல நின்றாள் சிறு
மங்கை இளம் பாலாம் பாளும்
என்ன செய்தான் ஐயா - அதை
எடுத்துரைப்பாய் மெய்யா!
(சித்தையன் கொலைச் சிந்து. தொடை. பக். 278)
காட்டு : (14) தன்னானே சந்தம்
“தன்னானே தன்னானே தானதன்னே” என்ற சந்தத்தில் பாடபடுவதால் இவ்வகைப் பெயர் பெற்றது.
-
இஞ்சிக்கி ணறும்இ டியக்கண் டேன்
எடுமிச்சைத் தோப்பும்அ ழியக்கண் டேன்
மஞ்சள்கி ணறும்வ றளக்கண் டேன்
மல்லிகைத் தோப்பும்அ ழியக்கண் டேன்
(கட்ட.சி. தொ. ப.285)
காட்டு : (15) ஏலப்பாட்டு
-
தலத்தின்உ யர்சீரகம் பெருங்காம் சுக்கு
சதகுப்பை கொத்தமல்லி குங்கிலியம் ஏலம்
உலப்பரி யகடுகு மிளகொடு லவங்கப் பட்டை
ஓங்கு வால்மிளகு பச்சைக்கருப் பூரம் கோட்டம்
விலக்கரிய அதிமதுரம் விளங்குமலைப் பச்சை
மிக்ககுங் குமப்பூவோ டரிதாரம் குக்கில்
தலத்தமை யும்சாதிக்காய் ஆதிபல கொண்டு
சஞ்சரித்துத் துறைவந்து சேர்ந்ததுகாண் கப்பல்
ஏலேலோ ஏல ஏலேலோ
(கடற்பாட்டு. தொடை. மேற்கோள்: ப.289)
காட்டு : (16) தில்லாலே சிந்து
-
மலையோரம் கிணறு வெட்டி - தில்லாலங்கிடிலேலம்
மானுக் கொம்பு ஏத்தம்வச்சி - தில்லாலங்கிடிலேலம் (சோமலெ.1981.168)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்