சிந்துப்பாவியல்
3. தாளமுடைய பாடல்களின் வகை
- தாள நடையுடைப் பாக்கள், வண்ணம்,
சந்தம், சிந்தே, உருப்படி என்ன
நால்வகை யாக நவிலப் படுமே.
விளக்கம் : இசையோடு தாளமும் சேர்ந்து நடக்கும் பாடல்கள் இசையளவு பாக்கள் என்பது முன்பு விளக்கப்பட்டது (நூ.2.உரை). அந்த இசையளவுப் பாக்கள் நான்கு வகையாக வழங்கப்படுகின்றன. அவை வண்ணப்பாக்கள், சந்தப்பாக்கள், சிந்துப்பாக்கள், உருப்படிகள் எனபனவாகும்.
காட்டு : வண்ணப்பா
தனனதன தனனதந்தத் தனதானா - என்ற அமைப்புடையது.
-
இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகி லுழலுநெஞ்சத் தலையாலே
பரமகுரு வருணினைந்திட் டுணர்வாலே
கரவுதரி சனையையென்றற் கருள்வாயே
தெரிதமிழை யுதவுசங்கப் புலவோனே
சிவனருளு முருகசெம்பொற் கழலோனே
கருணைநெறி புரியுமன்பர்க் கெளியோனே
கனகசபை மருவுகந்தப் பெருமாளே! (திருப்புகழ் - 144)
சந்தப்பாக்கள் சந்தப் பாவிற்குரிய சந்தமாத்திரை பெற்றிருக்கும்.
-
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யொவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமொமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ னழகென்பதோ ரழியாவழ குடையான் (கம் - 1926)
-
உண்டான ஆத்தியெல்லாம் - வீட்டில்
உடைமை கடமைகளும் உடன்எடுத்துக்
கொண்டாடிக் கொண்டெழுந்தேன் - பாதை
கூடித்தென் பூமியை நாடிச் சென்றேன்.
சென்றேன் தலங்களெல்லாம் - பின்னர்ச்
சிதம்பரத் தையர் பதம்பெறநான்
நின்றேன் புலியூரில் - தொண்டர்
நேசிக்கும் சந்நிதி வாசல் வந்தேன் (திரு.நொ.நா.பக்.34, 35)
எடுப்பு
-
தெண்டனிட்டேன் என்று சொல்லடி - சுவாமிக்குநான்
தெண்டனிட்டேன் என்று சொல்லடி.
- தண்டலை விளங்கும் தில்லை தளத்தில் பொன்னம்பலத்தே
கண்டவர் மயங்க வேடம் கட்டியாடு கின்றவர்க்குத் (தெண்ட)
- கற்பூர வாசம் வீசும் பொற்பாந் திருமுகத்தே
கனிந்தபுன் னகையாடக் கருணைக் கடைக்கண் ஆட
அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
ஆடிக்கொண்டே என்னை ஆட்டங்கண் டாருக்குத் (தெண்ட)
(திருவ - 1602, 1603)
4. சிந்துப்பா
- ஈரடி அளவொத் தியலும் பாக்கள்
சிந்தெனும் வகையைச் சேரும் என்ப
விளக்கம் : இசைப்பா, இசையளவு பா என்ற இருவகையுள், சிந்துப்பா இசையளவு பா என்று முன்பு காட்டப்பட்டது (நூ.2.உரை). யாப்பிலக்கணங்களில் சீர்கள் என்று கொள்ளப்பட்டவை மா, விளம், காய், கனி முதலிய வாய்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இசையளவு பாக்களின் பாற்பட்ட சிந்துப்பாக்கள் தாள நடையை அடிப்படையாகக் கொண்டவையாகலின் அப்பாக்கள் ஒவ்வொர் அடியிலும் நான்கு சீர்களுக்குக் குறையாமல் கொண்டிருக்கும். யாப்பிலக்கண முறையில் அமைந்த மிகச் சிறிய அடியும் சிந்து இலக்கண முறையில் நாற்சீராக அலகிடப்படும்.
காட்டு : நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி (யாப்பிலக்கண முறை)
-
நெஞ் - சிலு - ரமு - மின்றி
நேர் - மைதி - றமு - மின்றி (சிந்திலக்கண முறை - 8 சீர்) (பா.கவி. ப. 196)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்