சிந்துப்பாவியல்
47. காவடிச் சிந்து
-
கந்தனை வழிபடக்காவடி எடுப்போர்
பாடி யாடப் பயன்படும் பாடலாய்
நாடகத் தமிழின் நயமிகு வகையாய்
எவ்வகை அடியினும் எவ்வகை நடையினும்
தனிச்சொல்லும் இயைபும் நனிமிகப் பெற்று
தொடைநயம் நான்ற நடையுடைத் தாகி,
முடுகியல் அடிகளை இடையிடை ஏற்றுச்
சிந்து வகைகளிற் சிறப்புற நடப்பது
காவடிச் சிந்தெனக் கருதப் பெறுமே.
விளக்கம் : காவடிச் சிந்துகள் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்து வகையாகக் கொள்ளப்படுகின்றன. மும்மை, நான்மை, ஐம்மை எழுமை ஆகிய நடைகளிலும், சொல் நயம், பொருள் நயம் கெடாமல், எதுகை மோனை, இயைபுகள் கொஞ்சச் சந்தம் சிறந்துவர, நாட்டுப்புறப் பாடல்களின் எளிமையுடன் இறைப் பற்றையும் அகத்துறைக்ளையும் அமைத்துத் தமக்குமுன் இயற்றப் பெற்ற வள்ளியம்மை கல்யாணக் காவடிச்சிந்து போன்ற நூல்களிலிருந்து கிடைத்த இனிய மெட்டுகளைச் சிறப்பாகப் பாயன்படுத்திக் காவடிச் சிந்துகளை பாடியதில் சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (1861-1891) அடைந்த வெற்றியை இன்றுவரை வேறு எவரும் அடையவில்லை எனலாம்.
பால், சந்தனம், பன்னீர் முதலிய வழிபாட்டுக்குரிய பொருள்களைக் காவடியில் வைத்துத் தோளில் சுமந்து முருகன் கோயில்களுக்கு ஆடிக்கொண்டு சொல்லும் போது ஆடுவதற்கு ஏற்ற வகையில் பலவகைத் தாள நடைகளிலும் ஆடுவதற்கு ஏற்ற வகையில் பலவகைத் தாள நடைகளிலும் அமைந்திருப்பதால் இதனை இசைத்தமிழ் என்பதினும் நாடகத்தமிழ் என்பது பொருந்தும்.
இத்தனைச் சீர் என்னும் வரையறையின்றி எண்சீரடி முதல் இருபத்துநான்கு சீரடிகள் வரையில் காவடிச்சிந்துகளில் இடம் பெற்றுள்ளன. இச்சீர்கள் மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை என பல்வகை நடைகளிலும், இவற்றின் கலப்பு நடைகளிலும் அமையும். மிகுதியான தனிச்சொற்களை பெற்றுவருவன காவடிச் சிந்துப் பாடல்களே. காவடிச் சிந்தின் மோனை மிகப் பல இடங்களில் அமைந்திருக்கும். இயைபுகள் மிகுதியாக இருக்கும்.
அடிகளின் இடையில் முடுகியல் அடி அமைந்திருக்கும். ஒரு காவடிச்சிந்து மும்மையா, நான்மையா, ஐம்மையா, எழுமையா என்று அதன் நடையைத் தெளிவாகக் காட்டக்கூடியவை பெரும்பாலான பாடல்களில் அடிகளின் இடையில் அமையும் முடுகியற் சீர்களேயாகும். இது காவடிச்சிந்தின் தனித் தன்மைகளில் ஒன்று.
காட்டு : (1) மும்மை நடை
அன்னவ யற்செந்தூர் வாசன் - மந்த காசன் - அன்பர் நேசன் - நாளும் அண்ணாம லைக்கவி ராசன் - பாடும் அமுதச்சுவை தருமுத்தமிழ் களபத்தொடு கமழ்பொற்புய அற்புத வேலன்செய் சாலம் - தன்னால் கற்பழிந் தாயோஇக் காலம்? (கா.சி.க.வ.ப.194)இதில் ‘இடர் பெற்றிட’ என்றும், ‘அமுதச்சுவை’ என்றும் தொடங்கும் நந்நான்கு சீர்கள் முடுகியல். முடுகியல்கள் மட்டும் வண்ணப்பாவின் இலக்கணம் கொள்ளும். இப்பாடலில் முடுகியற்சீர் ஒவ்வொன்றும் ஆறு சந்த மாத்திரை அளவில் ‘தனதத்தன’ என்ற சந்தத்துடன் வருவது காண்க. முடுகியல் பாடும்போது மட்டும் தாளம் ‘தகதரிகிட’ என விரைவு மும்மையில் நடக்கும்.
காட்டு : (2) நான்மை நடை
-
தெள்ளுதமி ழுக்குதவு சீலன் - துதி
செப்புமண்ணா மலைக்கனு கூலன் - வளர்
செழியர்பு கழ்விளைத்த கழுகும லைவளத்தைத்
தேனே - சொல்லு - வேனே
வெள்ளிமலை ஒத்தபல மேடை - முடி
மீதினிலே கட்டுகொடி யாடை - அந்த
வெய்யவன டத்திவருந் துய்யஇர தப்பரியும்
விலகும் - படி - இலகும்
(கா.சி.க.வ.ப.136)
காட்டு : (3) ஐம்மை நடை
-
சீர்வளர்ப சுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ் லாதினிய தெள்ளமுது - மயிலான்
போர்வளர்த டங்கையுறு மயிலான் - விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல் செய்வாமே
(கா.சி.க.வ.ப.131)
காட்டு : (4) எழுமை நடை
-
பொன்னுலவு சென்னிகுள நன்னகரண் ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் - முந்தி
வெந்திற லரக்கர்களை வென்றவன் - மயில்
போலஏனலின் மீதுலாவுகி ராதமாதுமு னேகியேஅடி
பூவையேஉ னதுதஞ்சம் என்றவன் - ஈயும்
மாவையேஇ னிதுமென்று தின்றவன்
மின்னுலவு சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே - கதி
வேண்டியேஅ கத்தில்அன்பு மன்னியே -
வேலவன்கிரு பாகரன்குகன் மேவிடும்கழு காசலம்தனில்
விஞ்சியவ ளங்களையான் உன்னியே - சொல்ல
ரஞ்சிதமாய்க் கேளடிவிற் பன்னியே
(கா.சி..க.வ.ப.142)
காட்டு : (5) கலப்பு நடை (மும்மை + எழுமை)
-
திருவுற்றி லகுகங்க வரையிற்பு கழ்மிகுந்து
திகழத்தி னமுறைந்த வாசனை - மிகு
மகிமைச்சு கிர்ததொண்டர் நேசனைப் - பல
தீயபாதக காரராகிய
சூரர்யாவரு மாளவேயொரு
சிகரக்கி ரிபிளந்த வேலனை - உமை
தகராக்கு ழல்கொள்வஞ்சி பாலனை
மருவுற்றி ணர்விரிந்து மதுபக்கு லமுழங்க
மதுமொய்த்தி டுகடம்ப ஆரனை - விக
சிதசித்ர சிகிஉந்து வீரனை - எழில்
மாகநாககு மாரியாகிய
யாதினோடுகி ராதநாயகி
மருவப்பு ளகரும்பு தோளனை - எனை
அருமைப்ப ணிகொளுந்த யாளனை
(கா.சி.க.வ.ப.3131)
இதில் ‘தீயபாதக’ என்றும் ‘மாகநாககு’ என்றும் வரும் முடுகியற் சீர்கள் நான்கும் எழுமை நடையிலும் ஏனைய சீர்கள் ஐம்மை நடையிலும் நடப்பதைப் பாடியுணர்க.
48. வழிநடைச் சிந்து
-
வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய
ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்தி
பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்
அடியும் நடையும் அமைவுறப் பெற்று
வழிநடைச் சிந்தென வகுக்கப் படுமே
காட்டு :
-
கோபுர மீதுபுறாச் சோடி - நமைக்
கூப்பிடுதே வாஎனக்கு மரனைக் கொண்டாடி
நூபுர ஓதையளித் தோடிக் - கதிர்
நூலெனவி டந்தொறும் நு டங்கிடை நீ வாடி
(வெ.கோ.வ.சி.தொடை.ப்.271)
வழிநடைச்சிந்துகள் ஓரடிக் கண்ணியாகவும் வரும். பின்வரும் வழிநடைச் சிந்தின் ஓரடி 11 ஏகதாள வட்டணைகளில் அடங்கும் 44 சீர்களைப் பெற்றுள்ளது. அப்பாடலின் பிற்பகுதி ஒருவகைச் சந்த அமைப்பில் உள்ளதையும், எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.
காட்டு : பின் சந்தக் குழுப்பு
-
தந்தானன தந்தானன தந்தானன தந்தானன
தத்தத்தன தனதந்தன தத்தத்தன தனதந்தன
தனதத்தன தந்தத்தன தனதத்தன தந்தத்தன
தனதத்தன தனதத்தன தனதத்தன தனதத்தன
பத்மினிசாதிப் பெண்ணே மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய் நீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையில்ன் மீதினில் மோகம் - கொண்ட
பண்பினால் மேவும்நல் யோகம் - மலர்
பைங்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள்
பச்சைகொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு
பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு
பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர் (பத்மினி)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்