சிந்துப்பாவியல்
ஆசிரியர் இரா. திருமுருகன்
/அரங்க நடராசன் உரையுடன்
(வெளியீடூ பாவலர் பண்ணை, 1994)
/அரங்க நடராசன் உரையுடன்
(வெளியீடூ பாவலர் பண்ணை, 1994)
அ. பொதுவிலக்கணம்
1. இசைத்தமிழ்
-
இசைத்தற் கெனவே இயன்ற பாக்கள்
இசைத்தமிழ் எனப் பெயர் இயம்பப் பெறுமே.
விளக்கம் : தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள்:
இயற்றமிழ் என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது, பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும். இயற்றமிழ்ச் செய்யுளை இயற்பா என்பர். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன இயற்பாக்கள் எனப்படும்.
இசைத்தமிழ் என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நடப்பது; சொற்பொருள் இன்பங்களையும் கொடுக்கக் கூடியது. இசைத்தமிழ் நூல்கள்; தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவலில் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியன; திருப்புகழ் முதலியன.
இசைத்தமிழ்ப் பாடல்கள்: கலிப்பா* பரிபாடல்* பாவினங்கள்* வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி முதலியன. இவையாவும் இசைத்தற்கெனவே இயன்ற பாக்கள். ஆகவே இசைத்தமிழ் என்று வழங்கப்பட்டன.
--------------
*இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறியன இசைநூலின் பாவினம் ஆமாறு கூறுதலின்’ என்று கூறுகின்றார். இதனால் பாவினங்கள் இசைநூலுக்கு உரியவை என்பது தெளிவாகும். பேராசிரியர், அவையாவ: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின, (தொ.பொ.செய்.1 80.பேரா.உரை) என்று விளக்குகிறார்.
கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொ.பொ.செய்.242. பேரா.உரை)
--------------
முதல் ஏகாரம் தேற்றம், இறுதி ஏகாரம் ஈற்றசை.
-
பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்
பாட்டின்இயல பண்ணத் திய்யே (தொ.பொ.செய்.இளம்.173)
------
2. இசைப்பா
-
பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும்
நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா.
விளக்கம் : தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் இசைக்கும் பாடல்கள் இசைப்பா எனப்படும். திருத்தாண்டகங்கள் இசைப்பா வகையைச் சார்ந்தவை. அவை மா, விளம் வாய்பாடுகளால் ஆனவை. தாண்டகங்கள் தாளத்துடன் பாடப்படுதல் இல்லை. தாளமின்றி விருத்தம் பாடுதலை “சுத்தாங்கமாகப் பாடுதல்” என்பர். அவ்வாறு பாடப்படும் திருத்தாண்டகங்களைச் சிலர் ஏதேனும் தாளத்தில் அடக்கிப் பாடுவர். எனினும் இயல்பாயிருக்காது.
காட்டு :
- செங்கால மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கு என் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுவொப்பது எமக்கின்ப மில்லை நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்; தந்தால்
இங்கேவந்து இனிதிருந்துஉன் பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே!
(திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்-27)
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்