சிந்துப்பாவியல்
43. ஆனந்த களிப்பு
-
கும்மி போல மும்மையில் வரினும்
அடியின் இறுதிசேர் அசைநீட் டத்தைத்
தனிச்சொல் முன்னர்த் தாங்கி வருவது
ஆனந்தக் களிப்பென் றறையப் படுமே.
விளக்கம் : இறையருளைப் பெற்றவர்கள், பெற்ற மகிழ்ச்சியின் மிகுதியினால் பாடும் பாட்டுக்கு இப்பெயர் அமைந்ததாகக் கருதலாம். மாணிக்கவாசகர் ‘ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்’ (திருவாசகம், திருவம்மானை 3) என்று பாடிய ஆனந்தம்’ என்னும் வடசொல் இப்பெயர்க்கு முன்னோடியாய் இருக்கலாம். அதனுடன் அதே பொருள்படும் ‘களிப்பு’ என்னும் தமிழ்ச்சொல்லும் இணைந்து ‘ஆனந்தக் களிப்பு’ என்ற தொடர் உருவாகியிருக்கலாம். திருவம்மானைக்கு ஏற்பட்டிருந்த ஆனந்தக் களிப்பு என்ற பெயரைத் தம் சிந்துப் பாடலுக்கும் கடுவெளிச் சித்தர் முதலியோர் பயன்படுத்தியிருக்கலாம். கடுவெளிச் சித்தரின் ‘பாபம் செய்யாதிரு மனமே’, தாயுமானவரின் ‘சங்கர சங்கர சம்பு’ முதலியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பின் வந்தோரால் ஆனந்தக் களிப்புகள் எழுதப்பட்டு வந்தன.
கும்மிப்பாடல் மும்மை நடையில் வருவது போல ஆனந்தக் களிப்பும் மும்மை நடையில் வரும்; கும்மியில் அசை நீட்டம் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் வரும்; ஆனால் அந்த அசை நீட்டம் ஆனந்தக் களிப்பில் தனிச்சொல் பெறுகின்ற அரையடியின் முன்பாக வரும்; இது கும்மிக்கும் ஆனந்தக் களிப்பிற்கும் உள்ள வேறுபாடு.
காட்டு : கும்மி
-
மானைப்ப ழித்தவிழியுடை யாள் - ஒரு
மாமயில் போலும் நடையுடை யாள் . .
தேனைப்ப ழித்தமொ ழியுடை யாள் - பெண்ணின்
தெய்வமெ னத்தகும் சீருடை யாள் . .
(ஆசிய சோதி. தொடை. மெற்.ப. 280)
காட்டு : ஆனந்தக் களிப்பு
-
ஆதிசி வன்பெற்று விட்டான் . - . என்னை
ஆரிய மைந்த கத்தியன் என்றோர்
வேதியன் கண்டும கிழ்ந்தே . - . நிறை
மேவும்இ லக்கணம் செய்துகொ டுத்தான்.
(பா.கவி. ப.166)
ஆனந்தக் களிப்புகள் அமைப்பில் நொண்டிச்சிந்துகளை பெரிதும் ஒத்துள்ளன; நடையால் மட்டுமே வேறுபடுகின்றன. நொண்டிச் சிந்துகள் நான்மை நடையின. ஆனால் ஆனந்த களிப்புகள் மும்மை நடையின.
44.
-
அடி, அரை யடிதொறும் இறுதியில் அமையும்
இயைபுத் தொடையும், எடுப்பும், முடிப்பும்
ஆனந்தக் களிப்பில் அமைதல் மரபே.
காட்டு :
-
நந்தவ னத்திலோர் ஆண்டி . - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி . க்
கொண்டுவந் தானொரு தோண்டி . - . அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
(சித். பா.ப.225)
காட்டு :
-
எடுப்பு
பாபம்செய் யாதிருமனமே - நாளைக்
கோபம்செய் தேமன் கொண்டோடிப் போவான் (பாபம்)
முடிப்பு
சாபம்கொ டுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலேத டுத்திட லாமோ
கோபம்தொ டுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ (பாபம்)
(சித். பா.ப.223)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்