சிந்துப்பாவியல்
39.
-
தனிச்சொல்லை முதலடி இறுதியில் தாங்கியும்
தனிச்சொல்லே இன்றியும் சமைவன உளவே
விளக்கம் : மேல் நூற்பாவில் பெருவரவினவான அரையடி இறுதியில் தனிச்சொல் பெறும் கும்மிகள் கூறப்பட்டன. இங்கு சிறுவரவினவான அடி இறுதியில் தனிச்சொல் பெறும் கும்மிகளையும், தனிச்சொல்லே பெறாத கும்மிகளையும் கூறுகின்றனர்.
காட்டு : தனிசொல்லை முதலடியின் இறுதியில் பெற்றுவரும் கும்மி
-
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடெனும் பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே -(பா.கவி. ப. 165)
காட்டு : தனிச்சொல் இல்லாமல் வந்த கும்மி
-
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய
வல்லவன் வாலைப்பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித்த மிழ்பா டவரும்
தொல்லைவி னைபோக்கும் வாலைப் பெண்ணே.
(கொங்கணர் வாலைக்கும்மி. சி.பா.8)
40. ஒயிற்கும்மி
-
மும்மையில் விரையும் முடுகியல் தாங்கியும்
எதுகையும் இயைபும் இடையிடை மிடைந்தும்
ஒலிசிறந் திசைப்பது ஒயிற்கும்மி யாகும்.
காட்டு : ஒயிற்கும்மி (விரைவு மும்மை)
- தென்பரங் குன்றினில் மேவுங் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றுடு முமைப்பெற்றிடு
தில்லைவி நாயகன் காப்பாமே.
(முருகன் ஒயிற்கும்மி. தொடை.281)
5 சதுசிர இன ஏக தாளவட்டணையில் அடங்கும் 20 சீரடி பெற்று வரும் ஒயிற்கும்மியும் உண்டு. அவை நான்கசைத் தனிச்சொற்களையும் இடையே பெற்று வரும்.
காட்டு : ஒயிற்கும்மி (சதுசிர இன தாளம்)
- மாவும்ப லாவும் கொய்யாவும் ஆரஞ்சியும்
வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய்
தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த
பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும்
போவார டிவழுக்கும்.
(வெ.கோ.வ.சிந்து.தொடை.ப.281)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்