சிந்துப்பாவியல்
ஆ. சிறப்பிலக்கணம்
35. நொண்டிச் சிந்து
-
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து
நான்மை நடையுடன் நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது
நொண்டிச் சிந்தென நுவலப் படும்.
விளக்கம் : களவாடியதனால் தண்டனையாகக் கால் வாங்கப்பட்டு, நொண்டியாகிப் போன கள்வனின் கதையை நொண்டி நாடகம் என்ற பெயரால் இவ்வகைப் பாடலாக எழுதும் பழக்கம் சென்ற நூற்றாண்டுகளில் இருந்து வந்தது. இந்நாடகத்தில் நொண்டியானவன் பாடும் சிந்துப் பாடல் வகை என்பதனால் இதற்கு நொண்டிச் சிந்து என்று பெயர் வந்தது என்று கருதப்படுகிறது.
நொண்டிச் சிந்தின் அடிகள் ஓர் ஆதிதால வட்டணையில் அடங்குமாறு எண்சீர்க் கழிநெடிலடிகளாக இருக்கும். ஒவ்வொரு சீரும் நான்மை நடைக்கு ஏற்றவாறு அமைந்திருக்க்கும். நாலாம் சீரின் இடத்தில் தனிச்சொல் பெற்றிருக்கும். ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும்.
காட்டு :
- சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில்
(திரு.நொ.நா.ப. 7)
எண்சீர் அடிகள் இரண்டு ஓரெதுகையாய் வரும் என்றதனால் பெரும்பாலும் ஈரடிக்கண்ணிகள் நொண்டிச்சிந்தில் வரும் என்பது பெறப்படுகிறது. நொண்டிச் சிந்துகளில் சிறுபான்மையாக ஓரடிக் கண்ணிகளும், நாலடிக் கண்ணிகளும் வருதலுண்டு. எடுத்துக் காட்டுகளை 34ஆம் நூற்பாவுரையில் காண்க.
36.
-
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்
ஐந்தாஞ் சீரிலும் ஏழாஞ் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே!
காட்டு :
- சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில்
(திரு.தொ.நா.ப. 7)
காட்டு :
- அத்தின புரமுண் டாம் - இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்
பத்தியில் வீதிக ளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடும்இ ரதிநிகர் தேவிக் ளாம்
(பா.வி. ப. 361)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்