முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.029.மேலைத்திருக்காட்டுப்பள்ளி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.029.மேலைத்திருக்காட்டுப்பள்ளி
3.029.மேலைத்திருக்காட்டுப்பள்ளி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தீயாடியப்பர்.
தேவியார் - வார்கொண்டமுலையம்மை.
3107 | வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன் ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே |
3.029.1 |
கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர். அப்பெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம் சிறந்த குணமாகும்.
3108 | நிருத்தனார்
நீள்சடை மதியொடு பாம்பணி கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப் பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே |
3.029.2 |
சிவபெருமான் திருநடனம் செய்பவர். நீண்ட சடைமுடியில் சந்திரனோடு பாம்பை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கண்ணாற்காணும் பொருள்வடிவாயும் விளங்குபவர். அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதலே பயனுடைய செய்கையாகும்.
3109 | பண்ணினார்
அருமறை பாடினார் நெற்றியோர் கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி விண்ணனார் விரிபுனல் மேவினார் சடைமுடி அண்ணலார் என்மையா ளுடையஎம் மடிகளே |
3.029.3 |
சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளினார். அவர் நெற்றிக்கண்ணை உடையவர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில், ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய சடைமடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார்.
3110 | பணங்கொள்நா கம்அரைக் கார்ப்பது பல்பலி உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக் கணங்கள்கூ டித்தொழு தேத்துகாட் டுப்பள்ளி நிணங்கொள்சூ லப்படை நிமலர்தம் நீர்மையே |
3.029.4 |
சிவபெருமான் இடுப்பிலே கச்சாக அணிந்திருப்பது படமெடுத்தாடும் நாகமாகும். பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை உண்ணும் பாத்திரம், உலர்ந்த பிரமகபாலமாகும். வசிப்பது சுடுகாடாகும். அத்தகைய பெருமானார் சிவகணத்தோர் தொழுது அருளுகின்றார். கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர்.
3111 | வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக் கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித் திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங் கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே |
3.029.5 |
மலையில் செழித்த சந்தனமரங்களை நீரோட்டத்தால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின் மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர் அலைவீசும் கங்கையையும், சந்திரனையும் சடைமுடியிலே சூடி, இடுக்கிலே கோவண ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர்.
3112 | வேதனார் வெண்மழு வேந்தினார் அங்கமுன் ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக் காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே |
3.029.6 |
வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமான். வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒளி பொருந்திய குழையணிந்த காதை உடையவர். நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத் தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக!
3113 | மையினார் மிடறனார் மான்மழு வேந்திய கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி தையலோர் பாகமாத் தண்மதி சூடிய ஐயனார் அடிதொழ அல்லல்ஒன் றில்லையே |
3.029.7 |
மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ பெருமான் மானையும், மழுவையும் ஏந்திய கையினார், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும் இல்லை.
3114 | சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார் மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான் கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே |
3.029.8 |
சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழித்தவர். சிறப்புடைய கயிலை மலை யினால் இராவணனின் வலிமையை அடக்கியவர். மான்கள் உலவும் முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும்.
3115 | செங்கண்மால்
திகழ்தரு மலருறை திசைமுகன் தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான் கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே |
3.029.9 |
சிவந்த கண்களையுடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர் சிவபொருமான். கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை.
3116 | போதியார்
பிண்டியார் என்றவப் பொய்யர்கள் வாதினால் உரையவை மெய்யல வைகலும் காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே |
3.029.10 |
அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த புத்தர்களும், அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும் சமணர்களும், தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை யானவை அல்ல, மேகம் தவழும், நறுமணம் கமழும் சாலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது பாற்ற இன்பம் வந்தடையும்.
3117 | பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன் அருமறை யவைவல் வணிகொள்சம் பந்தன்சொல் கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே |
3.029.11 |
நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த. அருமறைகளில் வல்ல, சிவஞானத்தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய இத்திருப்பதிகத்தை ஓத, பாவம் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேலைத்திருக்காட்டுப்பள்ளி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், டுப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, திருத்தலத்தில், சிவபெருமான், சூழ்ந்த, சூழ்ந்தகாட், கமழும், நறுமணம், வீற்றிருந்தருளும், கடிபொழில், சோலைகள், தொழுது, உமாதேவியைத், திருமேனியில், கொண்டு, அருமறை, உடையவர், ஏந்திய, கருதுகாட், போற்றி, கையினார், கண்டத்தையுடைய, துன்பம், திருவடிகளைத், றில்லையே, தலைவரான, நிமலராய், நீர்மையே, பாகமாகக், மங்கையோர், திருச்சிற்றம்பலம், திருமுறை, கங்கையைத், தாங்கிய, விளங்குபவர், ஆபரணமாக, சடைமுடியில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, அப்பெருமானின்