முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.124.திருவீழிமிழலை - திருவிராகம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.124.திருவீழிமிழலை - திருவிராகம்

1.124.திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1337 |
அலர்மகண் மலிதர வவனியி னிகழ்பவர் மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர் நலமலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ் நிலமலி மிழலையை நினையவ லவரே. |
1.124.1 |
மலர் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும், அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினைய வல்லவர் திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.
1338 |
இருநில மிதன்மிசை யெழில்பெறு
முருவினர் கருமலி தருமிகு புவிமுத லுலகினில் இருளறு மதியின ரிமையவர் தொழுதெழு நிருபமன் மிழலையை நினையவ லவரே. |
1.124.2 |
எண்ணற்ற உயிரினங்கள் வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும், தேவர்களால் தொழப் பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.
1339 |
கலைமக டலைமக னிவனென வருபவர் அலைமலி தருபுன லரவொடு நகுதலை இலைமலி யிதழியு மிசைதரு சடையினர் நிலைமலி மிழலையை நினையவ லவரே. |
1.124.3 |
அலைகள் நிறைந்த கங்கை நதி, பாம்பு, தலையோடு, வில்வஇலை, மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடை முடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர் கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.
1340 |
மாடமர் சனமகிழ் தருமன முடையவர் காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை பாடலி னவில்பவர் மிகுதரு முலகினில் நீடமர் மிழலையை நினையவ லவரே. |
1.124.4 |
இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்ட காலமாக விளங்குவதுமாகிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்.
1341 |
புகழ்மகள் துணையினர் புரிகுழ லுமைதனை இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர் முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. |
1.124.5 |
சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேத நெறிகளை ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து சிதைத்தருளியவனாகிய சிவபிரானது புகழ் பொருந்திய திரு வீழிமிழலையை நினைய வல்லவர் புகழ்மகளைப் பொருந்துவர்.
1342 |
அன்றின ரரியென வருபவ ரரிதினில் ஒன்றிய திரிபுர மொருநொடி யினிலெரி சென்று கொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற நின்றவன் மிழலையை நினையவ லவரே. |
1.124.6 |
தவம் செய்து அரிதாகப் பெற்ற ஒன்று பட்ட முப்புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ் பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வன்மை உடையவராவர்.
1343 |
கரம்பயில் கொடையினர் கடிமல
ரயனதொர் சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர் வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. |
1.124.7 |
மணங்கமழும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான நகராய். மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேத விதிகளையும், அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.
1344 |
ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர் அரக்கனன் மணிமுடி யொருபது மிருபது கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. |
1.124.8 |
இராவணனுடைய மணிமுடி தரித்த பத்துத் தலைகளும், இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.
1345 |
அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர் கடிமல ரயனரி கருதரு வகைதழல் வடிவுரு வியல்பினொ டுலகுக ணிறைதரு நெடியவன் மிழலையை நினையவ லவரே. |
1.124.9 |
மணம் மிக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், திருமாலும் நினைதற்கு அரிய வகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள், அடியவர் பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.
1346 |
மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர் வன்மலர் துவருடை யவர்களு மதியிலர் துன்மதி யமணர்க டொடர்வரு மிகுபுகழ் நின்மலன் மிழலையை நினையவ லவரே. |
1.124.10 |
மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்.
1347 |
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு கற்றுவல் லவருல கினிலடி யவரே. |
1.124.11 |
முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை ஒப்பற்ற புகலிப் பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால் விளைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த அடியவராய் விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 122 | 123 | 124 | 125 | 126 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - திருவிராகம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மிழலையை, நினையவ, சிவபிரானது, வல்லவர், திருவீழிமிழலையை, உறையும், சிவபிரான், வாழும், நிறைந்த, மலர்மேல், மணிமுடி, அடியவர், பொருந்திய, செய்து, உடையவராவர், ஒலிக்க, பெறுவர், வல்லவர்கள், இவ்வுலகில், வாழ்வர், வவனியி, னிகழ்பவர், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருவிராகம், மிகுபுகழ், கூந்தலை, முதலிய, திருவீழிமிழலை, கொண்டு, உமையம்மையை, நினைப்பவர்கள்