ரங்கதுர்க்கம் ராஜா
இரண்டாம் பாகம்
1
ரங்கராஜன் இரண்டாவது முறை கண் விழித்த
போது, அவன் படுத்திருந்த அறையில் ஒருவருமில்லை. ஆனால், சில நிமிஷ நேரத்துக்கெல்லாம்
காலடிச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில்
ஒருவர் முன் தடவை கண் விழித்த போது பார்த்த இந்திய டாக்டர், இன்னொருவர்
வெள்ளைக்கார டாக்டர்.
ரங்கராஜன் விழித்திருந்ததைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஏக காலத்தில், "ஹலோ!" என்று கூவினார்கள். பிறகு வெள்ளைக்கார டாக்டர், "ராஜா சாகிப்! உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
'ராஜா சாகிப்பாவது, நாசமாய்ப் போனதாவது' என்று ரங்கராஜன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஆனால், வெளியில், "எனக்கென்ன தெரியும்? நானா டாக்டர்! நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்?" என்றான்.
டாக்டர்கள் சிரித்தார்கள். வெள்ளைக்கார டாக்டர் "பேஷ்! ராஜாசாகிப் தண்ணீரில் ஓர் அமுங்கு அமுங்கியது அவருடைய மூளையை கூர்மைப்படுத்தியிருக்கிறது போல் காண்கிறது," என்றார்.
"உங்களுக்கும் அந்தச் சிகிச்சை கொஞ்சம் தேவை போல் காண்கிறதே!" என்றான் ரங்கராஜன்.
டாக்டர்கள் மறுபடியும் சிரித்தார்கள். பிறகு, "ராஜா சாகிப்! போனது போகட்டும். இனிமேலாவது மிதமாய்க் குடியும். மது மயக்கம் பொல்லாதது" என்றார் வெள்ளைக்கார டாக்டர்.
"மது மயக்கமோ, காதல் மயக்கமோ?" என்றார் இந்திய டாக்டர்.
இப்போது ரங்கராஜனுக்கு உண்மையிலேயே தலை மயங்க ஆரம்பித்தது.
"கனவான்களே! தயவு செய்து ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறீர்களா?" என்று கேட்டான்.
"ஒன்றல்ல, நூறு சந்தேகங்களை வேண்டுமானாலும் நிவர்த்தி செய்கிறோம், ராஜா சாகிப்! ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜாவுக்கு நாங்கள் அவ்வளவுகூடச் செய்ய வேண்டாமா!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
"எனக்குள்ளது ஒரே சந்தேகந்தான். நான் பைத்தியமா, நீங்கள் பைத்தியமா என்பதை மட்டும் சொல்லி விட்டால் போதும்."
ஒரு பெரிய அவுட்டுச் சிரிப்புக் கிளம்பிற்று. வெள்ளைக்கார டாக்டர் அருகில் வந்து ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்து, "பேஷ்! பேஷ்! நல்ல கேள்வி! ஏ! ஹஹ்ஹஹ்ஹா!" என்று மறுபடியும் சிரித்தார். அவருடைய திருவாயிலிருந்து சாராய நாற்றம் குபுகுபுவென்று வந்தது.
"டாக்டரே! தயவு செய்து தூரநின்று பேசும். நான் வைதிகப் பற்றுள்ள ஹிந்து. உம்மைத் தொட்டால் தலை முழுக வேண்டும்," என்றான் ரங்கராஜன். பிறகு, "நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. உங்களுக்கும் அது சந்தேகம் போலிருக்கிறது. போகட்டும், நீங்கள் யார் என்றாவது தயவு செய்து சொல்வீர்களா?" என்று கேட்டான்.
வெள்ளைக்கார டாக்டர் ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தவர் போலிருந்தார். இந்திய டாக்டர், "ஆஹா! ராஜா சாகிப் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள அநுமதி கொடுங்கள். நான் தான் டாக்டர் சிங்காரம், குமாரபுரம் ஜமீன்தாரின் குடும்ப வைத்தியன். இவர் டாக்டர் மக்டானல். இந்தக் கப்பலின் வைத்தியர். -போதுமா? இன்னும் ஏதாவது தெரிய வேண்டுமா?"
"இந்தக் கப்பலின் பெயர் என்ன?"
"எச்.எம்.எஸ்.ரோஸலிண்ட்."
"நிஜமாகவா? இதன் பெயர் 'பிரிட்டானியா' அல்லவென்று நிச்சயமாகத் தெரியுமா?"
டாக்டர் சிங்காரம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஆனால், டாக்டர் மக்டனால் சிரிக்கவில்லை. அவர் ஒரு சீட்டில், "கொஞ்சம் மூளை பிசகியிருப்பதுபோல் காண்கிறது" என்று எழுதி டாக்டர் சிங்காரத்திடம் காட்டினார்.
"ஓ டாக்டர் கனவான்களே! இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள். நான் யார்?" என்று கேட்டான் ரங்கராஜன்.
இப்போது டாக்டர்கள் சிரிக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் மக்டனால், "நாங்கள் யாரென்று தெரியப்படுத்திக் கொண்டோ ம். நீர் யாரென்று நீரல்லவா தெரியப்படுத்த வேண்டும்? உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார்.
"என் பெயர் ரங்கராஜன் என்று இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியோ தப்போ என்று இப்போது சந்தேகமாய் விட்டது."
"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?"
"என்னை நீங்கள் 'ராஜாசாகிப்' என்று அழைப்பதனால்தான்."
"அப்படியா? அது போகட்டும். இன்னும் தூக்கக் கலக்கம் உமக்குப் போகவில்லை. சற்று நேரம் தூங்கும். அப்புறம் நாங்கள் வந்து உம்முடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிறோம்" என்று டாக்டர் மக்டானல் சொல்லிவிட்டு, டாக்டர் சிங்காரத்தையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினார். அறைக்கு வெளியில் சென்றதும் அவர் டாக்டர் சிங்காரத்திடம், "இது ஒரு விசித்திரமான கேஸ். தண்ணீரில் அலை வேகமாய்த் தாக்கியதால் மூளை சிறிது குழம்பியிருக்கிறது. தம்மை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பழைய ஞாபகம் கொஞ்சம் இருக்கிறது. அதனால்தான் ரங்கராஜ் என்று பெயர் சொல்கிறார். ரங்கதுர்க்கம் ராஜா என்பதில் 'துர்க்கம்' தழுவி விட்டது. இங்கிலாந்துக்குப் போகும் போது இவர் 'பிரிட்டானியா' கப்பலில் போயிருக்க வேண்டும், விசாரித்தால் தெரியும்," என்று கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - டாக்டர், ரங்கராஜன், வெள்ளைக்கார, ராஜா, நீங்கள், நான், பெயர், பிறகு, வேண்டும், சாகிப், நிவர்த்தி, தயவு, செய்து, கேட்டான், இன்னும், இப்போது, நாங்கள், டாக்டர்கள், கேட்டார், இந்திய, போது, நினைத்துக், என்றான், கொஞ்சம், என்றார், பேஷ், போகட்டும்