ரங்கதுர்க்கம் ராஜா
3
மாமா இருந்தபோது ஒரு சமயம் கல்யாணத்தைப்
பற்றிப் பிரஸ்தாபித்தார். "கல்யாணம்" என்றதும் ரங்கராஜன் காதைப் பொத்திக்
கொண்டான். சராசரியில் ஸ்திரீகளை விடக் கல்வியறிவில் சிறந்தவர்களாயிருக்கும்
புருஷர்களுடைய ஸகவாசத்தையே அவனால் ஐந்து நிமிஷத்துக்கு மேல் சகிக்க முடிவதில்லை.
வாழ்நாளெல்லாம் பிரிய முடியாதபடி ஒரு ஸ்திரீயை யாராவது கழுத்தில் கட்டிக்
கொள்வார்களா? சனியனை விலை கொடுத்து வாங்குவது போல் அல்லவா? "மாமா அம்மாமியைக்
கட்டிக் கொண்டு நீங்கள் அவஸ்தைப் படுவது போதாதா? என்னையும் அப்படிக்
கெடுப்பதற்கு ஏன் விரும்புகிறீர்கள்?" என்றான். "அசடே! உனக்கு என்ன தெரியும்
நானும் அம்மாமியும் சில சமயம் சண்டைப் போட்டுக் கொள்கிறோம் என்பது வாஸ்தவந்தான்.
அதைக் கொண்டா எங்கள் இல்வாழ்க்கையை நீ மதிப்பிடுவது? உன் அம்மாமி எனக்கு
இல்வாழ்க்கையில் எவ்வளவு மன நிம்மதி, எவ்வளவு உற்சாகம், எவ்வளவு ஹாஸ்யரஸம்
அநுபவிப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அளித்திருக்கிறாள் என்பதெல்லாம் உனக்கு
என்ன தெரியும்?" என்று மாமா சொன்னார். "அப்படியானால், அந்தப் பாக்கியம்
முழுவதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு வேண்டாம்," என்றான்
ரங்கராஜன்.
மாமா எவ்வளவோ சொல்லியும் பயனில்லை.
அவ்வாறே உத்தியோகத்தைப் பற்றியும் பிரஸ்தாபம் வந்தது. வேலை ஒன்றும் இல்லாமலிருந்தால் இப்படித்தான் ஏதேனும் குருட்டு யோசனைகள் தோன்றிக் கொண்டிருக்குமென்றும் ஏதேனும் ஓர் அலுவலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியும் மாமா சொன்னார். பலவித உத்தியோகங்களைப் பற்றியும் வாதித்தார்கள். அதிலிருந்து நம் கதாநாயகனுடைய யோக்கியதைக்குத் தகுந்ததாக ஒருவித உத்தியோகமும் இல்லை என்பது வெளியாயிற்று. சர்க்கார் உத்தியோகமா? சிவ சிவா! அந்த வார்த்தையைக் கேட்டதுமே கிராமத்து ஜனங்களைப் போல் அறிவுத் தெய்வமும் பயந்து மிரண்டு அருகில் கூட வராதே! வக்கீல் வேலையா? பகவானே! முட்டாள் கட்சிக்காரர்களுடனும் மூட ஜட்ஜுகளுடனும் அல்லவா இழவு கொடுக்க வேண்டும்? வைத்தியத் தொழிலா? அதைப் போல் அறியாமையை அடிப்படையாகக் கொண்ட தொழிலே வேறு கிடையாது! வாத்தியார் வேலையா? மந்தபுத்தியுள்ள மாணாக்கர்களுடன் நாளெல்லாம் மாரடிப்பதைவிட வேறு எது வேண்டுமானாலும் செய்யலாம் - இப்படியே, படித்தவர்கள் பிரவேசிப்பதற்குரிய நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் விலக்கப்பட்டது.
"இதெல்லாம் உனக்கு ஒன்றும் பிடிக்காவிட்டால் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவது தானே? காங்கிரஸில் சேர்ந்து வேலை செய்யலாமே? உயர்ந்த மேதாவிகள் காங்கிரஸில் இருக்கிறார்களே?" என்று மாமா கேட்டார்.
அரசியல் என்றாலே ரங்கராஜனுக்குப் பிடிப்பதில்லை. ஞானசூனியர்களும், அரை குறை அறிவுள்ளவர்களுந்தான் அரசியல் முன்னணிக்கு வருகிறார்கள் என்று அவன் சொல்வான். காங்கிரஸைச் சேர்ந்தவர்களில் ஒரு நாலைந்து பேர் மட்டும் அறிவுத் தெளிவுடையவர்கள் என்று அவன் ஒப்புக் கொள்வதுண்டு; ஆனால், அவர்கள் பாடுபடுவதெல்லாம் வியர்த்தமென்றும், இந்த மூட ஜனங்கள் ஒரு நாளும் முன்னுக்கு வரப்போவதில்லை என்றும் கூறுவான்.
மேற்கண்டவாறு மாமா யோசனை சொன்னதும் ரங்கராஜன் அன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தான். அதில் வெளியாகியிருந்த ஓர் அரசியல் பொதுக் கூட்டத்தின் நடவடிக்கைகளையும் முதல் நாள் சட்டசபை நடவடிக்கைகளையும் படித்துக் காட்டினான்.
"மாமா! மகாத்மாவும், வல்லபாயும், இராஜகோபாலாச்சாரியும், ஜவஹர்லாலும் சுயராஜ்யத்துக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் இந்த ஜனங்களை வைத்துக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதென்பது அசாத்தியமென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படியே நம்மை ஆள்வோரும் முட்டாள்களாயிருக்கும் காரணத்தினால் நாம் சுய ராஜ்யம் அடைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அதை வைத்து நிர்வகிக்கப் போகிறவர்கள் யார்? இதோ இப்போது வாசித்தேனே, அதைப் போலெல்லாம் அர்த்தமில்லாமல் பிதற்றக் கூடிய ஏழாந்தர, எட்டாந்தர மூளையுள்ள மனிதர்கள் தானே? இவர்களிடம் இராஜ்யபாரத்தைக் கொடுப்பதற்காக நான் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்?" என்றான்.
ரங்கராஜனுடைய காலத்தில் பெரும்பகுதி படிப்பில் போய்க் கொண்டிருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள உயர்தர இலக்கியங்களில் அவன் படிக்காதது ஒன்றுமில்லை. நேரம் போவது தெரியாமல், ஊன் உறக்கங்களை மறந்து படித்துக் கொண்டிருப்பான். ஆனால், படிப்புங்கூடக் கசந்து போகும்படியான ஒரு சமயம் வந்தது. பண்டைக்கால ஆசிரியர்களின் சிறந்த நூல்களையெல்லாம் படித்தாகி விட்டது. இக்காலத்து ஆசிரியர்கள் எழுதுவதோ அவனுக்கு ஒன்றும் பிடிப்பதில்லை. வோட்ஹவுஸ் போன்றவர்களின் வெறும் 'புருடை' நூல்களில் எப்போதும் ஐந்தாறு பக்கத்துக்கு மேல் அவனால் படிக்க முடிவதில்லை. நாளடைவில் ஷா, செஸ்டர்டன், பெல்லாக் முதலியவர்கள் கூடச் சுவை நைந்த பழங்கதைகளையே படைக்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு உயிர் வாழ்க்கையே ஒரு பாரமாய் விட்டது. மனத்தைச் செலுத்துவதற்கு ஏதேனும் ஒரு வழி விரைவில் காணாவிடில் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது.
அத்தகைய வழி அவன் யோசனை செய்யாதது ஒன்றே ஒன்று தான் பாக்கியிருந்தது; வெளி நாடுகளுக்கு யாத்திரை சென்று வரவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வெகு நாளாய் உண்டு. மாமா இருந்தவரையில் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு அவ்வளவு அவசியத்தையும் அவன் அப்போது காணவில்லை. இப்போது அவசியம் அதிகமான போது சந்தர்ப்பமும் சரியாயிருந்தது. பிதுரார்ஜிதச் சொத்தில் பெரும் பகுதியை ஒன்றுக்கு பாதி விலையாக விற்றுப் பிரயாணத்துக்குப் பணம் சேர்த்துக் கொண்டான். முதலில், இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துப் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பிரிட்டானியா' என்னும் கப்பலில் பிரயாணமானான்; மூன்று நாள் கப்பல் பிரயாணத்துக்குப் பிறகு அவனுடைய மனோநிலை எவ்வாறிருந்தது என்பது கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாமா, அவன், அரசியல், அவனுக்கு, வைத்துக், ஒன்றும், ஏதேனும், எவ்வளவு, என்பது, ரங்கராஜன், சமயம், போல், கொண்டு, என்றான், உனக்கு