ரங்கதுர்க்கம் ராஜா
2
டாக்டர்கள் வெளிச் சென்றதும் ரங்கராஜன்
படுக்கையிலிருந்து எழுந்தான். முதலில் தான் அணிந்திருந்த உடைகளைக் கவனித்தான்.
அவை தன்னுடையவை அல்ல என்பது நிச்சயம். பிறகு அறையைச் சோதித்தான். அந்த
அறையை அதற்கு முன் அவன் பார்த்ததில்லை. அதிலிருந்த சாமான்களும் அப்படியே.
பெட்டிகளைத் திறந்து சோதிக்கலானான். அவற்றில் சாதாரண உடுப்புகளுடன் சரிகைப்
பூவேலைகள் செய்த வெல்வெட் சட்டைகள், குல்லாக்கள் முதலியவை காணப்பட்டன.
சாராயப் புட்டிகள், சிகரெட் பெட்டிகள் முதலியவை இருந்தன. இந்த அறையில்
யாரோ ஓர் இளம் ஜமீன்தார் பிரயாணம் செய்திருக்க வேண்டும். டாக்டர்கள்
அவனை அந்த ஜமீன்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும்
கொஞ்சம் பரிசோதனை செய்தபோது, "ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜா" என்று
தலைப்பில் அச்சிட்ட சில காகிதங்கள் அகப்பட்டன. மறுபடியும் புரட்டியபோது,
சில புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றைப் பார்த்ததும் ரங்கராஜன்
திடுக்கிட்டான். ஏனெனில், அப்படத்திலிருந்த உருவம் அவனைப் போலவே இருந்தது.
மூக்கு, முழி, உதடு, நெற்றி, தலைக்கிராப்பு எல்லாம் தத்ரூபம். உடையில்
மட்டுந்தான் வித்தியாசம் காணப்பட்டது.
இன்னொரு புகைப்படம் ரங்கராஜனுடைய உள்ளத்தில் விசித்திரமான உணர்ச்சியை உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சியின் இயல்பு எத்தகையதென்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை. அது ஓர் இளம் கன்னிகையின் படம். முதல் தடவை தான் கண்விழித்துப் பார்த்தபோது எதிரில் நின்ற பெண் இவளாய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். இவள் யார்? தன்னிடம் சிரத்தைக் கொண்டு தன்னைப் பார்க்க வந்த காரணம் என்ன? சீ! அவள் தன்னைப் பார்க்கவா வந்தாள்? வேறு யாரையோ அல்லவா பார்க்க வந்தாள்? அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? அச்சமயம் ரங்கராஜனுக்குத் தான் முன்பின் பார்த்திராத ரங்கதுர்க்கம் ராஜாவின் மீது கொஞ்சம் கோபம் வந்தது.
ஆனால், உடனே சாமாளித்துக் கொண்டான். 'என்ன நமக்குக் கூட அசடு தட்டுகிறதே!' என்று நினைத்தான். ஆனால் உடனே, 'நமக்கு அசடு தட்டினால் அதுவும் கொஞ்சம் உயர் தரமாய்த்தான் இருக்கும்' என்று எண்ணிக் கொண்டான். பெட்டிகளை மூடிவிட்டு எழுந்தான்.
குழப்பம் நீங்குவதற்கு அவன் இன்னும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
உண்மையாகவே இந்தக் கப்பல், தான் பம்பாயில் ஏறி வந்த கப்பல் இல்லையா? இல்லையென்றால், இது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இரண்டாவது, தன்னை யார் என்று இவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த பேர்வழியின் சங்கதியென்ன? தன்னை அவனென்று இவர்கள் தவறாக எண்ணங் கொண்டிருப்பதை எவ்வாறு நிவர்த்திப்பது?
ரங்கராஜன் அறையிலிருந்து வெளிவந்து நடக்க முயற்சித்தான். கொஞ்சம் பலஹீனத்தைத் தவிர, மற்றபடி தேகம் சரியான நிலைமையிலிருப்பதாக உணர்ந்தான். தளத்தின் விளிம்பு வரை சென்று கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றான். அன்று தான் இவ்வாறு நின்றதும், அப்போது தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களும், கடைசியில் தலைக்குப்புறக் கடலில் விழுந்ததும் எல்லாம் தெளிவாக ஞாபகம் வந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறதென்றும், அதை நிவர்த்திப்பது தன் கடமையென்றும் உறுதி கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தபோது, கப்பலின் ஒரு பக்கத்தில் 'எச்.எம்.எஸ். ரோஸலிண்ட்' என்று பெரிதாக எழுதியிருந்தது தெரிய வந்தது. எனவே, தான் வந்த கப்பல் இது இல்லையென்பது நிச்சயம்.
அப்போது அந்தப் பக்கம் மாலுமி ஒருவன் வந்ததைக் கண்டதும் அவனை, நிறுத்தி "இந்தக் கப்பல் எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இப்போது எங்கேயிருக்கிறோம்?" என்று கேட்டான். அந்த மாலுமி ரங்கராஜனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் குப்பென்று சிரித்தான். "ஓ! கடலில் விழுந்த ராஜா இல்லையா நீர், இன்னொரு தடவை விழப் போகிறீரா?" என்று கேட்டான். ரங்கராஜனுக்குக் கோபம் வந்தது. "ஓய் உம்முடைய பரிகாசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இந்தக் கப்பலின் காப்டனை நான் உடனே பார்க்க வேண்டும். அவரிடம் தயவு செய்து என்னை அழைத்துப் போகிறீரா?" என்று கேட்டான்.
"ராஜாசாகிப் ரொம்பக் கோபமாயிருப்பது போல் காண்கிறது. வாரும், போகலாம்" என்றான் மாலுமி. ரங்கராஜன் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். போகும் வழியில் அந்தக் கப்பல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் போகிறதென்றும், ஏடனைத் தாண்டியாகிவிட்டதென்றும், இரண்டு நாளில் பம்பாய்த் துறைமுகத்தை அடையுமென்றும் அந்த மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டான். ஒருவாறு அவனுக்கு நிலைமை தெரியவந்தது. 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து, தான் கடலில் குதிக்க எத்தனித்த அதே சமயத்தில் எதிரே ஒரு கப்பல் வரவில்லையா? அந்தக் கப்பல் தான் இது. தான் கடலில் குதித்த அதே சமயத்தில் இந்த முட்டாள் ராஜாவும் எக்காரணத்தினாலோ கடலில் விழுந்திருக்க வேண்டும். அவனை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை எடுத்திருக்கிறார்கள், இந்தக் கப்பல்காரர்கள். தன்னுடைய தோற்றமும், அவனுடைய தோற்றமும் விபரீதமாக ஒத்திருந்தபடியால் அவர்கள் இந்த ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ராஜாவின் கதி என்னவாயிற்றோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்; தன்னுடைய கடமை தெளிவானது; தான் ரங்கதுர்க்கம் ராஜா அல்லவென்பதை உடனே கப்பல் தலைவனிடம் தெரியப்படுத்தி விடவேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தான், கப்பல், அந்த, கடலில், இந்தக், ரங்கராஜன், உடனே, வேண்டும், கொஞ்சம், கொண்டான், மாலுமி, கேட்டான், தன்னை, வந்த, ரங்கதுர்க்கம், அவனை, ராஜா, பார்க்க, என்ன, வந்தது