மாலதியின் தந்தை
8
ரங்கபாஷ்யம் பெங்களூருக்குப் போன பிறகு
பல தடவை மாலதி என்னுடன் டெலிபோனில் பேசி அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா
என்று கேட்டாள். நானும் அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணித் "தெரியாது"
என்றே சொல்லி வந்தேன். ஒரு நாள் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றாள்.
என்னுடைய பிரம்மச்சாரி அறைக்கு அவளை வரச் சொல்ல இஷ்டப்படாமல் நானே அவளுடைய
ஜாகைக்குப் போனேன். அப்போதுதான் அவள் மனதில் ஒரு பகுதியை நான் அறிந்து
கொள்ள முடிந்தது. ரங்கபாஷ்யத்திடம் அவள் உண்மையான காதல் கொண்டிருந்தாள்
என்பதில் சந்தேகமில்லை. நாடகத்தை எழுதிய தினகரனை அவள் வெறுத்தாள் என்பதிலும்
ஐயமில்லை. "என் தந்தை காலமானபோது எனக்கு ஒரு பணி இட்டுவிட்டுப் போனார்.
அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகவே காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள்
உங்கள் சிநேகிதர் என்ன நினைத்தாரோ, என்னமோ தெரியவில்லை தகவல் தெரிவிக்காமல்
எங்கேயோ போய்விட்டார். இந்தப் போக்கிரி தினகரன் அவரிடம் ஏதாவது பொய்யும்
புளுகும் சொல்லியிருப்பானோ என்றுகூட சந்தேகிக்கிறேன். இப்படியெல்லாம்
உலகத்தில் விஷமக்காரர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் பேச்சையெல்லாம்
நம்பி விடலாமா? இப்படி உங்கள் சினேகிதர் செய்து விட்டாரே? இனி என் வாழ்க்கை
பாழானது போலத்தான்! நான் பெரிய துரதிஷ்டக்காரி!" என்று மாலதி சொல்லிப்
பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
அவளுடைய துயரத்தைத் தீர்க்கும் சக்தி என்னிடம் இருந்தது. ஆனால் அதை உடனே பிரயோகித்துவிட நான் விரும்பவில்லை. மேலும் அவள் மனதை நன்றாய் அறிந்து கொள்ள விரும்பினேன். ரங்கபாஷ்யத்தின் பூர்வோத்திரத்தை அறிந்த பிறகும் இதே மனோபாவம் அவளுக்கு இருக்குமோ என்னமோ, யார் கண்டது? அதைப்பற்றி உடனே சொல்லிப் பரீட்சை பார்க்கவும் நான் விரும்பவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடிக்க எண்ணினேன். ஆனால் தினகரனைப் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்து வைத்தேன்.
"அவன் என் தாயார் வழியில் கொஞ்சம் தூரத்து உறவு. அந்த உரிமையை கொண்டாடி என்னைத் தொல்லைப் படுத்துகிறான். என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று நம்பி, அதைப் பறிக்கப் பார்க்கிறான். ஆனால் பணம் என்னுடையதல்ல என்பது அவனுக்குத் தெரியாது. சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான். ஒரு நாள் அவனை நன்றாய்த் திட்டிப் பாடம் கற்பித்து விரட்டிவிடப் போகிறேன். அப்புறம், இந்தப் பக்கமே வரமாட்டான்" என்றாள்.
தினகரனைப் பற்றிய வரையில், மாலதி பரிபூரண வெறுப்புக் கொண்டிருந்தாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவே ஓரளவு எனக்குத் திருப்தியையும் மனச்சாந்தியையும் அளித்தது.
மற்றொரு நாள் அந்தக் கிராதகன் தினகரன் என்னைத் தேடி வந்தான். ரங்கபாஷ்யத்தைப் பற்றி விசாரித்தான். "தகவல் தெரியாது" என்றேன். "அது என்ன திடீரென்று மறைந்துவிட்டான்? காரணம் ஏதேனும் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது" என்றேன். "எனக்குத் தெரியும்!" என்று சொல்லி ரங்கபாஷ்யம் காட்டிய அதே பத்திரிகைத் துணுக்கின் இன்னொரு பிரதியை என்னிடம் காட்டினான். "இதனால்தான் அந்த மோசக்காரன் ஓடிப் போயிருக்க வேண்டும்!" என்றான்.
தனி மனிதர்களின் சொந்த வாழ்க்கையைப்பற்றி எழுதுவதையே தொழிலாகக் கொண்ட பத்திரிகைகளைப்பற்றி நான் பலமாய்த் திட்டிக் கண்டித்தேன்.
"அதெல்லாம் இருக்கலாம்; ஆனாலும் அவனுடைய தலைக்கு இது தகுந்த குல்லா என்பதில் சந்தேகமில்லை. ஆகையினால்தான் மாலதியிடம் சொல்லிக் கொள்ளாமலும் விலாசம் கூடத் தெரிவிக்காமலும் இந்த ஊரைவிட்டே ஓடிப் போய்விட்டான்!" என்றான் தினகரன்.
தினகரனை மேலும் ஆழம் பார்க்க எண்ணி, "அப்படியானால் மாலதி விஷயத்தில் உங்களுக்கு ஒரு போட்டி ஒழிந்தது என்று சொல்லுங்கள்!" என்றேன்.
"ஆனாலும் ஸ்திரீகளின் விஷயமே விசித்திரமானது. இன்னும் அந்த மோசக்காரனிடமே அவள் ஈடுபட்டிருக்கிறாள். அவன் எங்கே போனான் என்று என்னை விசாரிக்கச் சொல்லுகிறாள். நன்றாயிருக்கிறதல்லவா? ஆனால் இன்னும் இந்தப் பத்திரிகையின் விஷயம் அவளுக்குத் தெரியாது. இன்றைக்குச் சொல்லப் போகிறேன்!" என்றான்.
"இந்த மாதிரி எச்சரிக்கை இப்பத்திரிகையில் எழுதி வெளியிட்டது யார்? நீர் தானா?" என்று கேட்டேன்.
"நான் இல்லை; என்னைப் போலவே ரங்கபாஷ்யத்தின் மோசடியை வெளிப்படுத்துவதில் சிரத்தையுள்ள வேறு யாரோ இருக்க வேண்டும். ஆனால் இதிலுள்ள விஷயம் உண்மை என்பதில் சந்தேகமில்லை. எனக்கே நன்றாய்த் தெரியும். உங்களிடம் தான் முன்னமே சொல்லி இருக்கிறேனே? கொஞ்சம் இருந்த சந்தேகமும் அவன் ஓடிப்போனதிலிருந்து நீங்கிவிட்டது!" என்றான்.
"அப்படியானால் மாலதியிடம் இதை பற்றிச் சொல்லத்தான் போகிறீராக்கும்?" என்று கேட்டேன்.
"இப்பொழுது நேரே அவள் வீட்டுக்குத்தான் போகிறேன்!" என்றான் தினகரன்.
அவன் மாலதியைப் பார்ப்பதன் விளைவு என்ன ஆகப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அவள், கொஞ்சம், தெரியாது, என்றான், மாலதி, என்பதில், அவன், தினகரன், என்னிடம், என்றேன், அந்த, போகிறேன், சந்தேகமில்லை, சொல்லி, தகவல், நாள், வேண்டும், என்ன, கொள்ள, இந்தப்