மாலதியின் தந்தை
4
புது டில்லியில் நான் தங்குமிடத்தை ரங்கபாஷ்யம்
கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். நாலு நாளைக்கு பிறகு ஒரு தினம் என்னைப்
பார்க்க வந்தான். வரும்போதே குதூகலத் தாண்டவம் ஆடிக் கொண்டு வந்தான்.
"ரங்கபாஷ்யம், என்ன இவ்வளவு குதூகலம்!" என்று கேட்டேன்.
"அவளை நான் மறுபடியும் பார்த்தேன்" என்றான்.
"அவளை என்றால் யாரை?"
"உலகத்திலேயே எனக்கு இப்போது ஒரு 'அவள்' தான் வேறு யாராயிருக்க முடியும்?"
"அந்த விமான மேனகையைச் சொல்லுகிறாயா?"
"ஆமாம்; ஆனால் அவள் பெயர் மேனகை அல்ல மாலதி!" என்றான்.
"அவளை எங்கே பார்த்தாய்?"
"நான் தங்கியுள்ள ஹோட்டலுக்கே அவளும் நேற்று வந்திருந்தால். ஒரு முக்கியமான செய்தி சொன்னாள்."
"அது என்ன செய்தி? தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று சொன்னாளா?" என்றேன் நான்.
ரங்கபாஷ்யம் சிறிது நேரம் திறந்த வாய் திறந்தபடி ஒன்றும் தோன்றாமல் பிரமித்துப் போய் நின்றான்.
"ஏன் இப்படி விழிக்கிறாய்? மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே! இங்கே தரையில் ரத்னக் கம்பளம் கூடக் கிடையாது!" என்றேன்.
"அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்கவில்லை!" என்றான் ரங்கபாஷ்யம்.
"அதைக் கேட்காமல் மற்றபடி வேறு என்னத்தைக் கேட்டு என்ன பயன்? சரி, போகட்டும். வேறு என்ன அப்படி முக்கியமான செய்தி?"
"மாலதி 'ஏர் ஹோஸ்டஸ்' வேலையை விட்டுவிடப் போகிறாளாம்!"
"அடாடா! எதனால் அப்படிப்பட்ட விபரீதமான காரியத்தை அவள் செய்யப் போகிறாள்?"
"என்னைப் போல் இன்னும் அநேகர் அவளிடம் 'உன்னைக் கண்டதும் தலை கிறுகிறுத்து மயக்கம் வருகிறது!' என்கிறார்களாம். ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கும் நிலையில், தன்னால் வேறு விபத்துக்கள் நேரிட வேண்டாம் என்று, வேலையை ராஜினாமாச் செய்யப் போகிறாளாம். வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கே வந்துவிடப் போகிறாளாம்!" என்றான்.
"சென்னைக்கு ஏதோ துரதிர்ஷ்டந்தான்!" என்று சொன்னேன்.
"சென்னை நகரம் மூவேழு இருபத்தொரு தலை முறையில் செய்த தவத்தின் பயன் என்று சொல்லுங்கள்!"
"அந்த மாஜி விமான மேனகை சென்னை வீதிகளில் போகும் போதெல்லாம், யாராவது தலை கிறுகிறுத்து விழுந்து கொண்டிருப்பார்களே? அதனால் சென்னை நகரின் குழி விழுந்த சாலைகள் இன்னும் மேடு பள்ளமாகி விடுமே என்றுதான் கவலைப்படுகிறேன்!"
"ஆமாம். சென்னை நகரில் சாலைகள் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கும் எனக்கும் என்ன? இவள் இந்தத் தரித்திரம் பிடித்த விமான வேலையை விட்டு விடுகிறாள் என்பது எனக்கு உற்சாகமாயிருக்கிறது. ஆண் பிள்ளைகளுடைய சகவாசமே அவளுக்குப் பிடிக்கவில்லையாம். புருஷர்களுடைய மத்தியில் இருப்பதும், வேலை செய்வதும் அருவருப்பாயிருக்கிறதாம். ஆகையால் ஒரு பெண்கள் கலாசாலையில் ஆசிரியை ஆகிறதென்று தீர்மானித்து விட்டாளாம். அந்த வேலைக்கு மனுப் போட்டிருக்கிறாளாம். ஆசிரியை வேலை கிடைத்தவுடனே சென்னைக்கு வந்துவிடப் போகிறாளாம்!... இப்போது என்ன சொல்லுகிறீர்கள்" என்று கேட்டான்.
"என்ன சொல்லுகிறது? அந்தப் பெண்கள் கலாசாலையைக் கடவுள் காப்பாற்றட்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றேன்.
"அந்தப் பெண்கள் கலாசாலை செய்த பூஜா பலன் என்று சொல்லுங்கள்."
இவ்வாறு எங்கள் சம்பாஷணை அன்றைக்கு முடிந்தது. டில்லியில் அப்புறமும் இரண்டொரு தடவை ரங்கபாஷ்யம் என்னைச் சந்தித்தான். உற்சாக கடலில் முழுகியிருந்தான். மாலதியை மறுபடியும் பார்த்து அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதையும் தெரிந்து கொண்டு விட்டானாம்!
"உன் தலையில் அப்படி விதி எழுதியிருக்கும் போது அவளுக்கு வேறு கலியாணம் ஆகியிருக்க முடியுமா?" என்றேன் நான்.
ரங்கபாஷ்யத்திடம் அப்படி விளையாட்டாகப் பேசினேனே தவிர, அவனிடமும் அந்தப் பெண்ணிடமும் எனக்கு ஒருவித அநுதாபம் உண்டாகியிருந்தது. "உண்மையான காதலர்களை உலகம் முழுவதும் காதலிக்கிறது!" என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. சாவித்திரி - சத்தியவான், ரோமியோ - ஜுலியத், லைலா - மஜ்னூன் போன்ற அமர காதலர்கள் இன்றைக்கும் உலக மக்களின் காதலுக்குப் பாத்திரமாகியிருக்கிறார்கள். அல்லவா? இரண்டு பேர் ஒருவரிடம் ஒருவர் அன்பாயிருந்தால், அதைப் பார்ப்பதிலேயே நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ரங்கபாஷ்யத்தையும் அந்த விமான ரமணியையும் பற்றி நினைத்தபோது எனக்கு அப்படித்தான் மகிழ்ச்சியாயிருந்தது.
"உண்மையான காதலின் பாதை சரளமாக இருப்பதில்லை" என்று ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு. அது காதலர்களின் விஷயத்தில் உண்மையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை ஏனோ என் மனதில் உதித்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, நான், வேறு, விமான, ரங்கபாஷ்யம், என்றேன், வேலையை, போகிறாளாம், சென்னை, என்றான், இன்னும், எனக்கு, அந்த, பெண்கள், அந்தப், அவளை, அப்படி, செய்தி, அவள்