மாலதியின் தந்தை
2
நாகபுரி விமான நிலையத்தில் நாங்கள் உட்கார்ந்து
விமானக் கம்பெனியார் அளித்த காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
ரங்கபாஷ்யம் உட்கார்ந்த மேஜையில் உட்காராமல் வேண்டுமென்றே வேறொரு மேஜையைத்
தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். ஆனால் அடிக்கடி என்னுடைய கவனம் மட்டும்
அவன் மீது சென்று கொண்டிருந்தது.
அதுவரை சோர்வும் அலுப்பும் குடிகொண்டிருந்த ரங்கபாஷ்யத்தின் முகத்தில் திடீரென்று ஒரு மலர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்படக் கண்டேன்.
வேறொரு விமான ரமணி அச்சமயம் நிலையத்து அறைக்குள் வந்தாள். அவள் தன்னுடன் வந்த விமான ஓட்டிகளுடன் ஒரு மேஜையில் அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கினாள். அவளுடைய வருகையைப் பார்த்தவுடனே தான் ரங்கபாஷ்யத்தின் முகம் மலர்ந்தது. புதிதாக வந்த விமான ரமணி கதாநாயகிகளின் இனத்தைச் சேர்ந்தவள். கவிகள் பூரண சந்திரனுக்கு ஒப்பிடுகிறார்களே அப்படிப்பட்ட வட்டவடிவமான பிரகாசமான முகம்; பவளமல்லிப் பூவின் நிறம்; கரிய பெரிய கண்கள்! அந்தக் கண்களின் இமைகள் அவ்வப் போது சடசடவென்று பட்டுப் பூச்சியின் இறகுகளைப் போல் மூடி மூடித் திறந்தன. அவளுடைய கண்களின் கருவிழிகள் அங்குமிங்கும் குறுகுறுவென்று சலனம் பயின்று கொண்டிருந்தன. அவள் கூந்தலைக் கழுத்தளவு தொங்கும்படி விட்டுத் தூக்கிச் செருகியிருந்தது அவளுடைய முகத்துக்கு ஒரு தனிச் சோபையைக் கொடுத்தது.
அந்தப் பெண் அறைக்குள் வந்தபிறகு ரங்கபாஷ்யத்தின் கவனம் முழுவதும் அவளிடம் சென்றிருந்ததைக் கண்டேன். மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்ற கூச்சம் சிறிதுகூட இல்லாமல் அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த விமான ரமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக ரங்கபாஷ்யம் இருந்த மேஜைப் பக்கம் அவள் பார்வை சென்றது. ரங்கபாஷ்யத்தைப் பார்த்ததும், அவளுடைய முகத்தில் இளம் புன்னகை அரும்பியது. ரங்கபாஷ்யமும் திரும்பிப் புன்னகை புரிந்தான். அவனுடைய புன்னகையில் அசடு வழிந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் ஏற்கனவே பழக்கமானவர்கள் என்று ஊகித்துக் கொண்டேன். விமான ரமணிகளால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி ரங்கபாஷ்யம் சொல்ல ஆரம்பித்ததில் ஏதோ ஒரு ரஸமான சம்பவம் இருந்திருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!
விமானங்கள் புறப்படும் நேரம் ஆகிவிட்டதென்று ஒலிபெருக்கிகளின் ராட்சதக் குரல் எச்சரித்தது. புதிதாக வந்த விமான ரமணி எழுந்தாள்; ரங்கபாஷ்யம் அதைப் பார்த்துவிட்டு விரைந்து நடந்துபோய் அவள் பக்கத்தை அடைந்தான்.
"நீங்கள் இன்று டில்லி விமானத்தில் வரவில்லையா?" என்று கேட்டான்.
"இல்லை! நான் பம்பாய்க்குப் போகிறேன். விமானத்தில் ஏறினால் இன்னமும் உங்களுக்குத் தலை சுற்றி மயக்கம் வருகிறதா?" என்று கேட்டாள் அந்த ரமணி.
ரங்கபாஷ்யம் லேசாகச் சிரித்துவிட்டு, "உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதே! மிக்க சந்தோஷம்!" என்று சொன்னான்.
அவர்கள் நடந்து கொண்டே பேசியபடியால் அப்புறம் பேசிய வார்த்தைகள் என் காதில் சரியாக விழவில்லை.
அந்தப் பெண் ரங்கபாஷ்யத்திடம் விடைபெற்றுக் கொண்டு பம்பாய் விமானத்தை நோக்கிச் சென்றாள்.
ரங்கபாஷ்யம் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தான். நான் அவன் அருகில் சென்று, "நம்முடைய விமானமும் புறப்படப் போகிறது" என்றேன்.
"நாமும் போக வேண்டியதுதான்!" என்றான் ரங்கபாஷ்யம்.
"ஒருவேளை நீர் அந்த விமான மேனகையுடன் பம்பாய்க்கே போய்விடுவீரோ என்று நினைத்தேன்" என்று நான் அவனை எகத்தாளம் செய்தேன்.
ரங்கபாஷ்யம் அதற்காகக் கோபம் அடையவில்லை.
"போவதற்கு எனக்குச் சம்மதந்தான். ஆனால் டிக்கட்டை வேறு வழியில் மாற்றிக் கொடுக்க மாட்டார்களே!" என்றான்.
விமானத்தில் போய் ஏறிக் கொண்டோ ம். ரங்கபாஷ்யம் ஏதேதோ மனோராஜ்யங்களிலும் பகற் கனவுகளிலும் ஆழ்ந்திருந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் விமானத்தின் 'ஏர்ஹோஸ்ட்டஸ்' கொண்டு வந்து நீட்டிய பெப்பர்மிண்டைக் கூட அருவருப்பில்லாமல் எடுத்துக் கொண்டான்.
குவாலியர் விமானக் கூடத்தில் விமானம் இறங்கியதும் வழக்கம் போல் சிற்றுண்டி சாப்பிடும் இடத்துக்கு சென்றோம். அவனுக்குப் பக்கத்தில் நானாகவே போய் உட்கார்ந்து கொண்டேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
உண்மை வாழ்க்கையிலிருந்து ஏதேனும் ஒரு கதை புனைவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், அதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாதல்லவா?
"அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?" என்று கேட்டாள்.
"நீங்கள் ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்வதில்லையென்றால் சொல்கிறேன். எனக்கும் யாரிடமாவது சொல்லி யோசனை கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது" என்றான் ரங்கபாஷ்யம்.
"ஒன்றும் தப்பான காரியம் இல்லாவிட்டால், அதைப் பற்றி நானும் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை. பிறத்தியாருக்கு யோசனை சொல்ல நான் எப்போதுமே தயார்!" என்றேன் நான்.
மெள்ள மெள்ள அவன் விஷயத்தை சொன்னான். அப்படியொன்றும் பிரமாத விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனோ உலகத்தில் இதை விட முக்கியமானது வேறு என்ன இருக்க முடியும் என்று நினைத்ததாகத் தோன்றியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரங்கபாஷ்யம், விமான, நான், ரமணி, அவளுடைய, அவள், அவன், விமானத்தில், என்றான், அந்த, வந்த, ரங்கபாஷ்யத்தின், அந்தப், நினைத்துக்