மாலதியின் தந்தை
3
ரங்கபாஷ்யம் சென்ற மாதத்தில் ஒரு தடவை
டில்லிக்கு வந்துவிட்டுத் திரும்பியபோது, டில்லி விமான நிலையத்தில் சென்னைக்குப்
புறப்படும் விமானத்தில் ஏறப்போனானாம். சிறிய ஏணிபோன்ற படிகட்டுகளின்
மூலமாகவே விமானத்தில் ஏற வேண்டும். ரங்கபாஷ்யம் அந்தப் படிகட்டுகளில்
ஏறி விமானத்தில் ஒரு காலை வைத்தபோது ஊன்றி வையாமல் தடுமாறி விழப் பார்த்தான்.
அப்போது அங்கே நின்ற விமான ரமணி சட்டென்று அவனுடைய கரத்தைப் பிடித்து
நிதானப் படுத்தி விமானத்தில் ஏற்றி விட்டாள். சம்பிரதாயமாக அவளுக்குத்
"தாங்க்ஸ்" சொன்னான்.
"விழுந்துவிடப் பார்த்தீர்களே? தலை கிறுகிறுத்ததா?" என்று அந்தப் பெண் தமிழில் கேட்டதும், இவனுக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாகப் போய்விட்டது. ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் விமானத்திற்குள் போய் இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டான்.
மறுபடி அந்தப் பெண் கையில் பெப்பர்மிண்ட் பெட்டியுடன் வந்தபோது, "அப்போது ஒரு கேள்வி கேட்டீர்களே, அதற்கு நான் பதில் சொல்லட்டுமா!" என்றான் ரங்கபாஷ்யம்.
"என்ன கேள்வி கேட்டேன்?" என்றாள் அந்தப் பெண்.
"தலை கிறுகிறுத்ததா என்று கேட்டீர்கள். இந்த உலகத்து மனுஷனுக்கு முன்னால் திடீரென்று தேவலோகத்து மேனகை வந்து நின்றால், தலை கிறுகிறுத்து மயக்கம் வராமல் என்ன செய்யும்?" என்றான். அந்த மேனகை புன்னகை செய்துவிட்டு அப்பாற் போய் விட்டாள்.
ரங்கபாஷ்யமோ தனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்த இடத்தில் விமானம் இறங்கியபோது அந்த விமான ரமணி இவனைத் தேடி வந்து, "என்னிடம் பேசியது போல் வேறு யாரிடமாவது பேசிவிடாதீர்கள். கன்னத்தில் அறை விழுந்துவிடும்!" என்றாள்.
"அதைப் பற்றிப் பயமேயில்லை. வேறு யாரிடம் அப்படி நான் பேச முடியும்?" என்றான் ரங்கபாஷ்யம்.
இவ்விதம் அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சு வார்த்தைப் பழக்கம், பத்திரிக்கைத் தொடர் கதையைப் போல் சென்னைப் போகும் வரையில் நீடித்திருந்தது.
சென்னையில் பிரிந்து போக வேண்டிய சமயம் வந்தபோது, அந்த விமான மேனகையின் விலாசத்தை தெரிந்து கொள்ள ரங்கபாஷ்யம் ஆனமட்டும் முயன்றான். அது முடியவில்லை.
"கடவுளுடைய சித்தம் இருந்தால் மறுபடியும் எப்போதாவது நாம் சந்திப்போம்" என்றாள் விமான மேனகை.
"அப்படிக் கடவுளுக்கே தான் விட்டுவிடப் போவதில்லை, நானும் கொஞ்சம் முயற்சி செய்வதாகவே உத்தேசம்" என்றான் ரங்கபாஷ்யம்.
விமானப் பிரயாணத்தில் இது ஒரு விசித்திரமான அனுபவம் என்று மட்டுமே முதலில் ரங்கபாஷ்யம் நினைத்தான். ஆனால் அந்த விசித்திர அனுபவம் அவனுடைய உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்துவிட்டது என்று போகப் போகத் தெரிந்தது. அந்த அனுபவத்தை அவன் மறக்க முடியவில்லை. அந்தப் பெண்ணையும் மறக்க முடியவில்லை. கிட்டதட்டப் பைத்தியம் மாதிரியே ஆகிவிட்டது.
ஆகையினாலேயே மறுபடியும் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் ஏறிய விமானத்தில் அந்த மேனகையைக் காணாதபடியால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தான். நாகபுரியில் அவளைப் பார்த்த பிறகு தான் ஒருவாறு மறுபடியும் உற்சாகம் ஏற்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலதியின் தந்தை - Malathiyin Thanthai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரங்கபாஷ்யம், அந்த, அந்தப், விமானத்தில், விமான, என்றான், மறுபடியும், முடியவில்லை, பெண், மேனகை, என்றாள்