கைதியின் பிரார்த்தனை
3
போலீஸ்காரர்களும் கைதியும் மறைந்ததும்,
கைலாஸத்துக்கு இதெல்லாம் உண்மையா, கனவா என்று சந்தேகம் வந்துவிட்டது.
கையிலிருந்த மூன்று கால் ரூபாய் நாணயங்கள், 'கனவு அன்று; உண்மை!' என்பதை
வற்புறுத்தின. பெருமாள்புதூரைத் தேடித் தான் வந்த நோக்கம் என்ன, இப்போது
போகும் காரியம் என்ன என்பதை எண்ணியபோது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது.
ஆயினும் வாக்குறுதி கொடுத்தாய்விட்டது. போகத்தான் வேண்டும்.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் பெருமாள்புதூர்வாசிகள், தங்கள் ஊர்ச் சாலைப்புறத்தில் தீபாவளிக்கென்று வைத்திருந்த பட்டாஸ் கடையில் ஒரு மோட்டார் வண்டி வந்து நிற்கிறதென்பதை அறிந்து அதிசயம் அடைந்தார்கள். மோட்டாரில் வந்த பெரிய மனிதர் கேவலம் முக்கால் ரூபாய்க்கு மட்டும் பட்டாஸ்களும், மத்தாப்புகளும் வாங்குவதைப் பார்த்து அவர்களுடைய ஆச்சரியம் அதிகமாயிற்று. முதலிலே தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் அதிகம் வாங்கலாமென்று கைலாஸம் நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வது ஏதோ தெய்வத்துக்கு அபகாரம் செய்வது போலாகுமென்று அவனுக்குத் தோன்றியது. தகப்பனுக்கும் மக்களுக்கும் இடையே தான் பிரவேசிப்பது பாவமென்று எண்ணினான். எனவே, அந்த முக்கால் ரூபாய்க்கும் வெடி வகையராக்கள் வாங்கிக் கொண்டு கைக்கோளர் தெருவுக்கு வழி விசாரித்துச் சென்றான். அங்கே மருதமுத்து வீட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாயிருந்தது. ஏனெனில் மோட்டாரில் வந்திருக்கும் பிரபு, கேவலம் 'கேடி' மருதமுத்துவின் வீட்டைத் தேடி வந்திருப்பாரென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எவரெவர் வீட்டையோ காட்டினார்கள். கடைசியில் அந்தக் 'கேடி' மருதமுத்துவின் வீட்டை அடைந்தபோது, வீட்டுக்குள்ளே கைலாஸம் பார்த்த காட்சி வாசற்படியிலேயே அவனைத் திகைத்து நிற்கும்படி செய்தது.
ஏழ்மை நிலையிலிருந்த குழந்தைகள் நால்வர் உயர் குலத்து மங்கை ஒருத்தியைச் சுற்றி நின்றார்கள். அவள் ஒரு மூட்டையிலிருந்து துணிமணிகளை எடுத்து அக்குழந்தைகளுக்கு ஒவ்வொன்றாய்க் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த மங்கை யார்? பன்னிரண்டு வருஷத்திற்கு முன் பார்த்த உமாவின் உருவம் கைலாஸத்தின் மனக்கண்முன் நின்றது. இவள் அவள் தமக்கையா என்ன? இல்லை, இல்லை, அவளே தான்!
சில நிமிஷத்துக்கெல்லாம் உமா திரும்பிப் பார்த்தாள். ஒரு கணம் அவளுடைய கண்களில் ஆச்சரியம் தோன்றிற்று. பின்னர் அக்கண்களில் இயற்கை அமைதி குடிகொண்டது.
சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தார்கள். பிறகு உமாவின் முகத்தில் தோன்றிய கேள்விக்குப் பதில் கூறுவான் போல் கைலாஸம், "இந்தக் குழந்தைகளின் தகப்பன் இவர்களுக்குப் பரிசு அனுப்பினான். அவற்றைக் கொண்டு வந்தேன்" என்றான்.
தகப்பன் என்றதும் குழந்தைகள் கைலாஸத்தை வந்து சுற்றிக் கொண்டன. ஆச்சரியமும் பயமும் ததும்பிய கண்களுடன் அவனைக் கண் கொட்டாமல் பார்த்தன. கைலாஸம் திரும்ப மோட்டாருக்குச் சென்று, அங்கிருந்த சிறு மூட்டையை எடுத்து வந்து, பட்டாஸ் கட்டுகளையும், மத்தாப்புப் பெட்டிகளையும் அவர்களிடம் கொடுத்தான். உமா கொடுத்த துணிமணிகளை வாங்கிக் கொண்ட போதெல்லாம் சாதாரணமாயிருந்த குழந்தைகளின் முகத்தில் இப்பொழுது குதூகலம் ததும்பிற்று.
"ஐயா! நீங்க எங்க அப்பாவைப் பாத்தீங்களா?" என்று மூத்த பெண் தயக்கத்துடன் கேட்டாள்.
"ஆமாம், அம்மா! இதெல்லாம் அவர் தான் கொடுக்கச் சொன்னார்" என்றான் கைலாஸம்.
"அப்பா எப்ப வருவாங்க?" என்று மறுபடி அவள் கேட்டபோது, கண்களில் ஜலம் ததும்பிற்று.
"இன்னும் இரண்டு மாதத்தில் கட்டாயம் வந்துவிடுவார், அம்மா!"
அதற்குப் பின் அந்தப் பெண் ஒன்றும் கேட்கவில்லை. எல்லாக் குழந்தைகளும் பட்டாஸ், மத்தாப்புகளில் கவனம் செலுத்தின.
"நான் போய்வருகிறேன்!" என்று கைலாஸம் உமாவைப் பார்த்துச் சொன்னான்.
அவள் ஒரு நிமிஷம் தயங்கிப் பிறகு, "இந்தக் குழந்தைகள் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டீர்களே! இவர்களுடைய தகப்பன் வரும் வரையில் இவர்களைக் காப்பாற்ற ஏதாவது வழி செய்துவிட்டுப் போங்கள்" என்றாள்.
"அவர்களை ரக்ஷிக்கத் தேவியேதான் இங்கே இருக்கிறாளே! அவர்களுக்கென்ன குறை?"
"அந்தத் தேவியின் ரக்ஷணை இனிமேல் அவர்களுக்கு இல்லை."
"ஏன் அப்படி?"
"பன்னிரண்டு வருஷ காலமாக அவள் யாரைக் குறித்துத் தவம் செய்தாளோ, அந்தத் தேவன் இன்றுதான் பிரசந்நமாயிருக்கிறார். அவருக்கு மனமிருந்து அழைத்துப் போனால், அவருடன் போவேன். அவர் மறுபடியும் என்னை விட்டுச் சென்றால், மனிதர்கள் யாரும் முடிவாகச் செல்லுமிடம் செல்வேன்."
கைலாஸத்துக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. இவள் என்ன சொல்கிறாள்? யாரைக் குறித்துச் சொல்கிறாள்?
"கொஞ்சம் விளங்கும்படி சொன்னால் நன்றாயிருக்கும்" என்றான்.
"வீட்டுக்கு வந்தால் சொல்கிறேன். இந்தக் குழந்தைகள் இங்கே சந்தோஷமாயிருக்கட்டும்."
"வீட்டிற்கா?" என்று கைலாஸம் இழுத்தான்.
"வீட்டில் என்னைத் தவிர என் தாயார்தான் இருக்கிறாள்! வேறு யாரும் இல்லை."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைதியின் பிரார்த்தனை - Kaithiyin Pirarthanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கைலாஸம், அவள், என்ன, இல்லை, குழந்தைகள், தான், இந்தக், என்றான், தகப்பன், யாரும், பட்டாஸ், வந்து, கொண்டு