கைதியின் பிரார்த்தனை
2
"தெரியுமா? பேசாமல் உன்னுடைய உடுப்பைக்
கழற்றிக் கொடுத்துவிடு. கொடுத்துவிட்டால் உன்னை ஒன்றும் செய்யவில்லை.
ஏதாவது தகராறு பண்ணினாயோ, அப்படியே மென்னியைத் திருகி ஆற்றில் போட்டு
விடுவேன்!" என்னும் சொற்கள் கைலாஸத்தின் செவியில் விழுந்தன. தலையில்
விழுந்த அடியினால் கலக்கம் அடைந்திருந்த அவனது மூளை சிறிது சிறிதாக தெளிவு
பெற்றது.
முன்னொரு தடவை இதேவிதமாக மண்டையில் அடிபட்டு அவன் புத்தி கலங்கியதுண்டு, அது சட்டம் மீறி உப்பு எடுக்கச் சென்றபோது போலீஸ் தடியினால் பட்ட அடி. அச்சமயம் அவனுக்கு ஸ்மரணை வந்தபோது, காதிலே, 'வந்தே மாதரம்!' 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்னும் கோஷங்கள் ஒலித்தன. இப்போது அதெல்லாம் ஒன்றுமில்லையென்றும், இது வேறு சங்கதியென்றும் உணர்ந்தான். கண்ணைத் திறந்து பார்த்தான். சிறை உடை தரித்த ஒருவன் தன் மார்பின் மேல் ஒரு காலை வைத்து அமுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அடுத்த நிமிஷம் கைலாஸமும் கைதியும் காவேரிக் கரையில் கட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள்.
இப்படி எவ்வளவு நேரம் சென்றது என்பது கைலாஸத்துக்குத் தெரியாது. திடீரென்று போலீஸ் ஊதுகுழலின் சத்தம் கேட்டது. பிறகு பூட்ஸ் அணிந்த காலடிச் சத்தம். அடுத்த கணம், தன் மேல் உட்கார்ந்து அமுக்கிக் கொண்டிருந்த பூதம் எழுந்திருந்து விட்டதென்பதைக் கைலாஸம் உணர்ந்தான். அவனும் எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். போலீஸ்காரர்கள் இருவர் கைதிக்கு விலங்கு பூட்டத் தயாராயிருந்தார்கள். அதைவிட அவனுக்கு ஆச்சரியம் அளித்த மற்றொரு காட்சியையும் கண்டான். "மென்னியைத் திருகிக் காவேரியில் போடுவேன்!" என்று அவனைப் பயமுறுத்திய முரட்டுப் பூதம் இப்போது கண்ணிலே நீர் பெருக்கிக் கொண்டிருந்தது.
கைதி திடீரென்று கீழே விழுந்து கைலாஸத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டான். "ஸ்வாமி, நீங்கள் தான் எனக்கு ஒரு ஒத்தாசை செய்யவேணும்" என்று கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினான். அதைக் கண்டு போலீஸ்காரர்கள் கூடச் சிறிது தயங்கி நின்றார்கள்.
அந்த முரட்டுப் பேயினிடம் பட்ட அடிகளினால் கைலாஸத்துக்கு உடம்பு முழுவதும் இன்னும் வலித்துக் கொண்டிருந்தது. ஆயினும், அவன் இப்போது காட்டிய துக்கமானது கைலாஸத்தின் உள்ளத்தை இளக்கிவிட்டது கடைசியில் அவன், "என்ன ஒத்தாசை வேண்டும் என்று சொல்லு; முடியுமானால் செய்கிறேன்" என்றான்.
"ஸ்வாமி! உங்களுக்குக் கோடி புண்யம் உண்டாகும். உங்கள் குழந்தை குட்டிகளைப் பகவான் காப்பாற்றுவார். அதோ தெரிகிறதே கோவில், அதுதான் பெருமாள்புதூர். அங்கே கைக்கோளர் தெருவில் மருதமுத்து வீடு என்று கேட்டால் சொல்வார்கள். அந்த வீட்டில் தாயில்லாக் குழந்தைகள் மூன்று பேர் இருக்கிறார்கள். என் பெண்டாட்டி சாகும்போது, பாவி என்னிடம் குழந்தைகளை ஒப்படைத்து, அவற்றைக் காப்பாற்றுவதாகச் சத்தியம் வாங்கிக் கொண்டு போனாள்..." (இங்கே மருதமுத்து அழத் தொடங்கினான். பிறகு சமாதானம் அடைந்து மேலே சொன்னான்.) "ஐயோ! பாழும் குடியினால் கெட்டுப் போனேன் நான். போன வருஷம் தீபாவளியன்று ஊர்க் குழந்தைகள் எல்லாம் புதுத் துணி உடுத்தி, பட்டாஸ் கொளுத்திச் சந்தோஷமாயிருந்தார்கள். என் குழந்தைகள் மட்டும் அழுது கொண்டிருந்தன. 'அடுத்த தீபாவளிக்கு உங்களை நான் இப்படி வைப்பதில்லை' என்று சத்தியம் செய்து கொடுத்தேன். நாளைக்குத் தீபாவளி, அவர்களை நான் பார்க்கவே மாட்டேன்!" என்று மறுபடியும் விம்மினான்.
கைலாஸத்துக்கு இப்போது ஒருவாறு விஷயம் புரிந்தது. "அழாதே, நான் என்ன செய்ய வேண்டும் சொல்லு. பெருமாள்புதூருக்குப் போய் உன் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமா?" என்று கேட்டான்.
மருதமுத்து போலீஸ்காரர்களைத் திரும்பிப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தன்னுடைய மோவாய்க் கட்டையையும், கன்னத்தையும் இரண்டு தடவை தட்டினான். அவனுடைய வாயிலிருந்து மூன்று கால் ரூபாய்கள் கையில் விழுந்தன. அவற்றைக் கைலாஸத்தினிடம் கொடுத்து விட்டுச் சொன்னான்: "ஸ்வாமி! இந்தப் பணத்திற்குப் பட்டாஸ் கட்டும் மத்தாப்பும் வாங்கிக் குழந்தைகளிடம் கொடுங்கள். 'உங்கள் அப்பன் அனுப்பினான்' என்று சொல்லுங்கள். இன்னும் இரண்டு மாதத்திலே வந்துவிடுவான் என்று சொல்லுங்கள். சொல்வீர்களா ஸ்வாமி?"
கைலாஸத்தின் கண்களில் ஜலம் துளித்தது; அவனுக்குச் சிறையநுபவம் உண்டாதலால், சிறைச்சாலையில் மேற்படி மூன்று கால் ரூபாய்களைச் சேர்க்க மருதமுத்து எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிந்திருந்தான். சிறைக்குள்ளே ஒவ்வொரு கால் ரூபாயும் ஒரு பவுனுக்குச் சமானம். அவற்றை அவன் வாங்கிக் கொண்டு, "அப்பா கட்டாயம் அப்படியே செய்கிறேன். நீ கவலைப்படாதே" என்று உறுதி கூறினான்.
"ஸ்வாமி! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; நினைவாக ஒரு ஊசிக் கட்டு வாங்கிக் கொண்டு போங்கள்" என்றான் கைதி.
இதுவரை பொறுத்திருந்த போலீஸ்காரர்கள் இப்போது பொறுமையிழந்தவர்களாய், "போதும் நாடகம்; கிளம்பு!" என்று சொல்லிக் கையில் விலங்கைப் பூட்டி இழுத்துச் சென்றார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைதியின் பிரார்த்தனை - Kaithiyin Pirarthanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸ்வாமி, இப்போது, கைலாஸத்தின், வாங்கிக், நான், மருதமுத்து, அவன், கால், கொண்டு, அடுத்த, குழந்தைகள், மூன்று, போலீஸ்காரர்கள்