கைதியின் பிரார்த்தனை
4
பன்னிரண்டரை வருஷத்துக்கு முன்னால், தட்டிப்
போன கலியாணத்துக்கு முதல் நாளிரவு, ஊர்வல உடையைக் கூட முழுதும் களையாமல்
எந்த வீட்டிற்குள் கைலாஸம் பிரவேசித்தானோ, அதே வீட்டிற்குள் இன்று மாலை
மறுபடியும் நுழைந்தான்.
"அம்மா! விருந்தாளி வந்திருக்கிறார்!" என்று உமா வாசற்படி நுழைந்ததும் கூறினாள். கொஞ்சம் வயதான ஸ்திரீ ஒருத்தி வந்து கைலாஸத்தை உற்றுப் பார்த்தாள். "பார்த்த ஞாபகமிருக்கிறது. நன்றாய் ஞாபகமில்லை..." என்று கூறி, அப்புறம் ஏதோ சொல்ல ஆரம்பித்து நிறுத்தி விட்டாள்.
"என் பெயர் கைலாஸம்!" என்றான்.
உடனே அந்த அம்மாளின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. "என் பெண்ணின் தவம் வீண் போகவில்லை. பகவானே! நீர் தான் துணை" என்று தழுதழுத்த குரலில் கூறினாள். பிறகு உமாவைப் பார்த்து, "சற்று நேரம் பேசிக் கொண்டிரு, அம்மா! ஒரு நிமிஷம் சமையல் செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
கைலாஸத்தின் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. மனக்குழப்பமோ சொல்ல முடியாது.
"வீட்டுக்கு வந்தால் ஏதோ சொல்லுவதாகக் கூறியபடியால் வந்தேன்" என்றான்.
"ஞாபகம் இருக்கிறது, எப்படிச் சொல்வதென்று தான் தெரியவில்லை; கதை மாதிரிச் சொல்லலாமல்லவா?"
"எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்!"
"இந்த ஊரிலே துர்ப்பாக்கியசாலியான ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அவள் பெற்றோர் தக்க வரனைத் தேடிக் கலியாணம் நிச்சயம் செய்திருந்தார்கள். கலியாணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளையும் அவரைச் சேர்ந்தவர்களும் வந்து சேர்ந்தனர். அந்தப் பெண், தனக்குப் புருஷனாக வரப்போகிறவருக்கு ஒரு கடிதம் எழுதித் தன் தோழியிடம் கொடுத்தனுப்பினாள். அப்படி அவள் செய்தது தவறுதான்; ஆனால் அது அவ்வளவு பெரிய தவறு என்று அவள் அப்போது நினைக்கவில்லை. மாப்பிள்ளை அந்தக் கடிதத்தைப் பார்த்துக் கோபித்துக் கொண்டு அன்றிரவே புறப்பட்டுப் போய்விட்டார்."
"அந்தப் பெண் தன்னுடைய செயலால் நேர்ந்த விபரீதத்தை அறிந்தபோது துயரக் கடலில் ஆழ்ந்தாள். தன்னைத் தானே நொந்து கொண்ட போதிலும், தான் செய்த தவறை வெளியே சொல்ல வெட்கிப் பேசாமல் இருந்தாள். ஆனால் வேறு கலியாணத்தைப் பற்றிப் பேச்சு வந்தபோது தகப்பனாரிடம் உண்மையை ஒப்புக் கொள்ள நேர்ந்தது. தன் மனத்திலே வரித்து ஒருமுறை நிச்சயமானவரைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள். அவள் தகப்பனார் அதே மாப்பிள்ளையைப் பற்றி மறுபடியும் விசாரித்தார். ஆனால் அவர் உடனே ஊரை விட்டுப் போய்விட்டாரென்றும், அவரைப் பற்றி யாருக்கும் ஒரு தகவலும் தெரியாதென்றும் செய்தி கிடைத்தது."
"ஆனால் அந்தப் பெண் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. தன்னுடைய ஹிருதயத்தில் உண்மை அன்பு இருந்தபடியால், என்றைக்காவது ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்று நம்பியிருந்தாள். ஒரு வருஷமல்ல, இரண்டு வருஷமல்ல, பன்னிரண்டு வருஷங்கள் அந்த நம்பிக்கையுடன் கழித்தாள்..."
"அவள் அனுப்பிய கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று சொல்லவில்லையே?" என்று கைலாஸம் கேட்டான்.
"அந்தக் கடிதமே இருக்கிறது. இதோ கொண்டு வருகிறேன்!" என்று உமா எழுந்திருந்து சென்று ஒரு மிகப் பழைய பழுப்படைந்த காகிதத்தைக் கொண்டு வந்து தந்தாள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.
"என் உயிருக்குயிரான பிராணநாதருக்கு,
நான் இதை எழுதுவது தவறாயிருந்தால் தயவு செய்து மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறேன். தாங்கள் கலியாணத்திற்குக் கதர் வேஷ்டிதான் வேண்டுமென்று சொல்லி அப்படியே வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதைப்பற்றி என் தோழிகள் எல்லாம் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். 'கோணிச்சாக்கு மாப்பிள்ளை' என்று சொல்லுகிறார்கள். ஆகையால் தாங்கள் என் மேல் கருணை கூர்ந்து பட்டு வேஷ்டியே வாங்கிக் கொள்ளும்படி வணக்கமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
கைலாஸம், அதை இரண்டு தடவை, மூன்று தடவை
படித்துவிட்டு, முகத்திலே திகைப்புடன், "இது என்ன? நான் படித்த கடிதம்
இது அல்லவே?" என்றான்.நான் இதை எழுதுவது தவறாயிருந்தால் தயவு செய்து மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறேன். தாங்கள் கலியாணத்திற்குக் கதர் வேஷ்டிதான் வேண்டுமென்று சொல்லி அப்படியே வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதைப்பற்றி என் தோழிகள் எல்லாம் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். 'கோணிச்சாக்கு மாப்பிள்ளை' என்று சொல்லுகிறார்கள். ஆகையால் தாங்கள் என் மேல் கருணை கூர்ந்து பட்டு வேஷ்டியே வாங்கிக் கொள்ளும்படி வணக்கமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
அடியாள்
உமா"
அடியாள்
உமா"
"நான் எழுதிய கடிதம் இதுதான். ஆனால் நீங்கள் படித்த கடிதம் வேறு. அதை நீங்கள் மேல் கவருடன் காட்டிக் கேட்டதால், மேல் விலாசத்தின் எழுத்தைப் பார்த்து விட்டு 'நான் எழுதியது தான்' என்று சொல்லி விட்டேன். நீங்கள் அப்பால் போனதும், உறையைப் பிரித்துப் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது. என் தோழி விஷமத்துக்காக ஒரு நாவலிலிருந்து அந்த மாதிரி எடுத்து எழுதி உங்களிடம் கொடுத்து விட்டாள். அதைப் படித்ததும் அப்போது எனக்கு ஏற்பட்ட திகைப்பில் இன்னது செய்வதென்று தோன்றவில்லை. நீங்களோ உடனே போய் விட்டீர்கள். பகவானே! அந்த நாட்களில் நான் அநுபவித்த வேதனையை நினைத்தால் இப்போதும் உடல் நடுங்குகிறது"
"அடடா! என்ன அநியாயம்! அந்த விஷமக்காரப் பெண் அப்படிப்பட்ட காரியம் ஏன் செய்தாள்?"
"பாவம்! அவள் பட்ட துன்பமும் கொஞ்சமில்லை. தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு அழு அழு என்று அழுதாள். என்னுடைய அசல் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தாள். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி, அவள் பேரில் எனக்குக் கோபமே கிடையாது. நான் உங்களைக் 'கதர் கட்டிக் கொள்ள வேண்டாம்' என்று எழுதியதற்குத் தண்டனையாக ஏற்பட்டதுதான் என்னுடைய துன்பம் என்றே கருதி வந்தேன். அதற்குப் பிராயச்சித்தமாக, அந்த வருஷம் முதல் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏழைகளுக்குக் கதர் வேஷ்டி இனாம் அளித்து வருகிறேன். இந்த வருஷம் வாங்கிய கதர் வேஷ்டியில் தற்செயலாக ஒரு ஜோடி மிகுந்திருக்கிறது..."
"மருதமுத்து மகாராஜனாயிருக்கவேண்டும். அவன் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்திராவிடில் இன்று உன்னை நான் சந்தித்திருக்க மாட்டேனல்லவா?" என்றான் கைலாஸம்.
"அவன் ஏழேழு ஜன்மத்துக்கும் மஹாராஜனாயிருக்கட்டும். அவன் போன வருஷத்தில் எங்கள் வீட்டில் கன்னம் வைத்துத் திருடிவிட்டு ஜெயிலுக்கும் போயிராவிட்டால், இன்று அவன் குழந்தைகளுக்குத் துணி வாங்கிக் கொண்டு நான் அங்கே வந்திருக்கமாட்டேன்" என்றாள் உமா.
*****
பன்னிரண்டு வருஷ காலமாகத் தீபாவளிக் கொண்டாட்டம் இல்லாதிருந்த பெரிய வீட்டில் இந்த வருஷம் தடபுடலாகத் தீபாவளி உத்ஸவம் நடப்பதைப் பார்த்துப் பெருமாள்புதூர்வாசிகள் அளவிலாத ஆச்சரியம் அடைந்தார்கள்.
கைலாஸத்துக்கும் உமாவுக்கும் அந்தத் தீபாவளி எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆனால் அவ்வளவு நெடுங்காலம் பிரிந்திருந்து எதிர்பாராத முறையில் ஒன்று சேர்ந்த அந்தக் காதலர்களின் ஆனந்தங்கூட அதே சமயத்தில் மருதமுத்துவின் மக்கள் ஒரு சீனவெடி சுட்டதில் அடைந்த இன்பத்துக்கு ஈடாகுமா என்பது சந்தேகம் தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைதியின் பிரார்த்தனை - Kaithiyin Pirarthanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அவள், தான், அந்த, பெண், கொண்டு, கைலாஸம், அவன், கதர், கடிதம், என்றான், மேல், வந்து, நீங்கள், சொல்ல, வருஷம், இன்று, என்ன, உடனே, அந்தக், தன்னுடைய, வேறு, அந்தப்