இடிந்த கோட்டை
2
ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை
நானும் என் சிநேகிதர்கள் இருவரும் திருவண்ணாமலைக்குப் போனோம். அண்ணாமலைநாதர்,
ரமணரிஷிகள், எஸ்.வி.வி. ஆகிய இந்த மூன்று பேரையும் பார்த்துவரும் நோக்கத்துடன்
நாங்கள் புறப்பட்டோ ம். அப்போது எஸ்.வி.வி. தமது ஆங்கிலக் கட்டுரைகளில்
"ஜயா" என்னும் நாகரிக நங்கையைப் பற்றி அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார்.
"இப்படிப்பட்ட மாதரசியை வாழ்க்கைத் துணையாக அடைந்த பாக்கியசாலி யாரோ?
அவரை அவசியம் பார்க்க வேண்டும்!" என்று எங்களுக்கு ஆவலாயிருந்தது.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குப் போகும் வழியில் செஞ்சிக் கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கு வெகு நாளாக உண்டு. போகும் போது கோட்டைக்கு அருகில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு, அந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற பிரதேசத்துக்குள் சென்று சுற்றிப் பார்த்தோம். பாழடைந்த அரண்மனைகளையும், அந்தப் புரங்களையும், மண்டபங்களையும், மதில்களையும், நெற்களஞ்சியங்களையும், குதிரைக் கொட்டாரங்களையும் பார்க்கப் பார்க்க, பிரயாண ஆரம்பத்தில் எங்கள் உள்ளத்தில் இருந்த உற்சாகமெல்லாம் போய் சோர்வு அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆனாலும் அந்தக் காட்சியில் ஏதோ ஓர் அபூர்வமான கவர்ச்சியுமிருந்தது. வெகுநேரம் சுற்றிச் சுற்றி களைத்துப் போன பிறகு, கிளம்ப மனமில்லாமல் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றோம்.
திருவண்ணாமலைக்கு இரவு போய்ச் சேர்ந்தோம். இராத்திரிக்கு ராத்திரியே கதவை இடித்து, எஸ்.வி.வி.யை எழுப்பி, "நீங்கள் தானே எஸ்.வி.வி. என்கிறது? ஜயா சௌக்கியமா? அவளுடையப் பொய்ப்பற்கள் இப்போது எப்படியிருக்கின்றன?" என்றெல்லாம் விசாரித்து அளவளாவித் திருப்தியடைந்தோம்.
மறுநாள் அண்ணாமலைநாதரையும் ரமண ரிஷிகளையும் தரிசனம் செய்து கொண்டோ ம். சாயங்காலம் வெயில் தாழ்ந்த பிறகு சென்னையை நோக்கிக் கிளம்பினோம்.
சூரியாஸ்தமான சமயத்தில் வண்டி செஞ்சியை அடைந்தது. எனக்கு இன்னொரு தடவை அங்கே இறங்கிப் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று தோன்றிற்று. என் நண்பர்களுக்கு அது சம்மதமில்லை. "நீர் வேண்டுமானால் போய்ப் பார்த்து விட்டு வாரும். நாங்கள் ஊருக்குள் போய் ஒரு கப் காப்பி கிடைக்குமா என்று பார்க்கிறோம்" என்றார்கள். காப்பி என்றதும், நான் அங்கு இறங்காமல் வந்து விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் என் மனத்திலிருந்த தாகம் காப்பியின் மோகத்தை வென்று விட்டது. "சரி நீங்கள் போங்கள். நான் இன்னொரு தடவை பார்த்துவிட்டுத் தான் வருவேன்" என்று சொல்லிவிட்டு இறங்கினேன். "அரைமணிக்குள் திரும்பி வந்து ஹாரன் அடிக்கிறோம். அதற்குள் பார்த்து விட்டு வந்து விட வேணும்" என்றார்கள். தடதடவென்று சத்தம் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பிச் சென்றது.
வண்டி போயிற்றோ, இல்லையோ, அந்த ஏகாந்தப் பிரதேசத்தில் நிசப்தம் குடிகொண்டது. என்னுடைய கால் செருப்பின் சப்தத்தைக் கேட்டு நானே திடுக்கிட்டேன். அந்தி நேரத்தில் அந்த நிர்மானுஷ்யமான பிரதேசத்துக்குள் தன்னந்தனியாகச் சென்ற போது மனத்தில் ஒரு விதக் கலக்கமும் பரபரப்பும் உண்டாயின. "சீ! இதென்ன காரணமில்லாத பயம்?" என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன்.
மேற்குத் திசையிலிருந்த குன்றுகளுக்குப் பின்னால் சூரியன் திடீரென்று மறைந்தது. வெகு சீக்கிரத்தில் கையெழுத்து மறையும் நேரம் வந்து விட்டது. அப்போது நான் பழைய பாழடைந்த கட்டிடங்களைத் தாண்டிக் கொண்டிருந்தேன். இருளடைந்த பாழும் மண்டபங்களிலிருந்து வௌவால்கள் 'இறக்கை'யை அடித்துக் கொள்ளுகிற சத்தம் கேட்டது. என் மனத்தில் பய உணர்ச்சி அதிகமாயிற்று. நல்ல வேளையாக அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தான். நிமிஷத்துக்கு நிமிஷம் நிலவின் பிரகாசம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அன்று பௌர்ணமியாக மட்டும் இராவிட்டால், நான் மேலே போயிருக்க மாட்டேன். பாதி வழியிலேயே திரும்பி இருப்பேன்.
பாழுங் கட்டிடங்களைத் தாண்டிப் போன பிறகு, குன்றின் மேல் ஏறுவதற்கு அமைந்த படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளில் கொஞ்ச தூரம் ஏறிச்சென்று அங்கிருந்துப் பார்த்தால் அந்த இடிந்த கோட்டைப் பிரதேசம் முழுவதையும் பார்க்கலாம் அப்படி ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பிப் போக வேண்டுமென்று தான் இவ்வளவு தூரம் நான் வந்தது. படிகளில் ஏறத் தொடங்கினேன். இருபது முப்பது படிகளுக்கு மேல் ஒரு திருப்பம் இருக்கிறது. அங்கு நான் திரும்பியதும் மேலே அடி எடுத்து வைக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றேன்! ஏனெனில், அங்கே திருப்பத்தின் முதல் படியில் ஒரு மனுஷன் உட்கார்ந்திருந்தான்! அவன் ஓர் இளைஞன். நாகரிகமாக வேஷ்டி, ஜிப்பா அணிந்தவன். தலையை அழகாகக் கிராப் செய்து வாரி விட்டுக் கொண்டிருந்தான். முகம் களையான முகம்; புத்திசாலி என்றும் தோன்றியது. இப்படிப்பட்ட பையனைச் சாதாரணமாக வேறு எங்கே பார்த்தாலும், பயமோ, அதிசயமோ உண்டாக நியாயமில்லை. ஆனால் அந்த வேளையில், அந்த நிர்மானுஷ்யப் பிரதேசத்தில், அவனைத் திடீரென்று வெகு சமீபத்தில் பார்த்ததும் பாம்பை மிதித்தவன் போல் துணுக்குற்றுப் போனேன்.
அந்த வாலிபன் முகத்திலும் ஆச்சரியமும் திகைப்பும் காணப்பட்டன. ஆனால் அவன் தான் முதலில் சமாளித்துக் கொண்டான். "யார் ஸார் நீங்கள்? இந்த ஊர் இல்லை போலிருக்கிறதே?" என்றான். பேச்சுக் குரல் கேட்டதும் எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது. 'நல்ல வேளை! இங்கே ஒரு மனுஷன் இருக்கிறானே! போகிற போது சேர்ந்து போகலாம்' என்று மனதிற்குள் நினைத்தேன். பிறகு நான் அங்கு வந்த காரணத்தைக் கூறினேன்.
"ஆமாம்; இந்த இடத்திலிருந்து வெண்ணிலாவில் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எனக்குக் கூட ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி இங்கு நான் வருவதுண்டு," என்றான்.
அவனருகில் நானும் உட்கார்ந்து, "உமக்கு இந்த ஊர் தானா?" என்று கேட்டேன். "இல்லை. என் சொந்த ஊர் பெரிய குளம். பக்கத்து ஊர்ப் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயராகயிருக்கிறேன். வந்து மூன்று வருஷமாயிற்று," என்றான்.
அவன் செகண்டரி ட்ரெயினிங் ஆனவன் என்றும், பெயர் குமாரஸ்வாமி என்றும் தெரிந்து கொண்டேன். தன் கையால் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவன் சொன்னபோது, "கல்யாணம் ஆகவில்லையா?" என்று கேட்டேன்.
"கல்யாணமா?" என்று சொல்லி அவன் வானத்துச் சந்திரனை நோக்கினான். பிறகு, பெருமூச்சு விட்டுக் கொண்டு என்னைப் பார்த்து "இதுவரைக்கும் இல்லை," என்றான். அப்போது அவனுடைய பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தன.
பின்னர் அவனாகவே, "ஆனால் பெண் நிச்சயமாகியிருக்கிறது," என்றான்.
"எந்த ஊரில்?" என்று கேட்டேன்.
"இதே ஊரில், இதே இடத்தில்தான். பெண் நிச்சயமாகி முந்நூறு வருஷமாகிறது..." என்று கூறி, ஒரு நிமிஷம் தயங்கினான்.
பிறகு, "இன்றைக்குத்தான் கல்யாணம்" என்று சொல்லி முடித்தான்.
என்னுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று. ஐயோ! இவனுக்குச் சித்தப் பிரமை போலிருக்கிறதே! இந்த ஏகாந்தமான பிரதேசத்தில் அஸ்தமன வேளையில் இவனிடம் வந்து அகப்பட்டு கொண்டோ மே?
மெதுவாக அங்கிருந்து கிளம்புவதற்கு நான் யத்தனைக்கையில், அவன், என் மனதிலுள்ளதைத் தெரிந்து கொண்டவன் போல், "எனக்கு மூளை சரியாயில்லையென்று நினைக்கிறீர்களாக்கும். அப்படித்தான் தோன்றும். எனக்கே சில சமயம் இதெல்லாம் சித்தப் பிரமையோ என்று தோன்றுகிறது. உங்களுக்குச் சாவகாசமிருந்தால் முழு விவரமும் சொல்கிறேன். எத்தனையோ நாளாக, யாரிடமாவது என்னுடைய அநுபவங்களைச் சொல்ல வேண்டுமென்று எனக்கு ஆசையுண்டு," என்றான்.
அவன் பைத்தியக்காரன் என்ற எண்ணம் எனக்கு மாறிவிட்டது. ஏதோ ரொம்பவும் துக்கப்பட்டவன், துக்க மிகுதியினால் இப்படிப் பேசுகிறான் என்று தோன்றியது. அவனுடைய கதையைக் கேட்டுவிட்டு கூடுமானால் அவனுக்கு யோசனை சொல்லி உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையும் உண்டாயிற்று.
"சீக்கிரமாகச் சொல்லி முடித்தால் கேட்டு விட்டுப் போகிறேன்," என்றேன்.
குமாரஸ்வாமி நன்றி ததும்பிய கண்களுடன் என்னைப் பார்த்தான். "ஆகட்டும்! சுருக்கமாக முடித்து விடுகிறேன்," என்றான். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மேலே சொல்லத் தொடங்கினான்.
"பக்கத்துக் கிராமத்தில் நான் உபாத்தியாயர் வேலைக்கு வந்து வருஷம் மூன்று ஆயிற்றென்று சொன்னேனல்லவா? வந்து ஆறு மாதத்துக்கெல்லாம் சில சினேகிதர்களுடன் இந்தச் செஞ்சிக் கோட்டைக்கு ஒரு முறை வந்திருந்தேன். இந்தப் பாழடைந்த பிரதேசம் எப்படியோ என் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. அடிக்கடி இங்கே வர வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. யாராவது துணைக்குக் கிடைத்த போதெல்லாம் அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். கொஞ்ச நாளில் யாரும் துணை கிடைப்பது அருமையாகி விட்டது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும், 'வெறுமே அந்தச் சுடுகாட்டில் என்ன வேலை?' என்று சொல்லி வர மறுத்து விட்டார்கள். பிறகு பள்ளிக் கூடத்துப் பசங்கள் சிலரை அழைத்துக் கொண்டு வரத் தொடங்கினேன். நாளடைவில் அவர்களுக்கும் அலுப்பு வந்து விட்டது.
அப்புறம் நான் இங்கே தனியாகவே வருவதற்கு ஆரம்பித்தேன். ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களில் பிற்பகலில் இங்கு வந்து சுற்றிச் சுற்றி அலைந்து விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவேன்.
அம்மாதிரி ஒரு நாள் தனியாக இங்கு வந்திருந்த அன்று தற்செயலாகப் பௌர்ணமியாயிருந்தது. இது நடந்து சுமார் ஒரு வருஷம் இருக்கும். இன்று போல் தான் அன்றும் பூரண சந்திரன் வெள்ளி நிலாவைப் பொழிந்து கொண்டிருந்தான். இந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் ஏதேதோ ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு இதே நேரத்தில் இந்த பிரதேசம் எவ்வளவு கலகலப்பாய் இருந்திருக்கும். தூரத்திலே கோட்டைக் கதவுகளைச் சாத்துவார்கள்; அரண்மனையில் மேளவாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும்; குதிரையேறிய கோட்டைக் காவலர்கள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருப்பார்கள்; கோயிலில் தீபாராதனை மணி அடித்துக் கொண்டிருக்கும்; மண்டபங்களில் மட மாதர்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ராஜகுமாரிகள் அந்தப்புரங்களில் பாதச் சிலம்பு ஒலிக்க நடமாடுவார்கள்...
இப்படி நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மயிக்கூச்சல் எறிந்தது. இது என்ன ஆச்சரியம்! நிஜமாகவே சதங்கை ஒலி கேட்பது போலிருக்கிறதே? காது கொடுத்துக் கேட்டேன். எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, ஒரு பெண்மணி பாதச் சிலம்பு கிலுகிலுவென்று சப்திக்க நடந்து வருவதுபோல் ஒரு பிரமை உண்டாயிற்று. அது இந்த உலகத்து ஒலிதானோ? அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்ததோ? அந்த ஒலியை முன் ஒரு தடவை எப்போதோ, எங்கேயோ, கேட்டிருப்பது போன்ற உணர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று.
ஒரு நிமிஷத்தில் என் உடம்பெல்லாம் சொட்ட நனைந்து போகும்படி வியர்த்துவிட்டது. அந்த மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்காக தேகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டி எழுந்து நின்றேன். விரைந்து ஊர் போய்ச் சேர்ந்தேன். அன்று ராத்திரி நான் ஒரு கண நேரமும் தூங்க வில்லை. காலையில் என்னைப் பார்த்தவர்கள், "என்னப்பா, முகம் இப்படி வெளிறிப் போயிருக்கிறது? பேயடித்தவன் போலிருக்கிறாயே?" என்றார்கள். உண்மையில், நேற்றிரவு பேயுலகத்துக்குப் போய் விட்டுத் தான் நான் திரும்பினேனோ? மறுபடியும் இந்தக் கோட்டைப் பக்கமே வருவதில்லையென்று அன்றைய தினம் தீர்மானம் செய்து கொண்டேன். ஆனால், நாளாக ஆக இந்தத் தீர்மானத்தின் பலம் குறைந்து வந்தது; பௌர்ணமி நெருங்க நெருங்க, இங்கே வரவேண்டுமென்ற என் ஆசையும் வளர்ந்து வந்தது. கடைசியில் அடுத்த பௌர்ணமியன்று அந்த ஆசையை அடக்க முடியாமல் கிளம்பினேன். ஏதோ ஒரு பெரிய சக்தி என்னைப் பிடித்துக் கவர்ந்து இழுப்பதாகவே தோன்றியது.
இதே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பொன்வட்டத் தகட்டைப்போல் பூரண சந்திரன் மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அஸ்தமித்து இரண்டு மூன்று நாழிகை ஆயிற்று, 'சரி, அன்று நாம் கேட்ட சிலம்பொலி வெறும் பிரமைதான்' என்று எண்ணி எழுந்திருக்க முயன்றேன். ஆனால் பாதி எழுந்தவன் மறுபடியும் உட்கார்ந்து விட்டேன். ஏனெனில், அந்த இனிய சிலம்பொலி அப்போது கேட்கத் தொடங்கியது. முதலில் வெகு தூரத்தில் வேறு லோகத்திலிருந்தே வருவது போலிருந்தது நேரம் ஆக ஆக, நெருங்கி வருவது போல் தோன்றியது. அதற்குமேல் என்னால் அங்கிருக்க முடியவில்லை. எழுந்திருந்து ஓடத் தொடங்கினேன். சிலம்பொலி என்னைப் பின் தொடரவில்லையென்று தெரிந்த பிறகு, கொஞ்சம் சாவதானமாக நடந்தேன். ஆனாலும், ஊர்ப் போய்ச் சேரும் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டுதானிருந்தது.
பிறகு, இங்கே வரக்கூடாதென்ற எண்ணத்தை முழுதும் விட்டு விட்டேன். சாவகாசம் கிடைத்த போதெல்லாம் வரத் தொடங்கினேன். அடிக்கடி பல தடவைகளில் வந்தும் அந்த மாதிரி அநுபவம் எதுவும் ஏற்படாத படியால் ஏமாற்ற மடைந்தேன். ஒரு வேளை பௌர்ணமிக்கும் அந்தச் சிலம்பொலிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தினால், அடுத்த பௌர்ணமியன்று போனேன். சந்தேகம் உறுதியாயிற்று. முன் போலவே, சிறிது நேரத்துக்கெல்லாம் சிலம்பொலி கேட்டது. இம்முறை நான் எழுந்து போகவில்லை. என்ன தான் நடக்கிறது என்று பார்க்கத் தீர்மானித்து உட்கார்ந்திருந்தேன். சிலம்பின் ஒலி நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் அதோ அந்தப் படியண்டை வந்ததும் சப்தம் நின்றது. அந்த ஒலி நெருங்கி வந்த போது, ஓர் அபூர்வ பரிமள வாசனை பரவி வந்ததாகத் தோன்றியது. சந்தன வாசனை மாதிரி இருந்தது. ஆனால் மிக மிக இலேசாயிருந்தது. அது வாசனை தானா? அல்லது வாசனையின் ஞாபகமா? எனக்குத் தெரியவில்லை.
சிறிது நேரம் நான் மெய்ம்மறந்து சிலை போல் உட்கார்ந்திருந்தேன். பிறகு, சற்று முன் நின்ற இடத்திலிருந்து மறுபடி சிலம்பின் ஒலி கேட்க ஆரம்பித்தது.
அது படிகளின் மீது ஏறுவது போலவும் எனக்குப் பின்னால் இருந்த மேல் படியில் வந்து நிற்பது போலவும் தோன்றியது. அந்த மிருதுவான சந்தனவாசனை என்னை முற்றும் சூழ்ந்து கொண்டது. தேகத்தின் ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் நான் அந்த இன்ப மணத்தை அநுபவித்தேன். இப்படி எத்தனை நேரம் மதி மயங்கி இருந்தேனோ தெரியாது. என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில், இருதயத்தைப் பிளக்கும்படியான ஒரு விம்மல் சத்தம் கேட்டது. அடுத்த விநாடி என் மீது சலசலவென்று நீர்த்துளிகள் விழுந்தன. அளவிலாத திகில் கொண்டவனாய்த் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன். அப்படி எழுந்திருந்த போது என் மேலே மிக மிருதுவான பட்டுத்துணி உராய்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பிறகு இவ்விடத்தில் நிற்பதற்குத் தைரியமில்லாமல், அவசரமாய்ப் படிகளில் இறங்கத் தொடங்கினேன். போகும்போது உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.
மறு பௌர்ணமி எப்போது வரப் போகிறதென்று காத்திருந்தேன். அன்று ஏன் அவ்வளவு அவசரப்பட்டு எழுந்து வந்தோம் என்று என்னை நானே நிந்தித்துக் கொண்டிருந்தேன். அடுத்த பௌர்ணமியும் வந்தது. வழக்கம் போல் இந்தப் படியில் வந்து உட்கார்ந்திருந்தேன். அன்று சதங்கையொலி ரொம்பவும் தயங்கித் தயங்கி வந்ததாகத் தோன்றியது. எனக்கு முன்னால் சற்று நின்றது. பிறகு மேலே ஏறி, எனக்குப் பின்னால் போய் நின்றது. முன் போலவே, அந்த இனிய சந்தன வாசனை என்னைச் சூழ்ந்தது. ஆனால் முன் தடவையைப் போல் இலேசாக இல்லை. சந்தேகமற உணர்ந்து அநுபவிக்கக் கூடியதாயிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பூப்போன்ற மெல்லிய கரங்களால் யாரோ என் தோள்களைக் கட்டித் தழுவுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. தலையிலிருந்து கால் வரையில் நான் புளங்காகிதங் கொண்டேன். அந்த ஸ்பரிசம் அவ்வளவு உண்மையாகத் தோன்றியபடியால் தழுவிய கைகளைப் பிடித்துக் கொள்ள என் கரங்களை உயர்த்தினேன். ஆனால் என் கைகள் ஒன்றையும் பிடிக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். வெறும் வெட்ட வெளிதான் இருந்தது. அப்படியே நான் மூர்ச்சையடைந்து விழுந்திருக்க வேண்டும். எனக்கு மூர்ச்சை தெளிந்த போது சந்திரன் ஆகாயத்தில் வெகு தூரம் உயர வந்து விட்டது. தள்ளாடிக் கொண்டு நடந்து வீடு சென்றேன். என்னை இன்பப் பரவசத்தில் ஆழ்த்தி மூர்ச்சடையச் செய்த அந்த ஆலிங்கனத்தை நினைக்கும் போதெல்லாம் மயிர்க் கூச்சல் உண்டாயிற்று.
மறுநாள் சூரியோதயம் ஆனபோது முதல் நாள் மாலை அனுபவம் வெறும் பொய்யென்று தோன்றிற்று. எனக்கு ஏதோ சித்தப் பிரமைதான் உண்டாகி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதென்று நினைத்து, பயந்து போனேன்.
இனி மேல், இந்தக் கோட்டைப் பக்கம் வரக் கூடாதென்றும் உறுதி செய்து கொண்டேன். ஆனால், அந்த உறுதி வெகு சீக்கிரத்திலேயே குலைந்து போயிற்று. அன்று பள்ளிக்கூடத்துக்குப் போனதும் பிள்ளைகள் சிலர், "ஏன், ஸார்! உங்களிடம் என்ன சார் சந்தன வாசனை கம்மென்று வருகிறதே! எங்கேயாவது கல்யாணத்துக்குப் போயிருந்தீர்களா?" என்றார்கள்.
ஆகவே, என்னுடைய அனுபவம் வெறும் பிரமையல்ல; மயக்கமல்ல. உண்மையாகவே, பிரதி பௌர்ணமியும் ஒரு மாயரூப மோஹினி என்னைத் தேடி வருகிறாள். அவள் யார்? எப்படிப் பட்டவள்? எதற்காக இந்த ஏழை உபாத்தியாயரைத் தேடி வருகிறாள்? என்றாவது ஒரு நாள் அவளை ரூபத்துடன் நான் காண்பேனா? இந்த அற்புத அனுபவத்தின் மர்மம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்வேனா?
இதற்குப் பதில் அடுத்த பௌர்ணமியன்று எனக்குக் கிடைத்தது. அன்று வழக்கம்போல் சதங்கையொலி கேட்டதும் நான் ஒலி வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். மெய் சிலிர்த்துத் திகைத்துப் போனேன். உண்மையாகவே ஒரு பெண்ணுருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வுருவம் நடந்து வருவதாகத் தோன்றவில்லை; காற்றில் மிதந்து வருவதாகத் தோன்றியது. அது உண்மை உருவந்தானா? அல்லது, உரு வெளித் தோற்றமா? அருகில் நெருங்க நெருங்க, ஒரு நிஜப் பெண் தான் வருகிறாள் என்று நிச்சயமாயிற்று.
படங்களிலே நாம் பார்த்திருக்கும் ராஜபுத்திர கன்னிகைகளைப் போல் அவள் பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். ஆபரணங்களும் அம்மாதிரியே இருந்தன. தாவணியின் தலைப்பைத் தலையில் முக்காடுப் போட்டுக் கொண்டிருந்தாள். வெண்ணிலாவின் ஒளி அவள் முகத்தில் பட்டபோது, உண்மையில் அந்த முகத்திலிருந்து தான் நிலவொளி வீசுகிறதோ என்று தோன்றியது.
அருகில் அவள் நெருங்க நெருங்க, முகம் தெரிந்த முகம் போல் காணப்பட்டது. எப்போதோ, எங்கேயோ, அவளை நான் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். குலாவியிருக்கிறேன். ஆனால் எங்கே? எப்போது - இப்படி நான் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே, அவள் என் அருகில் வந்து நின்றாள். அவளுடைய பரந்த கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ததும்பிய நீர்த்துளிகள் வெண்ணிலவில் முத்தைப் போல் பிரகாசித்தன. அப்படிப் பார்த்த வண்ணம், 'குமார்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டாள். அந்த இனிய குரல் என் காதில் விழுந்ததும், என் இருதயம் விம்மி வெடிப்பது போலிருந்தது. எப்போதோ ஒரு சமயம், அவளுடைய கையை நான் பிடித்துக் கொண்டு 'இந்த ஜன்மத்தில் மட்டும் அல்ல, ஏழேழு ஜன்மத்திலும் உன்னை நான் மறவேன்; இது சத்தியம்!" என்று அவளுக்கு வாக்கு கொடுத்தது மிகப் பழைய ஒரு கனவைப் போல் ஞாபகம் வந்தது. அவளுடைய கேள்விக்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தேன். அந்தக் கணத்தில் ஸ்மரணையற்றுக் கீழே விழுந்தேன்..."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடிந்த கோட்டை - Idintha Kottai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அந்த, வந்து, பிறகு, எனக்கு, போல், தோன்றியது, அன்று, தான், கொண்டு, மேலே, வெகு, என்னை, உண்டாயிற்று, என்றான், அவன், விட்டது, கொண்டேன், வந்தது, நெருங்க, போது, முகம், என்னைப், முன், அடுத்த, தொடங்கினேன், வாசனை, அவள், இங்கே, சொல்லி, போய், கொண்டிருந்தது, பார்த்து, இப்படி, நடந்து, மூன்று, மேல், நாள், என்ன, நேரம், சந்திரன், சிலம்பொலி, போனேன், செய்து, நெருங்கி, இல்லை, அருகில், அடிக்கடி, அந்தக், என்னுடைய, தடவை, வெறும், அப்போது, கேட்டேன், என்றார்கள், விட்டு, உட்கார்ந்து, இங்கு, தெரிந்து, ரொம்பவும், எழுந்து, நின்றது, உட்கார்ந்திருந்தேன், இனிய, சந்தன, சற்று, அவளுடைய, வருகிறாள், பிடித்துக், பௌர்ணமியன்று, போதெல்லாம், சித்தப், எங்கேயோ, அல்லது, இந்தக், எப்போதோ, பெண், இந்தப், அங்கு, வேண்டுமென்று, விட்டுப், விடுவேன், திரும்பி, பிரதேசத்தில், போட்டுக், சத்தம், வண்டி, நீங்கள், ஆசையும், வேண்டுமென்ற, பார்க்க, நாளாக, அந்தச், போய்ச், பாழடைந்த, நானே, பின்னால், திரும்பிப், பிரதேசம், கோட்டைப், படியில், என்றும், எனக்குத், போலிருக்கிறதே, வேறு, தூரம், படிகளில், அடித்துக், கொண்டிருந்தேன், திடீரென்று, கேட்டது, உணர்ச்சி, கொண்டிருந்தான், பூரண, வந்த