இடிந்த கோட்டை
1
சமீபத்தில் ஒரு பழைய சிநேகிதர் வீட்டுக்கு
நான் போயிருந்த போது அவருடைய குழந்தை என்னை ஒரு கேள்வி கேட்டாள். "மாமா!
இப்போதெல்லாம் நீங்கள் ஏன் கதையே எழுதுவதில்லை?" என்றாள். யுத்தத்தினால்
காகிதம் ரொம்பக் கிராக்கியென்றும், நானே எழுதிக் கொண்டிருந்தால் மற்றவர்கள்
எழுதுவதை விகடனில் போட முடியாதல்லவா என்றும், இம்மாதிரி அவளுக்கு ஏதேதோ
சால்ஜாப்பு சொன்னேன். முக்கியமான காரணத்தை மட்டும் அவளுக்குச் சொல்லவில்லை.
இப்போது சொல்கிறேன்:
உலக வாழ்க்கையில் உண்மையாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்க பார்க்க கதையாவது காரணமாவது என்று எனக்குத் தோன்றிவிடுகிறது. கதையில் கற்பனை செய்ய முடியாத அத்தனை அதிசயமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. ஒரு விசேஷமென்னவென்றால், அந்த அதிசய சம்பவங்களைக் குறித்து யாருக்கும் சந்தேகம் உண்டாவதில்லை. இப்படியும் நடக்குமா என்று எண்ணுவதில்லை. வெகு தூரத்தில் நடந்த சம்பவமானாலும் பத்திரிகைகளில் வந்து விட்டால் பூரணமாய் நம்பிவிடுவார்கள்.
உதாரணமாக, சென்ற மாதத்தில் நடந்த ஒரு விபரீத அதிசயத்தைக் கேளுங்கள்: பெங்களூரில் ஒரு விவாகம் நடந்தது. மணமகனும் மணமகளும் ஏழைகள். கல்யாணம் ஆனதும், மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் அவர்களைச் சேர்ந்தவர்களும் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். வழியில் மணப்பெண் அவளுடைய தோழி ஒருத்தியுடன் ஒரு மரத்தடியில் ஒதுங்கிச் சற்று இளைப்பாற உட்கார்ந்தாள். அப்போது அந்த மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து விழுந்தது. அது அந்த மணப்பெண்ணின் தலையில் விழுந்தது! மணப்பெண் தட்சணம் உயிர் துறந்தாள்!
இந்தப் பரிதாப சம்பவம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு கதையில் வந்திருந்தால், நாம் இலேசில் நம்பிவிடுவோமா? "அந்த மணப்பெண் அந்த மரத்தடிக்குத் தானா போயிருக்க வேண்டும்? வேறு மரத்தடிக்குப் போயிருக்கக் கூடாதா? அந்த மரக்கிளை ஐந்து நிமிஷத்துக்கு முன்பே ஒடிந்து விழுந்திருக்கக் கூடாதா? அதுவும் மணப்பெண் தலையில் பார்த்துத்தானா விழ வேண்டும்? பக்கத்திலுள்ள யார் தலையிலாவது விழக்கூடாதா?" என்று ஆயிரம் ஆட்சேபங்களைச் சொல்வோம்.
இதை நினைக்கும் போது தான், எனக்குக் கதை எதற்காக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது. என் நண்பனின் பெண்ணைப் போன்றவர்களைத் திருப்தி செய்வதற்காக ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்றால் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஒன்றையே எழுதிவிடலாமென்றும் தோன்றுகிறது! அத்தகைய வாழ்க்கைச் சம்பவம் ஒன்றைத்தான் இப்போது எழுத உத்தேசித்திருக்கிறேன்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடிந்த கோட்டை - Idintha Kottai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்த, மணப்பெண், சம்பவம், வாழ்க்கையில்