இடிந்த கோட்டை
4
ஆமாம்; ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வாஸ்தவந்தான்.
மணி ஏழரை, எட்டுக்கூட இருக்கும். சாலைப் பக்கம் காது கொடுத்துக் கேட்டேன்.
மோட்டார் ஹாரன் சப்தம் கேட்கவில்லை.
குமாரஸ்வாமி முன்பைவிட அதிகப் பரபரப்பு அடைந்திருப்பதையும், நான் அவ்விடம் விட்டு போக வேண்டுமென அவன் விரும்புகிறானென்பதையும் கண்டேன். அவன் கூறியதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? இன்று பௌர்ணமி ஆயிற்றே! ஒரு வேளை அந்த ஆவி உருவ மோகினி இன்றைக்கு இங்கு வருவாளோ? என் கண்ணுக்குக் கூடப் புலப்படுவாளோ?
ஒரு பக்கம் எனக்குப் பயமாயிருந்தது; இன்னொரு புறத்தில் உண்மையை அறியாமல் அவ்விடம் விட்டுப் போகவும் மனம் வரவில்லை.
"முக்கியமான விஷயம் நீர் சொல்லவில்லையே? சுனையில் விழுந்த மாலதி என்ன ஆனாள்? நீர் ஏழாவது ஜன்மம் எடுத்து வரும் வரையில் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?" என்று கேட்டேன்.
"ஓஹோ! அதை நான் சொல்லவில்லையே? இப்படித் தான் எனக்குச் சில சமயம் மனம் குழம்பிப் போகிறது," என்றான் குமாரஸ்வாமி. அப்புறம் அவன் சொன்னது முன்னே கூறியதெல்லாம் தூக்கி அடிப்பதாயிருந்தது. அப்படி நம்பத்தகாததாயிருந்தது. அதோடு கொஞ்சம் முன்பின் குழப்பமாகவும் இருந்தது. அவன் கூறியதை ஒழுங்கு படுத்தி நானே இங்கே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்:-
காளி கோயில் சுனையில் மாலதி விழுந்தால் அல்லவா? விழும்போதே அவளுக்கு ஞாபகம் தவறிவிட்டது. மறுபடி உணர்வு வந்த போது தன்னை காளித்தாய் தன் கரங்களில் ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்! 'குழந்தாய்! என்ன காரியம் செய்தாய்? நரபலி வாங்கிக் கொண்டேன் என்று என்னையல்லவா ஜனங்கள் நிந்திப்பார்கள்? இப்படிச் செய்யலாமா?' என்று காளிமாதா கூறியது அவள் காதில் விழுந்தது. மாலதி தான் இப்போது சூட்சும சரீரத்தில் இருப்பதையும் உணரவில்லை. முன் போலவே ஸ்தூல தேகங் கொண்டிருப்பதாகவும் காளித்தாய் தனக்கு மரணம் நேராமல் காப்பாற்றியதாகவும் எண்ணினாள். உடனே காளிமாதாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
'தாயே! ஒரு வரம் எனக்கு கொடுக்க வேண்டும். கொடுத்தால் தான் காலை விடுவேன்' என்று கதறினாள். தாயார் கொடுப்பதாக வாக்களித்து, 'என்ன வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'அம்மா, நான் சொல்ல வேண்டுமா? உனக்குத் தெரியாதா? நான் சுகுமாரனையே பதியாக அடைய வேண்டும். இந்த வரந்தான் எனக்கு வேண்டும்' என்று கோரினாள்.
அப்போது மாதா அவளுக்கு அவளுடைய உண்மை நிலைமையை உணர்த்தினாள். அவள் தேகத்தை இழந்து விட்டதையும் ஆவி ரூபத்தில் இருப்பதையும் தெரிவித்து, ஆகையால் இன்னொரு ஜன்மம் எடுத்துத் தான் சுகுமாரனைக் கணவனாக அடைய முடியுமென்று சொன்னாள்.
மாலதி மாதாவின் காலை விடவில்லை. 'மறு ஜன்மத்தில் எனக்கு ஞாபகம் இருப்பது என்ன நிச்சயம்? அதெல்லாம் முடியாது. இந்த ஜன்மத்தில் நான் இந்த நினைவோடேயே சுகுமாரனை அடைய வேண்டும்', என்று பிடிவாதம் பிடித்தாள். 'அப்படியானால், நீ முந்நூறு வருஷம் காத்திருக்க வேண்டும் அத்தனை நாளும் இந்த மலை பிரதேசத்தில் ஆவி ரூபத்தில் அலைய வேண்டும். ஒவ்வொரு விநாடியும் உனக்கு ஒரு யுகமாக இருக்கும். இதற்குச் சம்மதமா?' என்று காளி அம்மன் கேட்டாள். மாலதி 'எவ்வளவு யுகமானாலும் காத்திருப்பேன்' என்றாள். 'சரி' அப்படியானால் நீ கேட்கும் வரம் கொடுக்கிறேன்; இந்த ஞாபகத்துடனேயே நீ சுகுமாரனை அவனுடைய ஏழாவது ஜன்மத்தில் அடைவாய். ஒவ்வொரு ஜன்மத்திலும் அவன் இங்கு ஒரு முறை வருவான். நீ அவனைக் காண்பாய்; ஆனால் அவன் உன்னைக் காண மாட்டான். ஏழாவது ஜன்மத்தில் அவன் வரும் போது உன்னுடைய உருவம் அவனுடைய கண்ணுக்குப் புலப்படும். என்னுடைய சந்நிதியில் நீங்கள் கல்யாணம் செய்து கொள்வீர்கள்' என்று காளி மாதா வரங்கொடுத்தாள்.
மாலதி அன்று முதல் ஆவி உருவத்தில் செஞ்சிக் கோட்டையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கோட்டையில் நடந்த சகல விஷயங்களையும் அவள் பார்த்து வந்தாள். ஆனால் அவளை யாரும் பார்க்கவில்லை. காளி மாதா கூறியது போலவே அவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. நாளுக்கு நாள் சுகுமாரனிடம் அவள் கொண்டிருந்த பிரேமையின் தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. தேகம் இல்லாதபடியால் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை. புலம்ப முடியவில்லை. இம்மாதிரி வழிகளில் தாபத்தைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தாபமும் உள்ளத்துக்குள்ளேயே குமுறி வெடித்துக் கொண்டிருந்தது.
காளி மாதாவின் வாக்கின்படி, ஒவ்வொரு ஜன்மத்திலும் சுகுமாரன் ஒரு தடவை செஞ்சிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் மாலதி அநுபவித்த வேதனைக்கு அளவேயில்லை. அவனை இவள் ஒவ்வொரு தடவையும் தெரிந்து கொண்டாள். அவனுக்கு இவள் இருப்பதே தெரியவில்லை. ஆனால், அவனும் கூட அவ்விடம் வந்ததும் இன்னதென்று தெரியாத கிலேசத்தை அடைந்து ஒவ்வொரு முறையும் அவ்விடத்தை விட்டுப் போவதற்குத் தயங்கினான்.
கடைசியில், சுகுமாரன் இந்த ஏழாவது ஜன்மம் எடுத்து வந்தபோது தான் காளித்தாய் அருளிய வரத்தின் பிரகாரம் அவளுடைய மனோரதம் நிறைவேறிற்று. குமாரஸ்வாமியின் முன்னால் அவள் உருவம் பெற்று வரவும் அவனுடன் வார்த்தையாடவும் முடிந்தது. குமாரஸ்வாமிக்கும் அவள் சொன்னவுடனே அந்தப் பூர்வஜன்ம சம்பவங்கள் எல்லாம் ஒருவாறு ஞாபகத்திற்கு வந்தன.
"அவ்வளவுதான் கதை. உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா?" என்று சொல்லி எழுந்திருந்தான் குமாரஸ்வாமி.
நானும் எழுந்து நின்று, "நீர் வரவில்லையா? இங்கேயே இருக்கப் போகிறீரா?" என்று, கேட்டேன்.
குமாரஸ்வாமி ஆகாயத்தில் மேலே வந்து கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்தான். "இன்று பௌர்ணமி என்பது தெரியவில்லையா?"
இத்தனை நேரமும் என் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்வியை இப்போது கேட்டேன்.
"உம்முடைய மாலதி இப்போது வருவாள் என்று எதிர்பார்க்கிறீரா?"
குமாரஸ்வாமி சிரித்தான். "நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை போலிருக்கிறது?" என்றான்.
அந்தச் சமயத்தில், தூரத்தில் கிணு கிணு வென்னும் கால் சதங்கைச் சப்தமும், கைவளையல்கள் குலுங்கும் சப்தமும் கேட்டது. எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்தது. சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். சற்றுத் தூரத்தில், செடிகளின் மறைவில் ஒரு பெண் உருவம் காணப்பட்டது. தெரிந்த வரையில் மணப்பெண்ணைப் போல் அந்த உருவத்துக்குச் சிங்காரிக்கப்பட்டிருந்தது. குமாரஸ்வாமி இரண்டே பாய்ச்சலில் அந்தப் பக்கம் பாய்ந்து சென்றான்.
எனக்கு உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கிற்று. அதே சமயத்தில் சாலையில் மோட்டார் ஹாரனின் சப்தம் அலறியது. அது கொஞ்ச நேரமாய்ச் சப்தமிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். எனக்கு அப்போதுதான் காதில் விழுந்தது.
மோட்டார் ஹாரனின் சப்தம் வந்த திசையை நோக்கி நான் விரைவாக நடந்தேன். திரும்பிப் பார்க்கப் பயமாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் பயம் அதிகமாயிற்று. சற்று நேரத்துக்கெல்லாம் ஓடத் தொடங்கினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடிந்த கோட்டை - Idintha Kottai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாலதி, வேண்டும், அவன், அவள், நான், குமாரஸ்வாமி, ஒவ்வொரு, எனக்கு, என்ன, காளி, தான், ஏழாவது, சப்தம், ஜன்மத்தில், கேட்டேன், கொண்டிருந்த, முடியவில்லை, அடைய, மாதா, உருவம், மோட்டார், இப்போது, நீர், ஜன்மம், பக்கம், அவ்விடம், வந்த, அவளுக்கு, காளித்தாய்