தேவகியின் கணவன் - அத்தியாயம் 14
எனக்கு நாடகம், ஸினிமா என்றாலே அவ்வளவாகப்
பிடிப்பதில்லை. அதிலும் அன்றைக்கு என் மனோ நிலைமை நாடகம் பார்த்து ரஸிப்பதற்கு
அனுகூலமாக இல்லை. உண்மையாகவே காரியமும் கொஞ்சம் இருந்தது. அதை முடித்துவிட்டு
இரவு ஏழரை மணிக்குத் திரும்பவும் பொருட்காட்சி மைதானத்துக்குப் போனேன்.
நாடகம் இன்னும் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்க ஏராளமான கூட்டம்.
அத்தனை ஆயிரம் பேரும் நாடகப் பைத்தியம் பிடித்தவர்கள் என்ற எண்ணமே எனக்கு
வியப்பு அளித்தது. அந்தப் பெருங் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று நாடக
மேடையைக் கவனித்தேன்.
அச்சமயத்தில் நாடக மேடையிலும் ஒரு பைத்தியம் நின்று கொண்டிருந்தது! கோரமான முகத்துடனும் கோரணிகளுடனும் அந்தப் பைத்தியம் ஏதேதோ பயங்கரமாகக் கத்திக் கொண்டிருந்தது. அந்தக் கத்தலின் கோரமானது ஒலிபெருக்கியின் மூலம் வந்தபோது இன்னும் அதிக கோரமாய் ஒலித்தது. முதலில் சற்று நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் சற்றுப் புரிந்தது. நாடக மேடையில் ஒரு பாழடைந்த வீட்டில் நின்று அந்தப் பைத்தியக்காரன் சத்த மிட்டான். அந்த வீட்டில் ஒரு காலத்தில் வசித்திருந்த அவனுடைய மனைவி மக்களை எண்ணிப் புலம்புவதாகத் தோன்றியது.
தேவகியும் அவள் தகப்பனாரும் குழந்தைகளும் கூட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நாடக மேடைக்கு வெகு சமீபத்தில் அவர்கள் காணப்பட்டார்கள். கடவுளே! இவர்களுடைய புத்தியை என்னவென்று சொல்வது? வீட்டிலேயே ஒரு பைத்தியத்தை வைத்துக் கொண்டு இங்கே நாடகத்திலும் பைத்தியத்தைப் பார்க்க இவர்கள் வந்தார்களே? இந்த இலட்சணத்தில் எனக்குக்கூட "ரொம்ப நல்ல நாடகம்; பார்க்கத் தவற வேண்டாம்!" என்று எச்சரித்தார்களே! இவர்களுடைய கல் நெஞ்சையும் ராட்சத குணத்தையும் என்ன வென்று சொல்லுவது?
பிறகு நாடக மேடையில் நடந்த துரிதமான சம்பவங்கள் எனக்கு மேலும் மேலும் வியப்பை அளித்தன.
அந்தப் பைத்தியக்காரன் அந்தப் பாழும் வீட்டின் விட்டத்தில் ஒரு கயிற்றை மாட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ள முயன்றான். அப்போது விட்டம் திடீரென்று முறிந்து அவன் தலையில் விழுந்தது! அச்சமயம் யாரோ ஒரு ஸ்திரீ தலை தெறிக்க ஓடி வந்து கீழே கிடந்த பைத்தியக்காரனைக் கட்டிக் கொண்டு அழுதாள். இத்துடன் அக் காட்சி முடிவடைந்தது.
அடுத்த காட்சியில் அந்தப் பைத்தியக்காரன் ஒரு ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தான். அவனுக்குச் சுயப் பிரக்ஞை வரப் போகிறது என்று டாக்டர் சொன்னார். பிரக்ஞை வந்ததும் அவன் முன்போல் பைத்தியம் போல் கூச்சலிடாமல் சாவதானமாகப் பேசினான். அவன் அருகில் இருந்த ஸ்திரீ "இப்போது ஹைதராபாத்தில் ரஸாக்கியர் ஆட்சி இல்லை. நைஜாம் ராஜ்யம் சுதந்திர இந்தியாவோடு சேர்ந்து விட்டது!" என்று சொன்னாள். உடனே அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து உற்சாகமாகப் பேசினான். அவனும் அந்த ஸ்திரீயும் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவினார்கள்.
பிறகு நாடக மேடையில் இருபது முப்பது பேர் கூட்டமாய் நின்று,
"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!"
என்று பாடினார்கள். பிறகு திரை விழுந்தது. நாடகமும் முடிந்தது.
இதெல்லாம் என் மனதில் எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? தேவகி முதலியவர்கள் என்னிடம் சொன்னதற்கும் இந்த நாடக நிகழ்ச்சிகளுக்கும் இருந்த பொருத்தம் எப்படி ஏற்பட்டது? தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது... அல்லது...
யோசிக்க யோசிக்கக் குழப்பம் அதிகமேயாயிற்று. அந்தக் குழப்பத்துக்கிடையே தேவகியும் அவளுடைய குழந்தைகளும் நின்ற இடத்தைக் கண்டு பிடித்து அங்கே போய்ச் சேர்ந்தேன். நாடகம் பிரமாதம் என்பதாகச் சிலாகித்துப் பேசிக் கொண்டே அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து காரிலும் ஏறிக் கொண்டார்கள். என்னிடம் அவர்கள் அபிப்பிராயம் கேட்டபோது நானும் "நாடகம் நன்றாயிருந்தது!" என்று சொல்லி வைத்தேன். வீட்டுக்குப் போனதும் எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன்.
ஆனால் வீடுவந்து சேர்ந்து அவர்கள் எல்லாருடனும் நானும் உள்ளே போனதும் ஒன்றுமே கேட்க எனக்கு மனம் வரவில்லை. என்னத்தைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எது கேட்டாலும் அசட்டுப் பட்டம் எனக்கு வந்து சேரும் என்று தோன்றியது.
ஆகவே விடைபெற்றுக் கொண்டு போக எண்ணி, "நான் போய் வரட்டுமா?" என்றேன்.
"நன்றாயிருக்கிறது. அதற்குள்ளே போகிறதாவது? இவர்களுடைய அப்பா இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவரையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்!" என்றாள் தேவகி.
"இவர்களுடைய அப்பாவா? அது யார்?" என்று கேட்டேன்.
"இன்னும் உங்களுக்குத் தெரியவில்லையா, என்ன? தெரிந்துகொண்டு விட்டீர்கள் என்றல்லவா இருந்தேன்? இன்று நாடகத்தில் 'ஹீரோ'வாக நடித்தவர்தான்!" என்றாள் தேவகி.
"அப்படியா? முந்தாநாள் நான் கேட்டபோது ஏதோ ஹைதராபாத்தில் நடந்ததாகச் சொன்னாயே?"
"ஆமாம்; அதுவுந்தான் நாடகத்தில் வந்ததே! நான் சொன்னபடியே அவரைக் கறுப்பு முகமூடி அணிந்த ரஸாக்கர்கள் வந்து அழைத்துப் போனார்களே?" என்றாள் தேவகி.
"அப்படியானால் முந்தாநாள் இந்த வீட்டு மச்சுமேல் இருந்தவர்?..."
"அவரேதான்! முந்தாநாள் நீங்கள் வந்திருந்தபோது மச்சுமேல் கடைசி ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. வேஷம் கூடப் போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். அதனாலேதான் உங்களை இவரால் பார்த்துப் பேச முடியவில்லை. 'யாருக்கும் சொல்லக் கூடாது' என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்! நான் சொன்னதை யெல்லாம் நீங்கள் நிஜம் என்றே நினைத்துக் கொண்டீர்களா, என்ன?"
எனக்கு அளவில்லாத கோபம் வந்தது. பொய்யும் சொல்லிவிட்டு அதை நம்பியதற்காக என் பேரில் குற்றமும் அல்லவா சொல்கிறாள்? அழகாயிருக்கிறது காரியம்!
இந்தச் சமயத்தில், உள்ளே உடுப்பைக் கழற்றி வைப்பதற்காகப் போயிருந்த ஹெட்மாஸ்டர் வந்தார்.
"அப்பா! இவரிடம் முந்தாநாள் நீங்கள் உண்மையைச் சொல்லவில்லையா?" என்று தேவகி கேட்டாள்.
"சொல்லாமல் என்ன? முக்காலே மூன்று வீசம் உண்மையைத்தான் சொன்னேன். உன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னேன். இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்லையென்று யார் சொல்லுவார்கள்? இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அழகான நாடகத்தைப் போட உன்னுடைய புருஷனுக்குத் தோன்றியிருக்குமா!" என்றார் பத்மநாப ஐயங்கார்.
அவர் சொன்னபடி இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ, என்னமோ! ஆனால் இங்கு வந்ததின் பலன் என்னை இவர்கள் பைத்தியமாக அடித்து விட்டார்கள் என்பது நிச்சயம்! என்னுடைய இந்த அபிப்பிராயத்தை உறுதிப் படுத்துவதற்கு அப்போது இன்னொரு சம்பவம் நேர்ந்தது. வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது.
"அப்பா வந்துவிட்டார்!" என்று குழந்தைகள் குதித்தார்கள்.
ஆம்; அடுத்த நிமிஷம் அவர்களுடைய அப்பா வீட்டுக்குள் பிரவேசித்தார். அந்த அப்பா யார் என்று நினைக்கிறீர்கள்? பிரபல ஆயுர்வேத வைத்தியரான டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம். அவர்கள்தான்!
அன்று காலையில் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையில் அவனை விட்டுப் பிரிந்த போது ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றும் ஞாபகத்திற்கு வரவில்லையென்று சொன்னேன் அல்லவா? அது என்னவென்று இப்போது பளீர் என்று நினைவு வந்தது. அந்த வீட்டு ரேழியில் முந்தா நாள் என் காலில் தடுக்கிக் காயப்படுத்திய அதே சைக்கிள் தான் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையிலும் இருந்தது. அசோக சக்கரக்கொடி இரண்டிலும் இருந்தது என்பது இப்போது நினைவுக்கு வந்தது.
டாக்டர் சுந்தரம் என்னைப் பார்த்ததும், "ஹலோ! கிருஷ்ணசாமி! இந்த வீட்டுப் பக்கமே வராதே என்று சொன்னேனே, அதை உண்மையாக எடுத்துக் கொண்டு விடுவாயோ என்று பயந்து போனேன். நீ வந்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நாடகம் எப்படி இருந்தது? உனக்குப் பிடித்திருந்ததா?" என்று கேட்டான்.
நான் பதில் சொல்வதற்குள் குழந்தைகள் "ரொம்ப நன்றாயிருந்தது, அப்பா!" என்று கூச்சலிட்டார்கள்.
தேவகி சுந்தரத்தைப் பார்த்து, "போதும், போதும்! இந்த மாதிரி அசந்தர்ப்ப நாடகத்தை இனிமேல் நீங்கள் போடவே வேண்டாம். எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீங்கள் பைத்தியமாக நடித்தபோது உண்மையிலேயே உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எனக்குப் பயமாய்ப் போய்விட்டது. அப்புறம் யாரோ ஒரு தடியன் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து உங்களைப் 'பிராண நாதா!' என்று அழைத்தபோது எனக்குச் சகிக்கவேயில்லை. இந்த மாதிரி நாடகம் போடவில்லையென்று யார் அழுதார்கள்?" என்றாள்.
அப்போது சுந்தரம் தேவகியின் தகப்பனாரைப் பார்த்து, "பாருங்கள், மாமா! இந்த அழகான கதையைக் கற்பனை செய்து கொடுத்ததே இவள்! இப்போது என் பேரில் குற்றம் சொல்கிறாள்! இதற்கு நான் என்ன செய்கிறது?" என்றான்.
இந்தச் சமயத்தில் நான், "ஆமாம்; உன் மனைவிக்கு அந்த நாளிலிருந்தே இது வழக்கந்தானே? தான் செய்த காரியத்துக்குப் பழியைப் பிறர் தலையில் போடுவது?" என்றேன்.
சுந்தரம் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "ஓகோ! அந்த போர்ஜரி கடிதத்தைப் பற்றிச் சொல்கிறாயோ? அது தேவகி மட்டும் செய்ததில்லை; அவளும் நானும் சேர்ந்து யோசனை செய்து பண்ணிய காரியந்தான். அதை இன்னும் நீ மறக்கவில்லையா?" என்றான்.
"விஷயமே எனக்கு இப்போதுதானே தெரிந்தது? இனிமேல் மறந்துவிடவேண்டியதுதான்" என்றேன்.
ஹெட்மாஸ்டர் அப்போது, "சுந்தரம்! நியாயமாக நீயும் தேவகியும் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் என்னை ஏமாற்றியதாவது போகட்டும். தேவகிக்கு இஷ்டமில்லாத இடத்தில் கலியாணம் நிச்சயம் செய்தது என்னுடைய பிசகு. அதனால் நான் அடைந்த தொந்தரவுக்கு உங்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆனால் கிருஷ்ணசாமியின் பேரில் பழியைப் போட்டீர்களே? அது ரொம்ப அநியாயம்! எத்தனை வருஷமாகியும் அது இன்னும் அவன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது! நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால் உங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!" என்றார்.
"இதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை, ஸார்! யார் யாரை மன்னிக்கிறது?" என்றேன் நான். ஹெட்மாஸ்டரின் வார்த்தைகள் என்னை உருக்கிவிட்டன.
"ஆமாம், அப்பா! அவர் அப்படியெல்லாம் மனதில் ஒன்றை வைத்துக் கொள்கிறவர் அல்ல, அவருடைய நல்ல சுபாவம் அப்போதே நமக்குத் தெரியுமே?" என்றாள் தேவகி.
"மனதில் கோபம் வைத்துக் கொள்கிறவனாயிருந்தால் இன்றைக்கு இந்தச் சந்து வீட்டைத் தேடி வந்திருப்பானா? நான் அவ்வளவு அவனைப் பயமுறுத்தியிருந்துங்கூட!" என்றான் சுந்தரம்.
"சுந்தரம்! மற்ற எதைப்பற்றியும் எனக்குக் கோபம் இல்லை. ஆனால் தேவகியின் தொல்லையைப் பொறுக்காமல் அவளுடைய புருஷன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்று சொன்னாயே, அதை மட்டும் நான் மறக்க முடியாது!" என்றேன்.
"ஆம், அப்பா, கிருஷ்ணசாமி! உன்னிடம் சொன்னதை நிறைவேற்றலாம் என்றுதான் பார்த்தேன். தூக்குப் போட்டுக்கொள்ள முயன்ற போது விட்டம் முறிந்து என் தலையில் விழுந்தால் அதற்கு நான் என்னத்தைச் செய்கிறது? என் பேரில் வஞ்சனை இல்லை!" என்றான் சுந்தரம்.
"போதும் இந்தப் பேச்சு! முகத்தில் இன்னும் கொஞ்சம் பைத்தியக் களை இருக்கிறது! குழாயடிக்குச் சென்று முகத்தை நன்றாய் சோப்புப் போட்டுத் தேய்த்து அலம்பி விட்டு வாருங்கள்! அதற்குள் நான் இலையைப் போடுகிறேன்" என்றாள் தேவகி.
"இன்றைக்கு இந்த வீட்டில் சாப்பாடுகூட உண்டா? தளிகை யார் செய்தார்கள்!" என்றான் சுந்தரம்.
"நாடகத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே தளிகை செய்து வைத்து விட்டுத்தான் கிளம்பினேன். புளியோதரை செய்திருக்கிறேன். கிருஷ்ணசாமி! உங்களுக்குக் கூடப் புளியோதரை பிடிக்குமே? அம்மா செய்து போட்டால் ஆசையோடு சாப்பிடுவீர்களே!" என்றாள் தேவகி.
அப்போது தேவகியின் தாயார் ரங்கநாயகி அம்மாளைப்பற்றிய ஞாபகங்கள் என் மனதில் பொங்கி எழுந்தன. அடாடா! எத்தனை அன்பு! எவ்வளவு அபிமானம்! அந்த அம்மாள் கையினால் பாகம் செய்த புளியோதரை, திருக்கண்ணமுது முதலியவைகளை எவ்வளவு ஆசையோடு அந்த நாளில் சாப்பிட்டிருக்கிறேன்!
"எனக்குப் புளியோதரை பிடிக்கும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் இன்றைக்கு வேண்டாம். வீட்டுக்குப் போகவேண்டும்" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.
"அப்படியானால் இன்னொரு நாள் சாப்பிடுவதற்குக் கட்டாயம் வரவேண்டும்" என்றாள் தேவகி.
"ஆம், அப்பா! பழைய சிநேகத்தை மறந்து விடாதே! அடிக்கடி வந்து கொண்டிரு!" என்றான் சுந்தரம்.
அவனுடைய அழைப்பை ஹெட்மாஸ்டரும் ஆமோதித்தார். "கிருஷ்ணசாமி! இன்னொரு நாள் வந்தால் உனக்கு யோகாசனத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறேன்!" என்றார்.
"அவர் சொல்வது ஒன்றையும் நீ நம்பாதே! யோகாசனத்தின் மகிமையைப் பற்றி அவர் பிரமாதமாகப் பிரசங்கம் செய்வார். அவருடைய அலமாரியில் பார்த்தால் ஐந்தாறு வித லேகியம் வைத்திருப்பார். நீ ஒருநாள் என்னுடைய டிஸ்பென்ஸரிக்கு வா! ஆறு மாதம் சியவனப்பிராஸ லேகியத்தைச் சாப்பிட்டுப் பார்!" என்றான் சுந்தரம்.
"அவர் கிடக்கிறார்! நீங்கள் மருந்துக் கடைக்குப் போக வேண்டாம். இங்கே வாருங்கள்!" என்றாள் தேவகி.
குழந்தைகள், "சித்தியா! நாளைக்கு வந்து எங்களைக் காரில் ஏற்றிக் கொண்டு பீச்சுக்கு அழைத்துப் போங்கள்!" என்றன.
"ஆகட்டும்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
காரில் ஏறி உட்கார்ந்ததும், "இந்தச் சிந்தாதிரிப்பேட்டைப் பக்கமே இனிமேல் தலைகாட்டுவதில்லை!" என்று எண்ணிக்கொண்டேன்.
எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டிப் பைத்தியமாக அடித்து விட்டார்களே?
போனால் போகட்டும்! எப்படியாவது அவர்கள் சௌக்யமாக இருந்தால் சரி. தேவகியும் அவளுடைய கணவனும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதான் வேண்டியது. ஹெட்மாஸ்டரும் உற்சாகமாக இருக்கிறார். வேறு என்ன வேண்டும்?
வெள்ளிய நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பனியினால் உலகமே குளிர்ந்திருந்தது.
பழைய நினைவுகள் குமுறிக் கொண்டு வந்தன. கடைசியாக, இந்தச் சுந்தரமா தேவகியைக் கலியாணம் செய்து கொண்டான்? என்னையும் வைத்தியநாதனையும் அடிக்கடி சண்டை மூட்டி விட்டு இவன் பரம சாதுவைப் போல் நடித்தவன் அல்லவா? அந்த நடிப்புத் திறமைதான் இன்றைக்கு அவனிடம் பிரகாசிக்கிறது! பொல்லாத அமுக்கன்!
ஏதோ போகட்டும்! தேவகி தன் மனதுக்கொத்த புருஷனை மணந்து திருப்தியாக இருக்கிறாள் அல்லவா? அதுதான் வேண்டியது.
அன்று வரை நான் அறியாத மன நிம்மதியை அன்று கண்டேன்.
அந்த நிம்மதியைக் குலைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆகையினாலேயே சிந்தாதிரிப்பேட்டைக்கு அப்புறம் நான் போகவில்லை. இந்த வருஷத்துப் பொருட்காட்சிக்குக் கூடப் போகவில்லை.
தேவகியின் வாழ்க்கை இப்படியே நீடித்துச் சந்தோஷமாயிருக்கும்படி பெருமாள் அருள் புரியட்டும்.
கல்கி வார இதழ்
12-5-50 - 12-3-50
12-5-50 - 12-3-50
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 14 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், தேவகி, சுந்தரம், அந்த, எனக்கு, அப்பா, கொண்டு, என்றாள், நீங்கள், நாடகம், என்றான், வந்து, நாடக, இன்னும், என்ன, யார், அந்தப், அவன், டாக்டர், அப்போது, இந்தச், செய்து, அவர், மனதில், என்றேன், பைத்தியம், கொள்ள, கொண்டிருந்தது, இன்னொரு, அல்லவா, வந்தது, பேரில், நாள், இன்றைக்கு, புளியோதரை, இல்லை, தேவகியின், கிருஷ்ணசாமி, முந்தாநாள், நின்று, இவர்களுடைய, இப்போது, சேர்ந்து, ரொம்ப, தேவகியும், வேண்டாம், தலையில், பிறகு, அன்று, எவ்வளவு, குழந்தைகள், பற்றி, போதும், கேட்டுக், மன்னிப்புக், வைத்துக், போகட்டும், இனிமேல், பார்த்து, என்பது, கூடப், கோபம், நானும், அப்புறம், ஆமாம், மேடையில், பைத்தியக்காரன், என்னைப், சொன்னேன், பைத்தியமாக, வீட்டில், என்னை, அவளுடைய, பைத்தியக்கார, என்றார், என்னுடைய